விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமான நவம்பர் 27-ந் தேதியை ஒவ்வொரு வருடமும் மிகப்பிரமிப்புடன் உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கும். அன்றைய தினம் மக்கள் முன்பு தோன்றி, தங்களின் சமகால அரசியல் முன்னெடுப்புகள், எதிர்கால திட்டமிடல், இலங்கை சிங்கள அரசின் பேரினவாத கொடூரங்கள் என பல்வேறு அரசியல்களை வெளிப்படுத்துவார் விடுதலை புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன்.
பிரபாகரனின் மாவீரர் தின உரை ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழக தமிழர்கள் ஆகியோருக்கு தனித் தமிழீழ உணர்வுகளை ஏற்படுத்தும். அவரது உரையில் இடம்பிடிக்கும் நுண்ணிய அரசியலை அறிந்துகொள்வதற்காகவே உலக நாடுகள் தவம் கிடக்கும். 30 ஆண்டுகாலம் அது தான் நடந்துகொண்டி ருந்தது.
2009-ல் நடந்த முடிந்த இறுதி யுத்தத்திற்குப் பிறகு மாவீரர் நாளில் பிரபாகர னின் உரை வரவில்லை. இப்படியே 14 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், நான்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பெண், மாவீரர் தினமான கடந்த நவம்பர் 27-ந் தேதி பேசிய வீடியோ சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வீடியோவில் பேசிய பெண், "எத்தனையோ ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களை கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்பட்டிருக்கிறேன். அதேபோல், தமிழீழ தாயகம் திரும்பி எமது மக்களோடு பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தனித்து நின்று போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளை தன் பக் கம் வளைத்துக் கொண்டது. தோல்வி யின் விளிம்புகளில் இருந்த தருணங்களி லெல்லாம் அந்நிய சக்திகளிடம் மண்டி யிட்டு யாசகம் புரிந்தது சிங்கள அரசு. அதனால் உலகின் பல நாடுகளில் எமது இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழீழ தாயகத்திற்கான பாதைகள் மூடப்பட்டன.
எமது தேச சுதந்திர இயக்கம், சிங்கள படை இயந்திரத்தை பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படைகளுக்கு உயிரூட்டின. மக்களின் ஆதரவுடன் போராடிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க் காலில் மௌனித்ததற்கு இதுவே காரணம்.
ஆனாலும் எமது அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம் முற்றுப் பெறவில்லை. தமிழீழம் எனும் அரசியல் கரு உருவாவதற்கு காரணமான புறச் சூழல்கள் இன்றும் கூட அப்படியேத் தான் இருக்கின்றன. அனைத்து சுதந்திரமும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாக தமிழீழம் நிற்கிறது. சட்டத்தின் ஆட்சி மறுக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால சட்டம் எனும் பேயாட்சியை சிங்களம் திணித்துள்ளது. குரல் வளை நெறிக்கப் பட்ட மக்களாகவே ஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள்.
ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் என ஆசைவார்த்தையும் நம்பிக்கையும் கொடுத்த உலகின் சக்தி வாய்ந்த நாடுகள், இன்றைய வரைக்கும் அரசியல் தீர்வை வழங்கவில்லை; ஐ.நா. மன்றமும் எமது மக்களுக்கான பரிகாரத் தீர்வை பெற்றுத் தரவில்லை. இவைதான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும்.
இவ்வாறான எதார்த்த சூழ லில் மக்கள் என்றும், புலிகள் என்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த் தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும். தமிழீழ தேசத்திற்கு பக்கபலமாக திகழும் தாய்த்தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும் எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொடர்ந்து நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தமிழீழ தனியரசே எமது தேசத்தின் இறைமையையும் தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும். இதுவே எமது தேசிய தலைவரின் (பிரபாகரன்) நிலைப்பாடு என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தேசிய தலைவர் குறிப்பிட்டது போல, ’எமது பாதைகள் மாறலாம்; ஆனால், எமது லட்சியம் மாறாது’ என்கிற சத்தியத்தின் சாட்சியாக நின்று நமது லட்சியத்தை அடைந்தே தீருவோம்'”என்று துவாரகா எனும் பேரில் அந்த பெண்மணி உரை நிகழ்த்தியிருக்கிறார்.
இதுதான் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. உண்மையாகவே இவர்தான் பிரபாகரனின் மகளா? என்கிற விவாதங்கள் நடக்கின்றன. தமிழீழத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரனின் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு அப்போதே அறிவித்துவிட்ட நிலையில், நான் தான் பிரபாகரன் மகள் என மாவீரர் நாளில் தோன்றிய சம்பவத்தினை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன உலக நாடுகள். பிரபாகரன் மகள் விவகாரம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத் திலும் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடு மாறன். இந்த நிலையில் பிரபாகரன் மகள் தோன்றிய சம்பவத்தை பற்றிப் பேசிய நெடுமாறன், ”"பிரபாகரன் உள்ளிட்ட அவரது குடும்பமே அழிந்துவிட்டது என பத்திரிகைகள் எழுதின. இப்போது பிரபாகரனின் புதல்வி உலக மக்களிடம் பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். இதன் பொருள் என்ன? அவராக வந்து பேசியிருக்க மாட்டார். அவர் பேசியதன் பின்னணியில் பிரபா கரன் இருக்கிறார் என்பதுதான்''’என்கிறார் நெடுமாறன்.
மாவீரர் நாளில் பிரபாகரன் மகள் துவாரகா பேசுகிறார் என்கிற தகவலை பொதுவெளியில் முதன்முதலில் பகிர்ந்த தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன், "தேசிய தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அவரது மகள் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தால், பொய்யாக வருவதற்கு வாய்ப்பில்லை. பொய் சொன்னால் தமிழினம் அமைதியாக இருந்து விடாது. பொய்யும் அம்பலமாகிவிடும். அதனால், உண்மையாக இருந்தால் தான் தன்னை பிரபாகரனின் மகள் எனச் சொல்லும் துணிச்சல் வரும். ஒருவர் வந்திருக்கிறார். அதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, வரும்போதே அழித்துவிடக்கூடாது. தேசிய தலைவரின் குடும்ப உறவுகளிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். துவாரகா பேசவிருப்பதை அவர்கள் மூலமாக அறிந்தே இதனை வெளிப்படுத்தினேன். துவாரகாதான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை''’என்கிறார் கௌதமன்.
இதே நம்பிக்கையும் கருத்துக்களும் தான் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்கள் பலரிடமும் எதிரொலிக்கின்றன. பிரபாகரன் மகள் என்று சொல்லிக்கொண்டு யாரோ ஒரு பெண்மணி பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. அப்படி செய்தால் அதன் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும். அதனால் பொய் முகத்தோடு எந்த பெண்மணியும் வரமாட்டார்கள் என்பதே ஈழ ஆதரவு தமிழகத் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.
துவாரகா எனும் பேரில் வந்துள்ள அந்த பெண், மாவீரர் நாளில் உரை நிகழ்த்தவிருக்கிறேன் என்று தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்கள் பலரிடமும் சில வாரங்களுக்கு முன்பே கதைத் திருக்கிறார். அவர்களும் அதனை ஆமோதித்த துடன் தைரியமாக பேசுங்கள் எனச் சொல்லியுள்ளனர் என்கிற தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன.
ஆனால், இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் தலைவர்களோ, பிரபாகரன் மகள் என தோன்றிய பெண்ணை துவாரகாவாக ஏற்பதில் சந்தேகம் கொள்கின்றனர். அவர்களிடம் நாம் பேசியபோது, "துவாரகா எனும் பெயரில் பேசிய அந்த பெண், செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ்) தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெண்மணி என சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. ஏனெனில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உருவத்தை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், மாவீரர்நாளில் பேசிய அந்த பெண்ணின் பேச்சு, அதன் மொழி நடை, உச்சரித்த பாங்கு, முக அசைவு ஆகியவைகளில் கொஞ்சம் சந்தேகம் இருப்பதால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் உண்மைத் தன்மையையும் பின்னணிகளையும் பல்வேறு தரப்புகளில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்''” என்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தினரும் பிரபாகரன் மகள்தானா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். பிரபாகரன் குடும்பமே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அப்போதே இலங்கை அரசு சொல்லியிருக்கும் நிலையில், தற்போது வெளிவந்துள்ள துவாரகா உரையின் வீடியோவை பொய் எனச் சொல்லவில்லை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம். மாறாக, அமைச்சகத்தின் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், "அந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்தி யிருக்கிறோம். ஆராய்ந்தும் வருகிறோம்''’என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இலங்கை அரசு மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் பிரபாகரனின் மகள் துவாரகாவை கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.