ஆட்டுக்கு தாடி போலத்தான் கவர்னர் பதவி என்பது இது. அறிஞர் அண்ணா சொன்ன உவமை. அதை உரக்கச் சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலரான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு.
""இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 239ஏஏ என்கிற பிரிவின் அடிப்படையில் அமைந்துள்ளது டெல்லி. அதன் பாதுகாப்புக்குத் தேவையான காவல்துறை, டெல்லியில் நிலத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் துணைநிலை ஆளுநரிடம் உள்ளது. அரசியல் சாசன சட்டம் 239 ஏ-ன்படி அமைக்கப்பட்ட புதுச்சேரி (பாண்டிச்சேரி) போன்ற மாநிலமல்ல, டெல்லி. பாண்டிச்சேரியில் சட்டசபைக்கு உறுப்பினர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரமுண்டு. ஆனால் டெல்லியில் சட்டசபைக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எனவே டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வேண்டும்.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைத்துள்ள அரசின் செயல்பாடுகள் மத்திய அரசாலும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயல்படும் லெப்டினண்ட் கவர்னர் அனில் பைஜால் ஆகியோரது செயல்பாடுகளினால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகின்றன. கவர்னரிடம் எந்த பைலை அனுப்பினாலும் அதை அவர் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பிவிடுகிறார். ஜனாதிபதியிடம் இருந்து வேகமாக பைல்கள் வருவதில்லை. இதனால் டெல்லி நகரின் வளர்ச்சிப் பணிகள் அப்படியே நின்றுவிடுகின்றன.
லெப்டினண்ட் கவர்னர் ஒரு பெரிய பாறாங்கல்லைப் போல தடுத்து வருகிறார். கையும் களவுமாக லஞ்சம் பெறும் ஒரு அரசு அதிகாரிமேல் வழக்குத் தொடர உத்தரவிட முதல்வருக்கு அதிகாரமில்லை. அதற்காக உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரிடம் மன்றாட வேண்டியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜக்ரி எனப்படும் சேரிப் பகுதிகளில் நிலங்கள் தொடர்பாக எந்த வேலையும் செய்ய முடியவில்லை. எனவே டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குங்கள்'' என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து "லெப்டினண்ட் கவர்னருக்குத்தான் அதிகாரம்' என தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் அப்பீல் செய்தார் கெஜ்ரிவால்.
இந்த அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தொடங்கி கன்வில்க்கர், ஏ.கே.சிக்ரி, டி.ஒய்.சந்திரசூட் அசோக் பூஷன் என 5 நீதிபதிகளும் ""டெல்லி முழுமையான மாநில அந்தஸ்து பெற்ற மாநிலம்'' என அறிவிக்க வேண்டும் என்கிற கெஜ்ரிவாலின் கருத்தை நிராகரித்தார்கள். அரசியல் சாசன சட்டப்படி டெல்லியின் சட்டம்-ஒழுங்கு, நிலம் தொடர்பான விஷயங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதனால் ஆளுநருக்கு குறிப்பிட்ட அளவு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அமைச்சரவையை விட உயர்ந்தவர் இல்லை. அவருக்கு தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. அமைச்சரவை உதவி மற்றும் ஆலோசனைக்கு உகந்த வகையில் தான் செயல்பட வேண்டும். துணைநிலை ஆளுநர் என்ற வகையில் அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆளுநர் என்பவர் பெயரளவில் தலைவர் அவ்வளவுதான்'' என தெளிவாக தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பின் அரசியல் விளைவு டெல்லியைத் தாண்டி முதலில் எதிரொலித்த மாநிலம் பாண்டிச்சேரிதான். பாண்டிச்சேரி கவர்னர் கிரண்பேடி தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் கூட ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அதிகாரிகள் சட்டசபை நடைபெறும் நேரத்தில் கூட சட்டமன்றத்தில் இருக்காமல் கவர்னர் பேடியுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததனால் சட்டசபை கூட்டமே நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்ததும் "இது பாண்டிச்சேரிக்கு பொருந்தாது' என அவசர அவசரமாக அறிவித்தார் கவர்னர் கிரண்பேடி. "இது நிச்சயம் பொருந்தக்கூடிய தீர்ப்பு' என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி.
இதுபற்றி நம்மிடம் பேசிய மத்திய அரசுக்காக பல வழக்குகளில் வாதாடிய சீனியர் வழக்கறிஞர் வில்சன், ""சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ஒரு தீர்ப்பு அளிக்கிறது என்றால் அது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பொருந்தும். இந்திய அரசியல் சாசனம் செக்ஷன் 141-ல் தெளிவாக சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்களை வரையறுத்துள்ளது. அதன்படி இந்தத் தீர்ப்பு பாண்டிச்சேரிக்கும் பொருந்தும். நபம்ரபியா என்கிற அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ. அந்த மாநில கவர்னர் சட்டமன்றத்தை வழக்கத்துக்கு மாறாக கூட்ட முயற்சித்தபோது அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் கவர்னரின் அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை மீறி இருக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
13.07.2016-ல் வெளியான அந்தத் தீர்ப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக 2018-ல் மேலும் ஒரு தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு துணைநிலை ஆளுநர்கள் விவகாரத்தில் அளித்துள்ளது. நபம்ரபியா வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடத்தும் ஆய்வுக் கூட்டங்கள் சட்டவிரோதமானவை. ஆய்வுக் கூட்டங்களை கவர்னர் நடத்தக்கூடாது என மாநில அரசு அறிவித்தாலே கவர்னர் தனது ஆய்வுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் புரோகித் அதற்கு எதிராக போராடுபவர்களை ஏழு வருடம் உள்ளே தள்ளுவேன் என மிரட்டுகிறார். இதையெல்லாம் சட்டரீதியாக கேள்வி கேட்டால் கவர்னர் மூக்குடைபடுவார் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபிக்கிறது'' என்கிறார். அரசியல் சட்டம் வழங்காதவற்றை செயல்படுத்தும் கவர்னரின் அதிகாரம் பறிபோகிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
ஏற்கனவே புதுவை கவர்னரை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புதிய தீர்ப்பை பார்த்து அலறிப் போன தமிழக கவர்னர் மாளிகை, கவர்னர் புரோகித்தின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது என சட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
-தாமோதரன் பிரகாஷ்
______________________
ஒழுங்கில்லாத ஒழுங்காற்றுக் குழு!
காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தொடர்ந்து ஜூலை 5-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடந்தது. அதில், "மாநிலங்கள் சமர்ப்பித்த அணைகளின் கொள்ளளவு நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள் சரியாக இல்லை. அதை மேலும் விஞ்ஞான ரீதியாக பெற வேண்டும்' என பேசப்பட்டதோடு முடிவடைந்தது. கர்நாடக அரசியல் சூழலுக்கு பயந்து, தமிழகத்திற்கு இம்மாதம் தர வேண்டிய 31 டி.எம்.சி. குறித்து எந்த பேச்சும் எழவில்லை.