'கட்சிக்காரர்களுக்குக் கல்தா. கிரிமினல்களுக்குப் பதவி. கொந்தளிக்கும் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.' என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் 7-9 நாளிட்ட நக்கீரனில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மா.செ. சண்முகநாதன், தூத்துக்குடி நகரின் 60 வார்டுகளில் 42 கி.க.செ.க்களைத் தூக்கிவிட்டு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் கூட அந்தப் பொறுப்புகளை வழங்கியதையும் 16 அணிப் பொறுப்பாளர்களில் 15 புதிய அணிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதில் பொறுப்புக்களை தனது மா.செ. வட்டத்திற்குள் வருகிற தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகியப் பகுதிகளுக்கு பரவலாக்காமல் குறிப்பிட்ட பகுதிக்கே வழங்கியிருக்கிறார் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் 12 அணிப் பொறுப்பாளர்கள் தூத்துக்குடியிலிருப்பவர்களே. இதில் குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கும் பதவி கொடுக்கப்பட்டிருப்பதையும், இதனால் அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்கள் பலர் பதவிப் பறிக்கபட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருப்பதை அந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தோம். அது, மாவட்டம் முழுமையிலும் கட்சி மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி தலைமைக்கழகத்தில் நேரடியாகவே புகார் கொடுத்தனர் நகர அ.தி.மு.க.வினர். அடுத்து நெல்லை மாவட்டத்திற்கு கொரோனா ஆய்வுக்கு வந்த முதல்வர் எடப்பாடியாரிடமும் புகார் கொடுத்திருக்கிறார் கள். அப்படியும் முடியாமல் போகவே, ராமநாதபுரம் ஆய்வுக் கூட்டத்திற்கு வந்த எடப்பாடியாரை வழிமறித்து எக்ஸ் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டி யன் தலைமையிலும் கூட்டமாகப் போய் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்தே தூத்துக்குடி மாவட்ட உட்கட்சி விவகாரத்தைப் பேசித் தீர்ப்பதற்காக கே.பி.முனுசாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில் 6 சட்டமன்றங்களைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மா.செ.வாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்கு மா.செ.வாக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன் என இருவரது பொறுப்பிலும் தலா மூன்று தொகுதிகள் வீதம் உள்ளன. அதில் சண்முகநாதனிடமிருந்து தூத்துக்குடி, அமைச்சர் கடம்பூர் ராஜின் பொறுப்பிலிருந்து ஒட்டப் பிடாரம் இரண்டையும் எடுத்து புதிய கட்சி மாவட்டமாக்கி, அதனை புதிய மா.செ. பொறுப்பில் கொடுத்துவிடுவது என்று முடிவாகியிருக்கிறதாம்.
இதையறிந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ""தூத்துக்குடியை வேண்டுமானால் கொடுங்கள். என்னிடமிருந்து ஒட்டப்பிடாரத்தை எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்'' என்று ஆவேசப் பட்டிருக்கிறாராம். தூத்துக்குடி ஆய்வுக்காக எடப்பாடியார் இரண்டுமுறை தேதி கொடுத்தும் ரத்தானதால், மூன்றாவது தடவையாக ஆய்வுத் தேதி கொடுக்கப்பட்டு அங்கு செல்வதற்கு முன்பாக தூத்துக்குடியின் உட்கட்சி விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளையும், கட்சியினரையும் சமாதனப்படுத்தியாக வேண்டும் என்று விசாரணைக் குழுவினர் நடந்தவைகளை எடப்பாடியாரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்கள். இதையடுத்தே, திட்டமிட்டபடி, இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கொரோனா ஆய்வுக்காக நவ 11-ந் தேதி அங்கு வந்த எடப்பாடி, ஆய்வை முடித்து விட்டுக் கிளம்பும் போது, அவரைச் சந்தித்த கட்சிப் பொறுப்பாளர்கள். கட்சியின் முக்கியப் புள்ளிகளிடம் ""விரைவில் தூத்துக்குடியைக் கொண்ட புதிய கட்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மா.செ. அறிவிக்கப்படுவார்'' என்று சொல்லி நகர கட்சியினரின் விவகாரத்தை முடித்து வைத்திருக்கிறார். "பதவி பறிக்கப்பட்ட முன்னோடி கி.க.செக்களின் பொறுப்புகள் அவரவர்களுக்குத் திரும்பத் தரப்படும்' என்று சொல்லப்பட்டு விவகாரத்திற்கு ஃபுல் ஸ்டாப் விழுந்திருக்கிறது.
இந்தச் சம்பவங்களுக்கு முன்பு வடக்கு மா.செ.வான அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும், தெற்கு மா.செ.வான சண்முகநாதனுக்குமான கர்....புர்... எடப்பாடி பழனிசாமியின் தூத்துக்குடி ஆய்வின்போது, வெளிப்பட்டு விட்டது. எடப்பாடிக்காக சண்முக நாதனும் அவர் தரப்பினரும் வைத்த ப்ளக்ஸ் போர்டுகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் படத்தை ஸ்டாம்ப் சைசிற்கு வைத்தது, அமைச்சரைக் கடுப் பாக்கிவிட்டது.
ஆய்வை முடித்து எடப் பாடியார் தன்னுடைய கோவில்பட்டித் தொகுதிப் பக்கம் வரும்போது, அவரை வரவேற்று வைக்கிற ப்ளக்சில் இடம்பெற்ற சண்முகநாதனின் ப்ளக்ஸ்களை விரைவாக அகற்றச் சொல்ல அதன்படியே செய்திருக்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்.
வருடம்தோறும் தீபாவளிப் பண்டிகையின் போது தன்னுடைய தொகுதியின் அனைத்துக் கிளைக்கழகச் செயலாளர்களுக்கும் சுவீட், காரம், வேட்டி, சட்டை என்று அன்பளிப்பு கொடுத்து வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்த வருட தேர்தலை மனதில் கொண்டு இந்தத் தீபாவளியில் இனிப்பு, காரம், வேட்டி, சட்டை, துணி களோடு ஸ்பெஷலாக எம்.ஜி.ஆர், ஜெ, இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். இவர்களின் படங்களோடு தூத்துக்குடியின் எக்ஸ் அமைச்சரான சி.த. செல்லப்பாண்டியனின் படத்தையும் கொண்ட வால்கிளாக் ஒன்றும் அன்பளிப்பாகச் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் பிரிக் கப்படவிருக்கிற தொகுதிகளின் மா.செ. பொறுப்பு சி.த.செல்லப் பாண்டியனுக்கு தரப்பட விருக்கிறதா என்பது தூத்துக்குடி அ.தி.மு.க. ஏரியாவில் ஹாட் டாபிக்காகிவிட்டது.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்