பல்கலைக்கழகங்கள் கல்வியின் பிறப்பிடமாகத் திகழ்வதற்குப் பதில், சர்ச்சைகளின் பிறப்பிடமாக மாறிவருகின்றன. பணிநியமன ஊழல், துணைவேந்தர் நியமனம், பாலியல் சர்ச்சை என பல்கலைக்கழகங்களின் மீதான குற்றச்சாட்டுப் பட்டியல் நீண்டபடியே வருகிறது. துணைவேந்தர் நியமனத்தால் சர்ச்சைக்கிடமான பெரியார் பல்கலைக்கழகம், தணிக்கை அறிக்கை வெளியீட்டால் மீண்டும் சர்ச்சைக்காளாகியுள்ளது.
அண்மையில் பெரியார் பல்கலையில் நடந்த தணிக்கையில் 2015-16 வரையில் ரூ 47,44,16,267 ரூபாய்க்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ரவி தலைமையிலான தணிக்கைக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். அறிக்கையில் ஒட்டுமொத்தமாக 691 தணிக்கைத் தடைகள் சொல்லப்பட்டுள்ளன. இறுதியாக தணிக்கை நடந்த காலகட்டத்தில் மட்டும் ரூ 1.74 கோடிக்கான ஆவணங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.
கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் அதிகபட்சமாக ரூ 13.18 கோடியை செலவழித்ததற்கான பில்கள், வவுச்சர்கள், இதர ரசீதுகள் கேட்டும் தணிக்கையின்போது சமர்ப்பிக்கப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை. நிதி முறைகேடு மட்டுமின்றி உபரி பணிநியமனங்கள், விதிகளைமீறி ஆசிரியர் பணிநியமனம் குறித்தும் பல்வேறு கேள்விகள் இவ்வறிக்கையால் எழுப்பப்பட்டுள்ளன.
மைக்ரோபயாலஜி துறைத்தலைவராக இருக்கும் பேராசிரியர் பாலகுருநாதன், கடந்த 2009, ஜனவரி 9-ல் பெரியார் பல்கலையில் பணியில் சேர்ந்தார். ஆனால் மரைன் பயாலஜி முடித்த ஒருவர் எந்த விதிகளின்கீழ் மைக்ரோபயாலஜி துறையில் நியமிக்கப்பட்டாரென கேட்ட தணிக்கைக் குழுவினர், மைக்ரோ பயாலஜி துறையும் மரைன் பயாலஜி துறையும் ஒன்றுதான் என்பதற்கோ சமமானது என்பதற்கோ எந்தவித சான்றுகளும் தரப்படவில்லை என்கின்றனர். இந்த நியமனம் பற்றி 2014-15 தணிக்கையின்போதே சுட்டிக்காட்டியதையும் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜனகம், 20-6-2005-ல் பணியில் சேர்ந்தார். இதற்கான விளம்பர அறிவிக்கை வந்த 2005, ஏப்ரல் 11-ன் படி அவர் எம்.ஃபில் படிப்பையோ பி.எச்.டி. அல்லது செட்- ஸ்லெட்- நெட் தகுதியையோ பெற்றிருக்கவில்லை. அவருடைய பணிநியமனம் தவறானது என்கிறது தணிக்கை அறிக்கை.
மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் எம்.சூரியகுமாரும், பணியை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில் உதவிப் பேராசிரியருக்கான எந்தவொரு கல்வித்தகுதியையும் நிறைவு செய்திருக்கவில்லை. மேலும் எம்.ஃபில் முடித்த இரண்டு ஆண்டுக்குள் பி.எச்டி. முடித்ததாக சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளார். இந்தியாவில் இத்தனை குறைந்த காலத்தில் பி.எச்டி. படிப்பை நிறைவுசெய்ய முடியாதென சுட்டிக்காட்டுகிறது தணிக்கைக் குழு.
விதிகளுக்குப் புறம்பாக மேட்டூரில் இயங்கும் பெரியார் பல்கலை உறுப்புக் கல்லூரிக்கு மருதமுத்து முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். சாதாரண உதவிப்பேராசிரியராக பணியாற்றி வந்தவரை, கல்லூரி முதல்வராக்கியுள்ளதாக காட்டமாக தணிக்கைக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். பெரியார் பல்கலையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட உபரியாக 70 உதவிப் பேராசிரியர், 17 பேராசிரியர் உள்பட 104 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆசிரியரல்லாத பணியிடங்களில் 30 பேர் உபரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தணிக்கைக் குழு சுட்டிக்காட்டும் மீறல்கள் குறித்து பெரியார் பல்கலை பதிவாளர் மணிவண்ணனிடம் கேட்டபோது, ""பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. எந்தவொரு பணியிடம் நிரப்பப்படுவதாக இருந்தாலும் பல்கலை விதிகளின்படியும் சிண்டிகேட் ஒப்புதலுடனுமே நிரப்பப்படும். பேராசிரியர் பாலகுருநாதன் நியமனத்தின்போதே, ஆளுநர் அலுவலகத்தில் பாடப்பிரிவு சமானம் குறித்து விளக்கம் பெற்ற பிறகுதான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ள 47.44 கோடி தணிக்கைத் தடைகளுக்கு உரிய ஆதாரங்களுடன் தணிக்கை அலுவலர்களுடனான அமர்வில் விளக்கமளித்திருக்கிறோம். இன்னும் பல தணிக்கைத் தடைகளுக்கு விளக்கமளிக்க தயாராக உள்ளோம்''’என்கிறார்.
-இளையராஜா