தேர்தல் களத்திற்கு மெல்ல மெல்லத் தயாராகி வருகின்றன அரசியல் கட்சிகள். நாகையில் இருந்து பிரிந்து, புதிதாகப் பிறந்திருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அதி.மு.க. மா.செ. பதவியைப் பெற பலரும் முண்டியடித்து வந்தனர். இதுவரை ஒருங்கிணைந்த நாகை மா.செ.வாக இருந்த சிட்டிங் அமைச்சர் ஓ.எஸ். மணியனை தொடர்ந்து, எதிர்த்துவரும் பூம்புகார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜ், மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாகப் பிரியுங்கள் என்று போராடிக்கொண்டிருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் பிறந்ததும், அதற்கான சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், அ.தி.மு.க மா.செ.பதவிக்கு, பவுன்ராஜோடு பலரும் முண்டியடித்தனர். எக்ஸ். எம்.எல்.ஏ.க்களான ராதாகிருஷ்ணன், ரெங்கநாதன், விஜயபாலன், மற்றும் மயிலாடுதுறை முன்னாள் ஒன்றிய சேர்மனும் ஒ.செ.வுமான சந்தோஷ்குமார் என பலரும் வரிந்து கட்டி வந்தனர். மேலும் மயிலாடு துறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளும் இப்போது, அ.தி.மு.க வசம் இருக்கும் நிலையில், அந்தத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களும் மா.செ. பொறுப்பைக் குறிவைத்திருந்தனர். இந்த நிலையில், நகரம் வி.ஜி.கே. செந்தில்நாதனை மா.செ.வாக அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. மாவட்டத்திற்குள் இது பரவலான முனுமுனுப்பையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
தி.மு.க.விலோ, மயிலாடுதுறை மாவட்டம் வருவதற்கு முன்பிலிருந்தே நாகை மாவட்டத்தை வடக்கு, தெற்காகப் பிரித்து தெற்கின் பொறுப்பாளராக கௌதமனும், மயிலாடுதுறையை உள்ளடக்கிய வடக்கின் பொறுப்பாளராக நிவேதா முருகனும் இருந்து வருகின்றனர். பா.ஜ.க.வுக்கு சென்ற வேதாரண்யம் தி.மு.க. எக்ஸ் எம்.எல்.ஏ வேதரத்தினம், அந்தக் கட்சியின் நாகை மாவட்ட பொருப்பாளரான திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் அமிர்த விஜயக்குமார் உள்ளிட்ட ஒரு பெரும்பட்டாளமே, ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தி.மு.க.வில் ஐக்கியமாகியுள்ளனர். வேதரத்தினத்தின் தி.மு.க எண்ட்ரி, வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்குப் பின்னடைவை உண்டாக்கும் என்கிறார்கள் பலரும்.
இது குறித்து விசாரித்த போது... ’""வேதரத்தினத்திற்கு என தனிப்பட்ட செல்வாக்கு இருப்பது உண்மை, அதை அவர் பல வகையிலும் அறுவடை செய்திருக்கிறார் என்பதும் உண்மை. அப்படிப்பட்டவர், தன் ஆதரவாளர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். தி.மு.க.வில் 12 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் அவர். 2011-ல் சட்டமன்றத் தேர்தலின் போது, தொகுதி கூட்டணியில் இருந்த பா.ம.க.வுக்குக் கைமாறியதால் திமு.க.வுக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்து, அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வழி வகுத்து, பின்னர் பா.ஜ.கவுக்குப் போனார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான என்.வி.காமராஜ், இப்போது தி.மு.க.வில் இருக்கிறார்.
அதே நேரம், 2021-ல் தி.மு.க.வில் தனக்கு சீட்டு கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ என்.வி.காமராஜ், மா.மீனாட்சிசுந்தரத்தின் மகன் புகழேந்தி, வாய்மேடு பழனியப்பன் என பலரும் காத்திருக்கிறார்கள். ஆனாலும் தி.மு.கவுக்கு வேதரத்தினத்தின் வருகை, அ.தி.மு.க. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தரப்பை யோசிக்க வைத்திருக்கிறது. அவர், கஜா புயலில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்யும் விதமாக பாலங்கள் அமைப்பது, சாலைகள் அமைப்பது, பூங்காக்கள் அமைப்பது, கல்லூரிகள் கொண்டுவருவது, மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தது என அதிரடியாக வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்'' என நடுநிலையாளர்கள் சிலர் ஏரியாவின் சாதக பாதகங்களை நம்மிடம் எடுத்துவைத்தார்கள்.
மயிலாடுதுறையின் புதிய மா.செ. நியமனம் குறித்து, அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களிடம் நாம் கேட்டபோது... ""வி,ஜி.கே செந்தில்நாதன் இளம் வயதில் வழுவூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். ஊராட்சியில் இருந்த அவரை கடந்த முறை அமைச்சராக இருந்த ஜெயபால், மயிலாடுதுறை நகரத்திற்கு கொண்டுவந்து ந.செ.வாக்கினார். அப்போதே கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் எதிர்ப்பவர்களை மிரட்டியே தனக்கு வளைய வைத்தார் செந்தில்நாதன். அவர் தம்பி மணி, பாமகவில் காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். குருவின் மறைவுக்குப் பிறகு அவர் பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். போட்டியில் தீவிரம் காட்டவில்லை. அதே நேரம் கட்சியாகப் பார்த்து பொறுப்பைக் கொடுத்தால் அதை மறுப்பதற்கும் இல்லை என்ற நிலையிலேயே பயணிக்கிறார்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலுக்கும், சிட்டிங் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கும் கடந்த 10 ஆண்டுகளாகவே பனிப்போர் நடக்கிறது. இதில் ஓ.எஸ்.மணியனை ஓரங்கட்டவும், எம்.எல்.ஏ பவுன்ராஜை எதிர்த்து அரசியல் செய்யவும் தனக்கு ஆதரவாக இருந்துவரும் செந்தில்நாதனை மா.செ.வாக ஆக்கியிருக்கிறார் ஜெயபால். இந்த ஜெயபால் தீவிர ஓ.பி.எஸ். மற்றும் கே.பி. முனுசாமி ஆதரவாளர். அவர்களை வைத்து மா.செ. பொறுப்பை செந்திலுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். மா.செ. பொறுப்பை சீனியர்களான விஜயபாலன், வைத்தீஸ்வரன்கோயில் செல்லையன், ரெங்கநாதன் உள்ளிட்டவர்களுக்குக் கொடுத்திருந்தால் பொருந்தமாக இருந்திருக்கும்'' என்கிறார்கள் அழுத்தமான குரலில்.
அரசியல் காய் நகர்த்தல்களால் புதிய மாவட்டமான மயிலாடுதுறை பரபரத்துக்கொண்டிருக்கிறது.
-க.செல்வகுமார்