அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னச்சாமி, அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலராக இருந்தபோது 8 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க. தலைமையால் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சின்னச்சாமி டி.டி.வி. தினகரன் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். தற்போது வரையிலும் அந்த வழக்கு விசாரணையிலிருந்தும், அன்றிருந்த சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் அவரை அ.தி.மு.க.வில் இணைக்கும் வேலைகளில் வேகம்காட்டப்பட்டு வருகிறதாம்.
செயலாளர் ஆர்.சின்னசாமி, தலைவர் தாடி ம.ராசு ஆகியோர் தலைமையில் அண்ணா தொழிற்சங்கம், நீண்ட நாட்களாகவே இரு அணிகளாகச் செயல்பட்டு வந்துள்ளது. கடந்த ஆட்சியின்போது 2018-ல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அதில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பெரும்பாலோர் கலந்துகொண்டார்கள்.
"ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான நாமே போராட்டத்தில் கலந்துகொண்டால் நன்றாக இருக்காது. நமது தொழிற்சங்கத் தினரிடம் பேசி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தவேண்டும்'' என்று தாடிராசு தெரிவிக்க, அதனை சின்னசாமி பொருட்படுத்தவே இல்லை. இதனால் இன்னொரு அணி, சின்னசாமி மீது பெரிய புகார் பட்டியலை தயாரித்து மேலிடத்துக்கு அளித்தது. அதன்பேரில் அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்தது. சின்னசாமி நியமனத்தால் தன் கைவசமிருந்த பொறுப்பு கைநழுவியதில் கடுப்பிலிருந்த ஜக்கையன், ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் தவமிருக்கும் கொக்கைப் போல, தாடிராசுவை தன் கைவசப்படுத்தி, சின்னசாமி செய்த ஊழல்களின் லிஸ்ட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். இதன்மூலம் சின்னசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதானார்.
ஜாமீனில் வெளிவந்த சின்னசாமி, தனது கைதுக்கு எதிர்வினையாக, டி.டி.வி. தினகரன் கட்சியில் இணைந்தார். பதிலுக்கு அவரைக் கட்சியை விட்டு அ.தி.மு.க. தலைமை நீக்கியது. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற் சங்கத்தின் ஒருங்கிணைப்பாள ராக மீண்டும் ஜக்கையனை நியமித்திருந்த நிலையில், அவரும் டி.டி.வி. கட்சிக் குத் தாவியதால் அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை நியமித்தது. அவருக்குப் பின் தற்போதுவரை கமலக்கண்ணன் அந்தப் பொறுப்பில் இருந்துவருகிறார்.
அ.ம.மு.க.விலிருந்து ஜக்கையன் தாய்க்கழகத்திற்கு திரும்பியுள்ள நிலையில், வேலுமணி மூலமாக எப்படியாவது ஜக்கையனை வழக்கை வாபஸ் பெறும்படி தலைமையிடம் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார் சின்னசாமி. கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த சின்னசாமி கட்சிக்குத் திரும்புவது உள்ளூர் அரசியலுக்கு உதவியாக இருக்கும். தவிரவும், கட்சி நடவடிக்கையிலிருந்து மீட்டு அவருக்கு பழைய பொறுப்பைப் பெற்றுத்தந்தால் தனது ஆதரவாளராக மாற்றிவிடலாம் என கணக்கிட்டு, வேலுமணியும் அ.தி.மு.க. தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இதையடுத்து, ஜக்கையனை அழைத்து வழக்கை வாபஸ் பெறுமாறு எடப்பாடி ஆலோசனையளித்துள்ள நிலையில், வழக்கை திரும்பப் பெற்றால் மீண்டும் செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்குமா கழகம் என்று சின்னச்சாமி கேள்வியெழுப்பவே, தலைமையிடமிருந்து சிறிய தயக்கம் வெளிப்பட்டுள்ளதாம்.
அண்ணா தொழிற்சங்க பேரவையில் செயலாளராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், செயலாளர் பதவிகேட்டு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்திவரும் சூழ்நிலையில், அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணியினர், மாவட்டச் செயலாளர்கள் தினமும் தி.மு.க.வில் தஞ்சமடைந்து வருகிறார்கள். மற்றொருபுறம் சசிகலா அ.தி.மு.க.வைக் கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனால் அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் கட்சி மாறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடியிடம் வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி வேலுமணி அழுத்தம் கொடுத்துவருகிறாராம். சின்னசாமி டி.டி.வி. அணியில் இருந்தாலும் தினமும் எடப் பாடியின் வீட்டிற்குச் சென்று, தன் முகத்தைப் பதிவுசெய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “"40 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயத்தில் உள்ளது. அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க தலைவர் தாடிராசு, சின்னசாமி இருவருமே கூட்டுக் களவாணிகளே, அவர்கள்தான் அண்ணா தொழிற்சங்கத்தை இந்த கீழ்நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் எங்களுடைய வங்கிக் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற் சங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்கும் கூட நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சின்னசாமியை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்தால் கட்சித் தலைமை பிரச்சனைகளைச் சந்திக்கும்''’ என்கிறார்கள்.
ஒரேயொரு பதவியின் மீது கண் வைத்து சின்னசாமி, ஜக்கையன், விஜயபாஸ்கர், கமலக்கண்ணன் என ஏகத்துக்கும் எதிர் பார்ப்பு இருப்பதால் அதை சுமுகமாக கையாள வழியின்றி தலைமையும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறதாம்.