porpanaikottai

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டைகளில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது.

Advertisment

கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்களின் கோயில்கள் உருவான நிலையில், அவற்றை இப்போதும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோட்டையைச் சுற்றி சிதிலமடைந்த நிலையில் ஆதிகால மதில் சுவர்கள் காணப்படுகின்றன. இந்தக் கோட்டைக்கு நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான அடையாளங்களும் அங்கே தென்படுகின்றன. கோட்டையைச் சுற்றி அகழி இருந்ததற்கான சுவடுகளும் அங்கே காணப்படுகிறது. அரண்மனைத் திட்டு என்று உள்ளூர் மக்கள், இந்தக் கோட்டைப் பகுதியைக் குறிப்பிடுகிறார்கள்.

Advertisment

இரண்டரை கி.மீ. சுற்றளவுக்கு உள்ள வட்டக் கோட்டை, இப்போது 5 மீ உயரத்தில் மிகச் சிதிலமடைந்த குவியலுடன் சுமார் 1 மீ உயரத்திற்கு செங்கல் கட்டுமானத்தில் காட்சி தருகிறது. அங்கே கோட்டையை பாதுகாக்கும் போர் வீரர்கள் நிற்க , 32 கொத்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

44.88 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கோட்டைக்குள் சுமார் 2ஏக்கர் பரப்பளவில் உள்ள நீர்வாவிக் குளக்கரையில், துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட சிதைந்த நிலையில் காணப்படும், முக்கோண வடிவக் கருங்கல்லில் கி.பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகளிலான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன. இது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அது ஒரு நடுகல்லாகும். அந்த நடுகல்லில், கோட்டைத் தலைவன் கணங்குமரன் ஆநிரை பூசலில் வீர மரணம் தழுவிய தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் பிறகு பல்வேறு ஆய்வாளர்களின் வருகையைத் தொடர்ந்து கோட்டைக்கு வெளியே இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான சென்நாக்குழிகள், ஈட்டிகள் மற்றும் போர் ஆயுதங்கள் செய்ய பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாய்கள், உருக்குக் கழிவுகள் என ஏராளமான தொல் சான்றாவணங்கள் கிடைத்தன.

ஆகவே, கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. நீதிமன்றம் மூலமும் அகழாய்வுக்கான உத்தரவு பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக ஆய்வாளர் இனியன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு செய்து, பழந்தமிழர் பயன்படுத்திய தண்ணீர் வடிகால் கட்டுமானம் மற்றும் பல்வேறு பொருட்களைக் கண்டுபிடித்தனர். அடுத்த கட்டமாக 2022-2023ஆம் ஆண்டில் தமிழ்நாடுஅரசின் சார்பில், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குனராக கொண்டு, அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய கருப்பு -சிவப்பு நிற பானை ஓடுகள், செங்கற்கள், மணிகள், தங்க ஆபரணம், எலும்பு ஆயுதங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், வட்ட வடிவில் சுடுசெங்கல் கட்டுமானம், நீர்வழித்தடம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

கோட்டைச் சுவரின் கட்டுமானம், கொத்தளக் கட்டுமானம் பற்றியும் அகழாய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி காலை, சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத் திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா, மக்கள் பிரநிதிகள், உள்ளாட்சி பிரதிநிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவரை பல இடங்களில் புதைவிடங்கள் காணப்பட்டுள்ளன. ஆனால் பொற்பனைக்கோட்டையில் பலகட்டமாக மக்கள் வாழ்ததற்கான தடயங்கள் முதல்கட்ட அகழாய்வில் கிடைத்துள்ளது. அதாவது இந்தப் பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அங்கு கிடைத்துள்ள பொருட்களை வைத்தே காண முடிந்தது. அதேபோல தற்போதைய இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாற்றுக்கான ஆச்சரியமூட்டும் சான்றுகள் வெளிப்படும் என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட குழிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை கிடைத்துள்ள பொருட்களும் அங்கே காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

தற்போது நீர்வாவி குளத்தின் தென்மேற்கு கரைப் பகுதியில் உள்ள மேடான பகுதிகளில் அகழாய்வு செய்ய பணிகள் தொடங்கியுள்ளன. இதே போல மேலும் சில இடங்களையும் ஆய்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அகழாய்வு நடக்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று உற்சாகத்தோடு தெரிவித்திருக்கிறார்.

புதுகோட்டை மாவட்டத்தில் எங்கே தோண்டினாலும் வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கும். அதே போல எங்கள் பொற்பனைக்கோட்டையில் சங்க கால வரலாறுகளும், வாழ்வியலும் மறைந்து கிடப்பதை வெளிக்கொண்டு வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதைவிட சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த மண்ணில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி''’என்கின்றனர் பொற்பனைக்கோட்டை மக்கள்.

இந்தக் கோட்டையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சங்ககால வாழ்வியலை அப்படியே மீட்டெடுப்பதுதான் இந்த அகழ்வாய்வின் நோக்கம் என்கிறார்கள் அகழ்வாய்வுக்குழுவினர்.

பொற்பனைக்கோட்டை, உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர்களின் தொல் வரலாற்றைப் பேசத் தொடங்கியிருக்கிறது.