ஃபேல் என்ற பெயரைக் கேட்டாலே பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் அலறுகிறார்கள். ராகுல்காந்தியோ விடாமல் ரபேல் பற்றியே பேசுகிறார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தஸ்ஸால்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான போர் விமானத்துக்கு பெயர்தான் ரஃபேல். அந்த விமானம் குறைவான மைலேஜ்தான் தருகிறது. இரட்டை எஞ்சின் விமானம் என்று சொன்னாலும், பலமுறை இரண்டு என்ஜின்களுமே பழுதாகி விழுந்த நிகழ்வுகள் இருக்கின்றன என்று ராணுவ தளவாடங்கள் தொடர்பான ஆய்வுப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு விமானத்தை வாங்கக்கூடாது என்று பா.ஜ.க.வின் சுப்ரமணியசாமி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "மேக் இன் இந்தியா' என்று சொல்லும் மோடி அரசு, ஏன் பாதுகாப்பு சம்பந்தமான விஷயத்தில், போதிய திறனில்லாத விமானங்களை வாங்கவேண்டும் என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.

france-president-with-modi

Advertisment

ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்கென ஒரு எதிர்கால போர் விமானத்தை தயாரிக்க முனைந்தபோது, அதிலிருந்து விலகி பிரான்ஸ் தனியாக தயாரித்ததுதான் இந்த ரஃபேல் விமானம். அதேசமயம் ஐரோப்பிய யூனியனில் இணைந்த நாடுகள் சேர்ந்து தயாரித்த, யூரோபைட்டர் என்ற விமானம் மிகவும் தரம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

ரஃபேல் விமானங்கள் விற்பனைக்கு தயாராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை யாரும் சீந்தாமல் கிடந்த அந்த விமானங்கள், லிபியா போரின்போது செயல்பாட்டுக்கு வந்தன. பிரான்சுக்கு சொந்தமான மிராஜ் வகை போர் விமானங்களை அழித்து தனது பெருமையை ரஃபேல் காட்டிக்கொண்டது.

Advertisment

அதன்பிறகு, பல நாடுகளிடம் வியாபாரம் பேசிப்பார்த்தது பிரான்ஸ். ஆனால், அந்த விமானத்தின் செயல்பாட்டை குறைகூறி பிரேசில், கனடா, அல்ஜீரியா, கிரீஸ் உள்ளிட்ட பல நாடுகள் வாங்க மறுத்துவிட்டன. இந்த நிலையில்தான் தஸ்ஸால்ட் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்க ஏர்பஸ் நிறுவனம் முடிவெடுத்தது. இதையடுத்து தஸ்ஸால்ட் நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிறுவனத்தை காப்பாற்றத்தான் மோடி கைகொடுத்திருக்கிறார். அவருக்கு முன் எகிப்து மட்டுமே ரஃபேல் ரக விமானத்தை வாங்கியிருந்தது. இப்போது, இந்தியாவும் அந்த விமானத்தை வாங்கத் துணிந்தது. இந்த வியாபாரத்தை பிரேசிலின் ராணுவ தளவாட ஆய்வுப் பத்திரிகைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. ஒப்பந்தத்தின் மதிப்பு 36 விமானங்களுக்கு 72 ஆயிரம் கோடிகள் இருக்கலாம் என்று அம்பலப்படுத்தின.

இந்த விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் வாங்க முடிவெடுத்து விலை பேசியது என பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது. அப்போது வாங்க முயன்றதையும், விலை குறைவாக இருந்ததையும் காங்கிரஸ் தலைவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான், ரஃபேல் விமானத்தை மோடி அரசு வாங்க உத்தேசித்துள்ள விலை என்னவென்று ராகுல் கேட்டார். அதற்கு பதிலளித்த ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், "இது ஒரு ரகசிய ஒப்பந்தம்' என்றும், அதனால் "விலையை வெளியிடக்கூடாது' என்றும் கூறினார். ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ "விலையை வெளியிட்டால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து' என்று புது விளக்கம் கூறுகிறார்.

இந்த ஒப்பந்தம் முடிவாவதற்கு முன்னரே, யூரோபைட்டர் நிறுவனம் தனது விமானத்தை 20 சதவீதம் தள்ளுபடியில் விற்க முன்வந்ததை இந்தியா ஏன் ஏற்கவில்லை என்பதற்கும் காரணத்தை காங்கிரஸ் கேட்டுள்ளது.

கடைசியாக, காங்கிரஸ் அரசாங்கம் இதற்குமுன் ராணுவ விமானங்களோ, தளவாடங்களோ வாங்கியபோது, விலை விவரங்களைத் தெரிவித்தது இல்லை என்றும் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளித்த ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் அரசு வெளியிட்ட விலைப்பட்டியல் விவரத்தை இணைத்தார்.

மத்திய அரசின் உயரதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டால், 2012 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசுடன் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.அரசு ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. அதன்படி, 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 126 ரஃபேல் ரக விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்திருந்தது. இதன்படி, ஒரு விமானத்தின் விலை 714 கோடி ரூபாய். அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு விமானத் தொழில்நுட்பத்தை வழங்கவும் அந்த ஒப்பந்தம் வகை செய்திருந்தது.

மோடி பிரதமராகி, பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் செய்த பிறகு நிலைமை மாறியது. காங்கிரஸ் அரசு செய்துகொண்ட விமான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். புதிய ஒப்பந்தப்படி, 36 ரஃபேல் விமானங்களை 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, ரஃபேல் விமானத்தின் விலை 1666 கோடி ரூபாய் ஆகும். ஒரு விமானத்திற்கு 950 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்து மோடி வாங்குகிறார். அதுமட்டுமின்றி, தொழில்நுட்பத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது பிரான்ஸ்.

கூடுதல் பணம் யாருக்குப் போகிறது என்ற கேள்வியைத்தான் காங்கிரஸ் கேட்டுக் குடைகிறது. நேரு முதல் ராகுல் வரை காங்கிரஸ் பரம்பரையையே நாடாளுமன்றத்தில் ஆவேச வசைபாடிய மோடியும் அவரது ஆட்களும் "ரஃபேல்' என்றால் சைலன்ட்டாகிறார்கள்.

-ஆதனூர் சோழன்