சட்டமன்றத்தில் சபாநாயகர் முன் தரையில் உட்கார்ந்து முற்றுகையிட்டும், "மானமும் அறிவும் மனிதருக்கு அழகு' என்ற வாசகத்துடன் பெரியார் படம் போட்ட கறுப்புச் சட்டை அணிந்து வந்தும் ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி. இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர். அவரை சந்தித்தோம்.
சபாநாயகர் முன்பு அமர்ந்து போராட்டம் செய்யவேண்டிய அளவிற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?
அன்சாரி: சட்டமன்றத்தில் நான் மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்கக்கூடியவன். என்னை போராடக்கூடிய நிலைக்கு தள்ளிவிட்டார்கள் என்பது, கடந்த திங்கள் (மார்ச் 19) அன்று நானும் கருணாஸ், தனியரசு ஆகியோரும் "அமைதியைக் குலைக்கும் ரதயாத்திரையை தமிழ் மண்ணில் அனுமதிக்க வேண்டாம்' என்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொடுத்திருந்தோம். பேச அனுமதிக்காததால், எழுந்து நின்று வாய்ப்பு கேட்டோம். அந்தச்சமயத்தில் அமைச்சர் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சைகை மூலமாக "ரத யாத்திரைக்கு அனுமதி தரவில்லை' என்றார்கள். அதை வெளிப்படையாக ஏன் சொல்லவில்லை என்பதால் வெளிநடப்பு செய்தோம். அமைச்சர்களின் சைகை பதிலுக்கு நேர்மாறாக அரசின் செய்கை அமைந்து, ரதயாத்திரையை அனுமதித்ததன் மூலம், அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. அதனால் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் செயல்பட வேண்டியதாயிற்று.
ரதயாத்திரை பல மாநிலங்களை அமைதியாக கடந்து வந்திருக்கிறது. இங்கே அதனை எதிர்ப்பவர்களால்தான் பிரச்சினை என குற்றம்சாட்டுகிறார்களே?
அன்சாரி: அந்த மாநிலங்களில் இல்லாத விழிப்புணர்வு, பெரியார் பிறந்த மண்ணில் இருக்கிறது. சமூக நீதியையும், சமூக நல்லிணக்கத்தையும் இங்குள்ள மக்கள் இரண்டு கண்களாகப் பார்க்கிறார்கள்.
பெரியார் மற்றும் பலரின் கருத்துகள் வேரூன்றியிருப்பதாகச் சொல்கிறீர்கள் அப்படியென்றால் எதற்காக ரதயாத்திரையைக் கண்டு பயப்படுகிறீர்கள்?
அன்சாரி: டெல்லியை பா.ஜ.க. கைப்பற்றியது முதல், தமிழ்நாட்டை சூரியக் கண்களை கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு என்ற பெயர் அவர்களை பயமுறுத்துகிறது. அதனால்தான் டெல்லி இல்லத்தின் பெயரை மாற்றக்கூடத் துணிந்தார்கள். "திராவிடம்' என்ற சொல் அவர்களுக்கு கசக்கிறது. "தமிழ்' என்ற வார்த்தையே மிரட்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு விழிப்புணர்வு இருக்கும் போதே பெரியார் சிலைகளை உடைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆரம்பமே அபாயகரமாக இருக்கிறது.
தமிழகத்தில் ஒற்றுமையைக் குலைக்கத்தான் இப்படிச் செய்வதாக பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறதே?
அன்சாரி: ரத யாத்திரையை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன் பட்டியலை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. அதில் 80% பேர் இந்துக்கள்தான். பெரும்பான்மை சமூகத்தில் இருப்பவர்கள் சிறுபான்மை சமூக மக்களின் உரிமையை பாதுகாக்கும் நோக்கில்தான் களத்திற்கு வந்திருக்கிறார்கள். பிரிவினை ஏற்படுத்துவதற்காக அல்ல. அதேநேரத்தில் பூணூல் அறுத்ததையும், மடத்தின் மீதான தாக்குதலையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உங்கள் அமைப்பு சிறுபான்மையினர் பிரச்சனையைத் தாண்டி பெரியார், தமிழ் தேசியம் போன்ற விஷயங்களை பேசி வருகிறதே?
அன்சாரி: கல்லூரி காலத்தில் இருந்தே பன்மை கலாச்சாரத்தோடு பயணித்து, வாழ்வுரிமை போராட்டதில் முழுமையாக ஈடுபட்டவன். பொது சமூகத்தையும் அரவணைத்தால்தான் களத்தில் வெற்றி பெறமுடியும் என்ற கொள்கைத் திட்டத்தை, முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுதான், முஸ்லிம் சமூகத்தை பொதுநீரோட்டத்தில் பயணிக்க வைத்துள்ளது.
ரதயாத்திரை உள்ளிட்ட பிரச்சினைகளால் அ.தி.மு.க.விற்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?
அன்சாரி: டெல்லியில் இருக்கக்கூடிய சில தீயசக்திகள் தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளையும் அழிக்க நினைக்கின்றன. இந்தச் சூழலில் அ.தி.மு.க.வின் அருகில் இருந்து பாதுகாக்க வேண்டும். தவறுகளைத் தட்டிக் கேட்கவேண்டும். நாங்கள் வெளியே சென்றுவிட்டால் திசைமாறிவிடும். எங்களை அ.தி.மு.க.வினர் நிராகரிப்பார்களேயானால், நாங்கள் எங்கள் திசையை நோக்கி பயணிக்கவேண்டி வரும்.
-சந்திப்பு: சி.ஜீவாபாரதி
படம்: ஸ்டாலின்