localbodyelection

2016-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைத்து, சாக்குச்சொல்லி, நீதிமன்றத்தில் தவணைகேட்டு ஒன்றரை ஆண்டுகாலமாக ஒத்திவைத்து வருகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக இயங்காததால் தமிழக மக்கள் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வருகிறார்கள். எனினும் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான காலம் கனிந்திருப்பதாகத் தெரிகிறது.

ll

பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு முறையாக நடைபெறவில்லையென தி.மு.க. தொடர்ந்த வழக்கில், ஆறுமாத காலத்துக்குத் தேர்தல் தள்ளிவைக்கப்பட, உள்ளாட்சிப் பணிகளைக் கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அப்போதுமுதலே அ.தி.மு.க.வில் சிக்கல்தான். ஜெ.வின் உடல்நலக் குறைவு, சிகிச்சை மர்மம், ஜெ. மரணம், அதைத் தொடர்ந்து பல்வேறு உள்கட்சிப் பிரச்சினைகள் நிலவியதால், தேர்தலை நடத்துவதைக் காட்டிலும் தள்ளிவைப்பதிலே அதிக ஆர்வம் காட்டியது கட்சித் தலைமை.

Advertisment

இடையில் உட்கட்சிப் பிரச்சினையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிவைக்க, மீண்டும் தள்ளிப்போனது தேர்தல். இந்நிலையில் சின்னத்தை மீட்டிருப்பதாலும் நீதிமன்றம் நெருக்கடி தருவதாலும் வார்டு வரையறை வேலைகளில் கவனம் செலுத்திவருகிறது தமிழக அரசு. இதனால் கூடிய llசீக்கிரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாமென அதிகாரிகள் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.

Advertisment

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி, அ.தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ""கமல், ரஜினி இருவரும் அரசியல் பிரவேசம் பற்றி பேசிவருவதுடன் உறுப்பினர் சேர்க்கையிலும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். அதனால் உள்ளாட்சித் தேர்தலுக்குமுன் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தினகரனை எதிர்கொள்ள எடப்பாடி-ஓ.பி.எஸ். அணிகள் இணைக்கப்பட்டு, டி.டி.வி. ஆதரவாளர்கள் பதவியிலிருந்து தூக்கப்பட்டும் கட்சியிலிருந்து விலக்கியும் அதிரடி காட்டப்பட்டது. அந்த இடங்களில் தங்கள் தரப்பினரை நிரப்ப இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருதரப்பினரும் சண்டையிட்டு வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நிர்வாக வசதிக்காக தற்போது 50 மாவட்டப் பொறுப்புகளை 65-லிருந்து 70 ஆக அதிகரிக்க கட்சித் தலைமை திட்டமிட்டு வருகிறது. இதனால் இரண்டு அணியினருக்கும் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாமென திட்டமிட்டிருக்கின்றனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்குறித்து தீவிரமாகப் பேசப்படாவிட்டாலும், விரைவில் நடைபெறும் என்ற சமிக்ஞை காட்டப்பட்டிருக்கிறது''’என்றனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, தலைமைச் செயலகத்திலுள்ள தனது துறைசார்ந்த அதிகாரிகளிடம் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படுமென்கிற தொனியில் பேசியிருக்கிறார். இதனால் வார்டு வரையறை முடிந்து தேர்தல் அறிவிக்கப்படும் சமயத்தில், முக்கிய அதிகாரிகள் விடுப்பில் சென்றுவிடும் மனநிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மக்கள் எதிர் மனநிலையில் இருப்பதால், அதைச் சமாளிக்கவும் தேர்தல் வெற்றியை வசப்படுத்தவும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு வேலைகள் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தங்கள் பெயரை காப்பாற்றிக்கொள்ளவே இந்த யோசனையாம்.

உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாகி வருவதைக் கருத்தில்கொண்டே, டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருப்பதாகவும், தனது சமூகத்தினர் இருக்கக்கூடிய காவிரி டெல்டா, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், தேனி பகுதிகளைத் தேர்வுசெய்து எலெக்ஷன் எக்ஸாமில் பாஸாவதற்கான ஹோம் வொர்க்குகளைச் செய்து வருவதாகவும் அவர்களது தரப்பினர் சொல்கின்றனர்.

மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகள் மறுசீரமைப்பு செய்வது குறித்து அறிவித்துவிட்டது. தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், மதுரை என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு வார்டு வரையறை குறித்த மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுவிட்டன. பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் வார்டு மறுசீரமைப்பு இறுதிப்பட்டியலை வெளியிட மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ்கான் முடிவு செய்துள்ளார். பிப்ரவரி மாத இறுதிக்குள் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு பணிகள் முடிக்கப்பட்டு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாமென சொல்கிறது அதிகாரிகள் தரப்பு.

அணிகளுக்குள்ளே நிலவும் பேதம், தி.மு.க. தொடர்ந்திருக்கும் வழக்கு, குட்கா வழக்கு ஊழல், பல்கலைக்கழக நியமனங்களில் ஊழல், பேருந்துக்கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு என தினம் ஒரு பிரச்சினையைச் சந்திக்கும் அ.தி.மு.க. அரசு, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுகிறது.

-சி.ஜீவாபாரதி