தமிழக சட்டப்பேரவையை சுற்றியே கடந்த ஒருவருட காலமாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தமுறை மேலும் ஒரு வழக்கை சட்டப்பேரவை அதிகாரிகள் தொடர்ந்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று சட்டப்பேரவை செயலாளர் பதவி. சட்டமன்ற நிகழ்வின்போது சபாநாயகருக்கு விதிகளை கூறி வழிநடத்த உதவியாக இருக்கக் கூடிய பதவி. இதனை வகிக்கும் பூபதியின் பதவி காலம் பிப். 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சபாநாயகரோ, தனக்கு உதவியாளராக இருக்கும் சட்டமன்ற கூடுதல் செயலாளர் கே.சீனிவாசனை அந்தப் பதவிக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சிசெய்து வருவதாக பிரச்சினை வரவே, சீனியர் அதிகாரிகள் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆனால் எந்தவிதமான பதிலும் இல்லாமல் போகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
""சட்டப்பேரவையில் இரண்டுவிதமான பிரிவுகளில் அலுவலர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பொது நிர்வாகப் பிரிவு (சட்டமன்றச் செயலாளர் பதவியை அடைய தகுதி உடையவர்கள்), நிருபர்கள் பிரிவு (சட்டப்பேரவை செயலாளர் பதவி பெற தகுதி இல்லாதவர்கள்). பொது நிர்வாகப் பிரிவில் இருக்கக் கூடியவர்கள் புதிய சட்டம் உருவாக்குவது உள்ளிட்ட, சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விஷயங்களை கவனிப்பார்கள். இதில் உதவியாளர் பணி தொடங்கி பதவி உயர்வின் மூலம் சட்டமன்றச் செயலாளர் வரையிலான பொறுப்பை அடைவார்கள். இதில் துணைச்செயலர் பதவிக்குமேல் பதவி உயர்வு பெற சட்டப்படிப்பு கட்டாயமாகும். நிருபர்கள் பிரிவில் டைப்பிஸ்ட் தொடங்கி கூடுதல் செயலர் பதவிவரை பதவி வழங்கப்படும்.
1952 முதல் பொதுநிர்வாக பிரிவில் பதவி மூப்பு அடிப்படையில் சட்டமன்றச் செயலர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகால நடைமுறையை தூக்கி வீசிவிட்டு நிருபர்கள் பிரிவில் இருக்கக்கூடிய கூடுதல் செயலாளர் கே.சீனிவாசனுக்கு சட்டமன்றச் செயலாளர் பதவி வழங்க வேகம் காட்டப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருக்கக்கூடிய பொதுநிர்வாகப் பிரிவிற்கு ஒரு கூடுதல் செயலாளர் பதவி மட்டும்தான். ஆனால் வெறும் 52 பேர் மட்டும் இருக்கக்கூடிய நிருபர்கள் பிரிவுக்கு இரண்டு கூடுதல் செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நான்குமாத இடைவெளியில் கூடுதல் செயலாளர், சிறப்புச்செயலாளர் உள்ளிட்ட மூன்று பதவி உயர்வுகள் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது சட்டப்பேரவைச் செயலாளர் பதவி வழங்கப்பட இருக்கிறது'' என்று அதிகாரிகள் கொந்தளிக்கிறார்கள்.
சென்னை, பெரம்பூரில் 2.5 கோடி மதிப்பில் சீனிவாசன் கட்டிய வீட்டை சபாநாயகர் நேரடியாக சென்று திறந்து வைத்திருக்கிறார்.
அவருக்கு பதவி உயர்வு தருவதை எதிர்த்துதான் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர் நியாயத்தை எதிர்பார்ப்பவர்கள்.
-சி.ஜீவாபாரதி