jaianand

"டி.டி.வி. தினகரனின் கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச்செயலாளர் கே.சி.பிரபாத் “"விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி ஒன்றியத்தில் யார் யாருக்கு பொறுப்பு தர வேண்டும் என்பதை காரியாப்பட்டி ஒன்றியத்தில் உள்ளவர்கள் தீர்மானிக்கிறார்கள். என்னைத் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள்'’என்று புலம்பினார்.

மதுரையிலும் இதே ரீதியிலான ஆதங்கம் வெளிப்படுகிறது. மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்’ பொதுக்கூட்ட மேடையிலேயே, இதைக் காணமுடிந்தது. மேடையின் பேனரில், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் இரா.தெய்வேந்திரனின் பெயரை மறைத்து நோட்டீஸ் ஒட்டி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisment

விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கழகம் வெறுத்துப்போய் புறக்கணிப்பு செய்யும் கே.சி.பிரபாத், இரா.தெய்வேந்திரன் ஆகிய இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே சினிமா வில்லன்கள். இவர்கள் நடிக்கும், தயாரிக்கும் சினிமாவின் பின்னணியில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Advertisment

தினகரனுக்கு செக் வைப்பதற்காகவே, தன் மகன் ஜெய் ஆனந்தை, போஸ் மக்கள் பணியகம் என்கிற போர்வையில் திவாகரன் தயார்படுத்தி வருகிறார் என்று நினைக்கிறார்கள். இந்த சந்தேகம்தான், ஜெய் ஆனந்த் தொடர்பில் உள்ள கே.சி.பிரபாத், இரா.தெய்வேந்திரன் போன்றவர்களை ஓரம்கட்ட வைத்திருக்கிறது.

ஜெய்ஆனந்தோ, ""இளைஞர்கள் பலரும் என்னைச் சந்திக்கிறார்கள். அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டும்’என்பதுதான் போஸ் மக்கள் பணியகத்தின் நோக்கம்''’என்கிறார்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

அம்பலத்துக்கு வந்த தி.மு.க. உள்குத்து!

தி.மு.க. வி.ஐ.பி.யான டி.எம்.செல்வகணபதியின் சேலம் வீட்டின் முன்பகுதியில் 2017 அக்டோபர் மாதம் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியது ஒரு கும்பல். செல்வகணபதியின் எதிர் கோஷ்டியின் வேலைதான் இது என்ற பேச்சு உ.பி.க்கள் மத்தியில் ஓடியது. சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், இப்போது பாரப்பட்டி அருகிலுள்ள ஏர்வாடி மேட்டுக்காடு மணியையும், அரியானூரைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் ஏர்வாடி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட குமாரின் ஆதரவாளர்தான் மணி. அதேபோல் மவுலீஸ்வரன் என்பவர், வக்கீல் ரமேஷின் ஆதரவாளர். இந்த நால்வரும் மல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் சுரேந்திரனின் ஆதரவாளர்கள். மேற்படி ஐந்துபேரும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனின் சிஷ்யர்களாம். மணி, மவுலீஸ்வரனுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

-சிவசுப்ரமணியம்