"நரசிம்மராவ் மைனாரிட்டி அரசாக பொறுப்பேற்று, மெஜாரிட்டி அரசாக ஆட்சியை நிறைவு செய்தார். மோடியோ மெஜாரிட்டி அரசாகப் பொறுப்பேற்று, மைனாரிட்டி அரசாகும் நெருக்கடியில் இருக்கிறார்' என்கிறார்கள் டெல்லி அரசியல் பார்வையாளர்கள். காரணம்... ஒரு வருட காலத்திற்குள் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. சந்தித்த தோல்வியும், பீகாரிலும் எதிர்கொண்ட அதேபோன்ற நிலைமையும்.
மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடு போட்டியிட்ட பா.ஜ.க. எதிர்பாராதவிதமாக 282 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. கூட்டணிக் கட்சிகள் சிலவற்றையும் இணைத்தே அமைச்சரவை பதவியேற்றது. அதன்பின் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. (கூட்டணி) அரசை நிறுவுவதில் வெற்றிபெற்று வந்தது.
இடதுசாரிகளின் கோட்டையான திரிபுராவில் ஆட்சியைப் பிடித்ததுடன், நாகலாந்து-மேகாலயா மாநிலங்களிலும் கூட்டணிகள் தயவில் ஆட்சியின் ருசியை சுவைக்கத் தொடங்கியது பா.ஜ.க. இந்நிலையில்தான்... உ.பி., பீகாரில் நடைபெற்ற மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது.
இவற்றில் கோரக்பூர் தொகுதி, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி, ஐந்து முறை வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதியாகும். முதல்வர் பதவி ஏற்றதால் எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ய, அங்கே நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதுபோல புல்பூர் தொகுதி, துணைமுதல்வர் மவுரியா வெற்றிபெற்ற எம்.பி. தொகுதி. அவரது ராஜினாமாவால் இடைத்தேர்தல் நடந்த இங்கும் சமாஜ்வாடி வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற ஓராண்டுக்குள் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதல்வர் -துணைமுதல்வர் தொகுதிகளை பா.ஜ.க. பறிகொடுத்திருப்பது அதன் நடுமுதுகில் பாய்ந்த ஈட்டியாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
"காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கி, ஒற்றையாட்சி -அதிபர் முறையை உருவாக்க வேண்டும்' என்பது பா.ஜ.க.வின் நெடுங்காலக் கனவு. அண்மைக் காலமாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சிதைத்து, அதன்மூலம் தமது வெற்றியைத் தக்கவைத்து வந்தது பா.ஜ.க. ஆனால், உ.பி. இடைத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி போட்டியிடாமல் தவிர்த்தது, சமாஜ்வாடி கட்சியின் வெற்றிக்கு கூடுதல் ஆதரவாக அமைந்துவிட்டது. இதற்காக மாயாவதிக்கு, அகிலேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் டெபாசிட் இழந்தாலும் பா.ஜ.க.வின் தோல்வியை அது ரசிக்கிறது. இந்திய அளவில் வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ராகுலுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன், சோனியா காந்தி அளித்த இரவு விருந்தும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பீகாரில் லாலு-நிதீஷ் மெகா கூட்டணியை பா.ஜ.க. கச்சிதமாக உடைத்து, நிதீஷை தங்கள் பக்கம் இழுத்த நிலையில், அராரியா தொகுதியில் லாலுவின் ஆர்.ஜே.டி. வெற்றி பெற்றிருப்பது, "சிறையில் இருந்தாலும் லாலுவின் செல்வாக்கு குறையவில்லை' என்பதைக் காட்டியுள்ளது.
இமேஜ் பில்டப்பால் முன்னிறுத்தப்பட்டவர் மோடி. அவர் பிரதமராகப் பதவியேற்று 100 நாட்கள் முடிந்த நிலையிலேயே 10 மாநிலங்களில் 33 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உ.பி., குஜராத், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 33 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சொந்தமான 24 தொகுதிகள் இருந்தன. இவற்றில் 13 தொகுதிகளை அது இழந்தது. ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு சொந்தமான 3 எம்.பி. தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இதுபோல கடந்த நான்கு ஆண்டுகளில் 10 எம்.பி. தொகுதிகளை மோடியின் பா.ஜ.க. இழந்துள்ளதால் நாடாளுமன்றத்தில் அதன் மெஜாரிட்டி என்பது ஊசலாடுகிறது. கூட்டணிக் கட்சிகளையே நம்பவேண்டிய நிலையில் இருக்கிறது.
"2019 தேர்தலில் மீண்டும் மோடிதான் ஜெயிப்பார்' என்று பா.ஜ.க. நம்பிவந்த நிலையில், இந்த ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதில் இப்படியொரு நெருக்கடி ஏற்படும் என அது நம்பவில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவில்லை என்பதால் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் விலகியுள்ளது.
"தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை ஆட்டிப்படைப்பதைப் போல எங்களை ஆட்டிப் படைக்க முடியாது. வரியை வாரிக் கொடுப்பது தென்மாநிலங்கள். ஆனால், வாழ்வது வட மாநிலங்களா?'’என்று காட்டமாக கேட்டுள்ளார் நாயுடு. அந்தக் கட்சியின் எம்.பி. முரளிமோகன், தெற்கில் உள்ள மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்தால், "தென்னிந்தியா தனிநாடாகும்' என்று எச்சரித்தார்.
தெலுங்கு தேசத்திற்கு ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின், ஆந்திராவுக்கான சிறப்பு மாநில அந்தஸ்துக்காக மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் முயற்சிக்கு தெலுங்கு தேசம் ஆதரவளித்திருப்பது நல்ல திருப்பம். அத்துடன், ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டு, உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதியும் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கிறது. பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டியை விட (272), ஒரே ஒரு ஓட்டு (273) கூடுதலாக உள்ள நிலையில்... அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆட்சி முடியும்வரை கைகொடுப்பார்கள் என நம்புகிறது.
எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பும், தென்மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு அதிகரித்துவரும் எதிர்ப்பும் மோடியின் 2019ஆம் ஆண்டுக்கான கனவைக் கலைத்துக்கொண்டிருக்கின்றன.
-ஆதனூர் சோழன்