அ.தி.மு.க. அரசின் பேருந்துக் கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப்பெறக் கோரி, அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்று அதகளப்படுத்தியிருக்கிறது தி.மு.க. கூட்டணி.
100 சதவீதக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றுதான் முடிவு செய்திருந்தன. அந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவருமே, கட்டணத்தை முழுமையாக ரத்துசெய்யும்வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், போராட்டம் முடிந்துவிட்ட நிலையில் மறுநாள், பேருந்துக் கட்டணம் 2 பைசா முதல் 10 பைசாவரை குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இது மக்கள் மத்தியில் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரிடமும் அதிர்வலைகளை உருவாக்கியது. "ரூபாய்க்கணக்கில் கட்டணத்தை உயர்த்திவிட்டு பைசாக் கணக்கில் குறைப்பது மக்களை அவமானப்படுத்தும் செயல்' என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். "இந்தக் கட்டணக் குறைப்பு கண்துடைப்பு நாடகம்' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெறும்வரை போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் பிரகடனம் செய்தார். இதையடுத்து 29ஆம் தேதி திங்கள்கிழமை தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதிலிருந்து தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தி.மு.க. தலைமையிலான போராட்டத்திற்குப் பல இடங்களில் ஆதரவளித்தனர்.
சென்னையில் மட்டும் 62 இடங்களில் மறியல்கள் நடைபெற்றன. கொளத்தூரில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பீட்டர்அல்போன்ஸ் உள்ளிட்டோர் கொடியேந்தி அணிவகுத்து மாநகரப் பேருந்தை சிறைப்பிடித்து மறியல் செய்தனர். சென்னை -சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மறியலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், சுப.வீ. உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர். ராயப்பேட்டையில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் பங்கேற்று கைதாகினர்.
இந்த மறியல் போரில் சென்னையில் 12 ஆயிரத்து 500 பேர் கைதானதாகவும், தமிழகம் முழுவதும் ஒருலட்சம் பேர் கைது செய்யப்பட்டதாகவும் டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்தது. ஆனால், கைதானவர்களின் எண்ணிக்கையை வழக்கம்போலவே போலீஸ் குறைத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கூறின.
திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மறியலில் கைது செய்யப்பட்டவர்களை பேருந்துகளில் ஏற்றி திருமணமண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அதுவே பெரிய ஊர்வலமாக மாறியது. அனுமதியில்லாமல் மறியல் செய்தவர்கள், இப்போது அனுமதி இல்லாத ஊர்வலத்தையும் நடத்தினார்கள்.
ஏ.சி. திருமண மண்டபத்தையும், சாப்பாடு வசதியையும் கட்சிக்காரர்களே செய்து கொண்டதாகவும், அதனால் இதுபோன்ற ஊர்வல அலப்பறைகளை ஏற்க வேண்டியிருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால், போராட்டத்துக்கு அனுமதி கேட்கும் எந்த அமைப்பிடமும் சாப்பாட்டுச் செலவை சம்பந்தப்பட்ட அமைப்பே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அனுமதியே கொடுக்கிறார்கள் என்று கட்சிக்காரர் ஒருவர் தெரிவித்தார். திருவண்ணாமலை மறியல் போராட்டம் மண்டபத்திற்குள் மணக்கும் சிக்கன் பிரியாணி விருந்தாக மாறியது. இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே இருந்தபோதும், மக்கள் பிரச்சினைக்காக எதிர்க்கட்சிகள் களமிறங்கியதற்கு ஆதரவு அதிகம்.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சிகள், ஒன்றியத் தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகளும் மக்கள் மீது சுமத்தப்பட்ட பேருந்துக் கட்டணச் சுமையை எதிர்த்து எழுச்சிகரமான போராட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றன.
ஒரு நகரம் என்றால் ஓர் இடத்தில் மட்டுமின்றி, நகரத்தில் பல்வேறு மையங்களிலும் மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் அனைத்துப் பேரூராட்சிகளிலும் இந்த மறியல் நடைபெறும் வகையில் ஒரேநாளில் திட்டமிடப்பட்டது வியப்பாக இருந்தது.
இந்த மறியல் போராட்டத்துக்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தொடர்போராட்டத்துக்கும் தயாராக இருப்பதாக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்மறியல் போராட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் போராட்டமும் கட்டணக் குறைப்பும்!
பஸ்கட்டண உயர்வை அறிவித்தது முதலே தமிழகம் முழுவதும் பொதுமக்களும், மாணவர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் தி.மு.க.வும் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கட்டணக் குறைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திவந்தனர். கட்டண உயர்வைத் தொடர்ந்து அரசுக்கு நாள் ஒன்றுக்கு 35 முதல் 38 கோடி ரூபாய்வரை வருவாய் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால், 29 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்தது.
அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் 20 சதவீதம் அளவுக்கு குறைந்தது. அவர்கள் மாற்றுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இது அரசுக்கு அதிர்ச்சியை அளித்தது. தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் என்ற ஸ்டாலினின் அறிவிப்பும் கட்டணத்தை குறைத்தே ஆகவேண்டிய நெருக்கடிக்கு அதிகாரிகளைத் தள்ளியது.
கட்டணத்தை குறைக்க அரசுத் தரப்பில் முடிவெடுக்கப் போவதை அறிந்துதான், அன்றைய தினம் சொந்த ஊரான பெரியகுளத்தில் இருந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் "கட்டணக் குறைப்பு இருக்கும்' என்று சூசகமாக தெரிவித்தார்.
இந்நிலையில்தான் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில்... அரசாங்கம் கட்டணக் குறைப்பை அறிவிக்கப்போவது திமுக தரப்புக்கு தெரியவந்தது. இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்துக்கான அறிவிப்பு இரவில் வெளியாகியது.
28ஆம் தேதி அறிவாலயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில் அரசுத் தரப்பில் இருந்து பேருந்துக் கட்டணம் சிறிதளவு குறைக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது. அதன்பின்னரே, "கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடைபெறும்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவானது.
கட்டண உயர்வுக்குப் பிறகு மூன்று மாதங்கள்வரை காத்திருந்தால்தான் உறுதியான வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், இப்போது கட்டணத்தை சிறிதளவு குறைத்துள்ள நிலையில் வருவாய் எவ்வளவு பாதிக்கும் என்பது தெரியவில்லை.
-சி.ஜீவாபாரதி, ஜெ.டி.ஆர்., து.ராஜா, சோழன்
படங்கள்: சுந்தர், ஸ்டாலின், அண்ணல், அசோக், குமரேஷ்
கைதுக்கு ஊக்கம் தந்த உதயநிதி!
ஜனவரி 27-ந் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கொடி பிடித்து கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், 29-ந் தேதி நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சினிமா படப்பிடிப்பு இருந்தது. அதனைத் தவிர்க்கமுடியாத சூழலில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட உதயநிதி, அங்கிருந்து கிளம்பி, மறியலில் கைதானவர்களை சந்திக்க விரும்பினார். வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் கைதாகி திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த தி.மு.க.வினரை அவர் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க ஊக்கப்படுத்தினார்.
-ஷாகுல்
பஸ்ஸில் கலக்கிய விஜயகாந்த்!
பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து காஞ்சி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில், ஜனவரி 29அன்று பல்லாவரத்தில் விஜயகாந்த் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மா.செ.அனகை முருகேசன். வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டையுடன், சாலிகிராமம் வீட்டிலிருந்து காரில் கிளம்பினார் விஜயகாந்த். ஆலந்தூர் அருகே போய்க்கொண்டிருந்தபோது, திடீரென காரை நிறுத்தி, மாநகர பஸ்ஸில் ஏறினார். கூடவே கேப்டன் டி.வி. லைவ் யூனிட் ஆட்கள், விஜயகாந்தின் போட்டோகிராபர், தே.மு.தி.க.வினர் சிலரும் ஏறினர். இவர்கள் தவிர பயணிகள் 17 பேர் பஸ்ஸில் இருந்தனர். ""மக்களே திரிசூலம் வரைக்கும் உங்களுக்கெல்லாம் நான் டிக்கெட் எடுக்குறேன்''’எனச் சொல்லியவாறு, எல்லோருக்குமாக 345 ரூபாய் கொடுத்து கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார்.
""பாருங்க மக்களே இந்தக் காசை கொடுக்குறதுக்கு எனக்கே கஷ்டமா இருக்குன்னா, நீங்க என்ன பாடுபடுவீங்க. இந்த ஓட்டை உடைசல் பஸ்ஸை வச்சுக்கிட்டு, டிக்கெட் கட்டணத்தை வேற வெட்கமில்லாம கூட்டிட்டாங்க''’என பேசியபடியே, ""நம்ம டி.வி.யில லைவ் ஓடிக்கிட்டிருக்கு, வா வந்து பக்கத்துல வந்து நில்லு''’என போட்டோகிராபரிடம் ஜாலியாக பேசியபடி, திரிசூலத்தில் இறங்கி, பல்லாவரத்திற்கு காரில் சென்றார் விஜயகாந்த்.
-பரமேஷ்
ஆதங்க அரசியல்! கைது எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் காவல்துறையின் கணக்கின்படியே பெருநகர சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் 12 ஆயிரம் பேர். தற்போதைய நிலவரப்படி புழல் சிறையில் காலியிடம் 2 ஆயிரம்தான். அதனால் ரிமாண்ட் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. சிறையில் இடமில்லாததால் விடுவிக்கப்பட்டதை, ஒன்றுதிரண்ட போராட்டத்தின் வெற்றியாக எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. உளவுத்துறையின் ரிப்போர்ட்டும் "போராட்டம் வெற்றி' என்றே ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. "போராட்டத்தின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டதும் முக்கிய காரணம்' என சொல்லும் காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள், ""27-ந் தேதி ஆர்ப்பாட்டம் என்று அறிந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து "சிறை நிரப்பும் போராட்டம்' என தி.மு.க. அறிவித்தது எங்களுக்கு புதிராக இருந்தது. ஆதங்கமும் கருத்து வேறுபாடும் உருவானது. இதனையறிந்த ஸ்டாலின், உடனடியாக தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அதில் தலைவர்கள் எல்லோரும் கலந்துகொண்டு விவாதித்து ஒருமித்த முடிவெடுத்ததால், போராட்டம் வெற்றியடைந்தது''‘என்கின்றனர். இதற்கிடையே, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.சை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், "பேருந்துக் கட்டண உயர்வால் மக்களிடம் அதிருப்தி அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது நமக்கு தோல்வியைத்தான் தரும்' என தங்களின் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். -இளையர் |