"நாளை முதல் ஃபேஸ்புக் அல்லது முகநூல் மூடப்படுகிறது'’என்று ஓர் அறிவிப்பு வந்தால் என்னாகும் என்று நினைத்துப் பாருங்களேன். கோடிக்கணக்கானோர் மனநலம் பாதிக்கப்படக் கூடும் என்பது நிச்சயம்.

Advertisment

modi-trumph

உலகம் முழுவதும் 200 கோடி பேர் முகநூலில் புழக்கத்தில் இருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 28 கோடி பேர் மொபைல் போனில் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள். 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 49 கோடியாக அதிகரிக்கும் என்கிறார்கள். 2019-ஆம் ஆண்டில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 26 கோடியாக இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள்.

Advertisment

தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசியல் கட்சிகள் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும், பொதுக்கூட்ட மேடைகளையும் மட்டுமே நம்பியிருந்த காலம் இருந்தது. ஆனால், 2010-ல் புதிய ட்ரெண்டை உருவாக்கும் முயற்சி தொடங்கியது. காட்சி ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் நினைத்தால் சின்ன விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தொடங்கினர்.

2011-ல் லிபியா, துனிஷியா, எகிப்து போன்ற நாடுகளின் அரசாங்கங்களை மக்கள் போராட்டம் என்ற பெயரில் 10 ஆயிரம் பேரை ஓர் இடத்தில் கூடவைத்து அதையே 24 மணி நேரமும் உலகம் முழுவதும் முக்கியச் செய்தியாக்கினர். இதன்மூலம் அந்த நாடுகளின் மக்களை மட்டுமல்ல, உலக மக்களையும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு எதிராக திருப்புவதில் வெற்றிபெற்றன.

Advertisment

modi-trumph

இந்தியாவிலும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் இந்தக் காலகட்டத்தில்தான் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்த வளர்ச்சியை தமது வளர்ச்சிக்கு பயன்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதற்கு அம்பானி, அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகள் உதவியாக இருந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற புள்ளிவிவரக் கணக்கு நிறுவனத்தின் இந்திய கிளையான ஆவ்லினோ பிசினஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை பா.ஜ.க.வும் ஐக்கிய ஜனதாதளமும் கூட்டாக 2010-ல் பிகார் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தின.

இந்த கம்பெனி ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.சி.தியாகி என்பவரின் மகன் அம்ரிஷ் தியாகிக்குச் சொந்தமானது. அதன்பிறகு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் இந்த கம்பெனியின் பங்களிப்பு இருந்தது.

இதே காலகட்டத்தில், சமூக வலைத்தளங்களில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியும் தொடங்கப்பட்டது. தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் எம்.பி.க்களே பிரதமரை தேர்வு செய்யும் நாட்டில், "பிரதமர் வேட்பாளர்' என்று பா.ஜ.க. தமது வேலையை தொடங்கிவைத்தது. வெளிநாடுகளில் உள்ள பிரம்மாண்ட கட்டுமானங்களை குஜராத்தில் இருப்பதுபோல தவறான பிரச்சாரத்தை நடத்தியது. லட்சக்கணக்கான போலி முகநூல் கணக்குகள் மூலமாக இவை பரப்பப்பட்டன.

modiஇங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் இத்தகைய பிரச்சார உத்திகளை வகுத்துக் கொடுப்பது பின்னர் தெரியவந்தது.

இந்த நிறுவனம்தான் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அந்த பிரச்சாரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 5 கோடி முகநூல் கணக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி பயன்படுத்தியதாக இப்போது திடுக்கிடும் புகார் வெளியாகி இருக்கிறது. அத்துடன், அடுத்து நடைபெறவுள்ள இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் தேர்தல்களிலும் இப்படித் திருடப்பட்ட ரகசியங்களை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியது.

முகநூல் கணக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் செயலியை தயாரித்துக் கொடுத்த அலெக்ஸாண்டர் கோகன் என்பவரிடம் இருந்தே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல்களை வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவல் உலகை பரபரப்பாக்கியது. உடனே, பா.ஜ.க. அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸுக்கும் இந்த நிறுவனத்துக்கும் தொடர்பு என்று குற்றம்சாட்டினார். பா.ஜ.க.வுக்கும் அந்தக் கம்பெனிக்கும் இடையிலான தொடர்பு வெளியாவதற்கு முன், காங்கிரஸை தொடர்புபடுத்தி தப்பிக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது. ஆனால், 2010-லிருந்தே பா.ஜ.க.வுக்கு இந்த நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதை காங்கிரஸ் அம்பலப்படுத்தியது.

இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிய நிலையில், ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஸுகர்பெர்க் தனது வாடிக்கையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருக்கிறார். "தவறான நபர்களை நம்பியதற்கான பலன் இது' என்று வேதனை தெரிவித்த அவர், "முகநூல் வலைத்தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்படும்' என்று கூறியிருக்கிறார். ஆனால், எப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சத்தையும் உடைக்கும் வல்லவர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

முகநூல் கணக்கின் ரகசியங்கள் திருடப்பட்ட பதற்றத்துடன், ஆதார் தகவல்கள் திருடப்படக்கூடும் என்ற அச்சத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.