காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட, சாதி, மதம், அரசியல் மாச்சர்யங்களைக் கடந்து ஒட்டுமொத்த தமிழகமும் குரல்கொடுக்க ஆரம்பித்துவிட்டது. காவிரி விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே சில முன்னெடுப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமுடன் எடுத்து வருகிறார் தி.மு.க. செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
மார்ச்-30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கெடுவின் இறுதி நாள்வரையிலும் மத்திய அரசு செயல்படாமல் கிடக்க, அதனை எதிர்க்க முடியாமல் வாய்மூடி மௌனியாக இருந்தது எடப்பாடி அரசு. இனிமேலும் தாமதிப்பதில் பலனில்லை என உணர்ந்த மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டத் தயாரானார். இதற்குப் பிறகுதான், தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் எடப்பாடி.
இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, ""தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ அரசியல் கலப்போ எங்களிடம் இல்லை. காவிரி விஷயத்தில் நமது உரிமையை நிலைநாட்ட இந்த அரசு எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் ஆதரிப்போம்''’என உறுதிபடக் கூறினார். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனாலும் முதல்வரையும், எதிர்க்கட்சியினரையும் சந்திக்க பிரதமரின் அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கவில்லை. இந்நிலையில், முதல்வரிடமிருந்து மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வர... எடப்பாடியைச் சந்தித்து, தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் தவிர்த்த எடப்பாடி, மார்ச் 25-ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “""மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிய இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கிறது. எனவே தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்''’என்றபோது, ’""பொறுங்கள் நல்ல முடிவு கிடைக்கும்''’என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஏப்.01-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார் ஸ்டாலின். கூட்டம் முடிந்ததும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திடீரென வள்ளுவர் கோட்டம் வந்து சாலை மறியலில் இறங்கி, எடப்பாடி அரசை திகைக்க வைத்தனர். அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் தி.மு.க.வினரும் தோழமைக்கட்சியினரும் மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். 05-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அடுத்த அதிரடி திட்டத்தையும் அறிவித்தார் ஸ்டாலின். தி.மு.க. முன்னெடுக்கும் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
தமிழக மக்களின் தன்னெழுச்சியான ஆதரவினால், முழு அடைப்பு நூறு சதவிகித வெற்றி பெற்றது. ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோரின் திடீர் பேரணியால் மெரினா கடற்கரை சாலையே ஸ்தம்பித்தது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கைதாகினர். மறுநாள் 06-ஆம் தேதி, அறிவாலயத்தில் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியபோது, "காவிரியில் இருந்து கொள்ளிடம் பிரியும் இடமான திருச்சி -முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தைத் துவங்கலாம்' என்ற ஸ்டாலின் யோசனைக்கு அனைத்துத் தலைவர்களும் ஏகோபித்த ஆதரவு தெரிவித்தனர்.
காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்குவதற்கு 30 மணி நேரத்திற்கும் குறைவான அவகாசம் இருந்ததால், பயணத்திட்டமிடலில் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் அதனையும் சமாளித்து உரிமை மீட்புப் பயணத்திற்காக திருச்சி வந்தார் ஸ்டாலின். மாலை 4 மணிக்கு முக்கொம்பிலிருந்து பயணத்தைத் துவக்கி வைத்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,’’""அகண்ட காவிரி இப்போது வறண்ட காவிரியாகிவிட்டது. இது வெறும் வேடிக்கை பயணம் அல்ல, உரிமைக்கான பயணம்''’என்றார்.
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, சி.பி.எம்.மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சி.பி.ஐ.மாநிலச் செயலாளர் முத்தரசன், ம.ம.க. ஜவாஹிருல்லா, முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், வி.சி.க. தலைவர் தொல்.திருமா, காங்கிரஸ் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் இந்தப் பயணத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர். பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் கூட்டத்தால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையே ஸ்தம்பித்தது. இரண்டாம் நாள் பயணம் தஞ்சை சூரக்கோட்டையிலிருந்து காலை 8 மணிக்குத் தொடங்கியது. திருநாவுக்கரசர், முத்தரசன் ஆகியோருடன் பயணத்தைத் தொடங்கிய ஸ்டாலின், காசவளநாடு புதூர், தெக்கூர், நாட்டரசன் கோட்டை பாலம், ஈச்சங்கோட்டை, வடக்கூர், செல்லம்பட்டி, ஆதனக்கோட்டை என கிராமத்து வயல்காடு, ஆற்றங்கரை வழியாக பயணத்தைத் தொடர்ந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. கல்லணை பகுதியில் வறண்டு கிடந்த காவிரியில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் உரை கேட்க வெள்ளமென டெல்டா மக்கள் திரண்டிருந்தனர்.
09-ஆம் தேதி காலை கொட்டும் மழையிலும் தனது தோழமைத் தலைவர்களுடன் பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்டாலின். காவிரி உரிமை மீட்புப் பயணம் உத்வேகத்துடன் நடந்து கொண்டிருக்க, 11-ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். இதற்கு தி.மு.க.வின் ஆதரவை வழங்கியுள்ளார் ஸ்டாலின். தி.மு.க. முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு மற்ற கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் தார்மீக ஆதரவு தரும் நிலையில், அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து காவிரி பிரச்சினையில் தமிழகம் ஒருமித்த உணர்வுடன் இருக்கிறது என்ற அழுத்தத்தை மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர்ந்து உணர்த்திவருகிறார்.
இந்த நிலையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 12-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம் அனைவரது வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றக்கோரி மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, சு.திருநாவுக்கரசர், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, அழைப்பு விடுத்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் களத்தில் கவனிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த தமிழகத்தின் போர்ப்பாட்டு திரைஉலக நட்சத்திரங்களையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இரண்டே நாட்களில் நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. திரை உலகம் சார்பாக நடிகர் சங்க வளாகத்திற்குள் உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதிக்காததால், 08-ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பகல் 1 மணிவரை அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்துப் பேச ஆரம்பித்தால், தேவையற்ற சீண்டல்கள், சச்சரவுகள் வரும் என முன்கூட்டியே நடிகர் சங்க நிர்வாகிகளுக்குள் ஆலோசிக்கப்பட்டு, பேசும் முடிவு கைவிடப்பட்டது. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் அமருவதற்கு தனி மேடையும் சினிமா தொழிலாளர்கள் அமருவதற்கு சாமியானா பந்தலும் போடப்பட்டிருந்தது. முதல் ஆளாக மேடைக்கு வந்தார் விஜய்.
மேடையில் பேசமுடியாது என்பதால், தனது போயஸ் கார்டன் வீட்டைவிட்டு வாசலில் மீடியாக்களிடம் பேசிய ரஜினி, ""காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்''’என எச்சரித்துவிட்டு, வள்ளுவர் கோட்டம் கிளம்பினார். மேடையில் கமலும் ரஜினியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
முன்னணி ஹீரோக்கள் அனைவரும் கலந்து கொள்ள, வழக்கம்போல் இந்தப் போராட்டத்திற்கும் வராமல் டிமிக்கி கொடுத்து எல்லோரது அதிருப்தியையும் சம்பாதித்தார் அஜீத். "இனிமேலும் அஜீத்தின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆகவேண்டுமா?' என பலமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டது தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும்.
தமிழகத்தில் அனைவரது உணர்வுகளும் காவிரி உரிமை மீட்புக்காக!…
-ஈ.பா.பரமேஷ், ஜெ.டி.ஆர்., இரா.பகத்சிங்
படங்கள்: எஸ்.பி.சுந்தர்
கொடியுடன் உயிர்விட்ட தி.மு.க. பிரமுகர்!
காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மு.க.ஸ்டாலின் முக்கொம்பில் ஆரம்பித்தபோது அவருடன் பயணித்தவர் தொட்டியம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீமானூர் பிரபு. ஜீயபுரத்தில் ஸ்டாலின் நடந்து சென்றபோது, அவருக்குப் பின்னால் கையில் தி.மு.க. கொடியை ஏந்தி ஆவேசமாக குரல் எழுப்பியபடி பிரபுவும் நடந்து சென்றபோது, திடீரென நெஞ்சுவலியால் துடித்தப்படி, கையில் பிடித்திருந்த தி.மு.க. கொடியுடன் மயங்கிச் சரிந்தார். சுற்றியிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியாகி, உடனே காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றும் பிரபுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 1986-ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க.வில் இருக்கும் பிரபு, மாவட்ட பிரதிநிதி, ஒ.செ., ஒன்றியக் கவுன்சிலர் என படிப்படியாக வளர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கே.என்.நேருவின் சிபாரிசால் பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தவர்.