ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை ஐந்து மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு நேரடி சுற்றுப்பயணம் செல்வதைத் தவிர்த்துவிட்டு, சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கு வரவழைத்து, நிர்வாகிகள் பட்டியலை, ரஜினியின் ஒப்புதலுடன் அறிவித்து வருகிறார் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் வி.எம்.சுதாகர்.
மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் போது, மன்றத்தினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தி ரஜினி பேசும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. நிர்வாகிகள் பட்டியல் வெளியானதும் லேசான முணுமுணுப்புகள் கிளம்பினால், அதிருப்தியாளர்களை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து கூல் பண்ணி அனுப்புகிறார் ரஜினி.
கடந்த ஒருவாரமாக இப்படி நடந்து வந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்த ராகவேந்திரா மண்டபத்துக்கு திடீரென வந்தார் ரஜினி.
உற்சாகக் குரல் எழுப்பிய ரசிகர்களிடையே மைக் பிடித்த ரஜினி, “""அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதே நமது நோக்கம். எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத் தரத்தேவையில்லை. அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்திப்பதற்கு சில காலம் ஆகும். அதன் பிறகுதான் எனது சுற்றுப்பயணம் இருக்கும்'' என சுருக்கமாகவும் நறுக்காகவும் பேசினார் ரஜினி.
கமல் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிவிட்ட நிலையில் தனது கட்சியைத் தொடங்குவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அந்த நேரத்துக்கிடையே தான் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில், தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு, தனது ரசிகர்களிடமும் தமிழக மக்களிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் ரஜினி.
ஏப்ரலில் "காலா' ரிலீஸ், தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ "2.0', அதன்பின் சன் பிக்சர்ஸ் படம் என சினிமாவிலும் பிஸியாக இருக்கும் ரஜினி, அரசியலிலும் பிஸியாகும் நேரத்திற்காக காத்திருக்கிறார்.
-ஈ.பா.பரமேஷ்