அரசியல் அறிவிப்புக்குப் பிறகான முதல்மேடையை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ரஜினி.
தனக்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் தனது குருவான எம்.ஜி.ஆருக்கு சிலை அமைத்துவிட்டு, அதைத் திறப்பதற்கு ரஜினியிடம் நேரம் கேட்டு ஆறுமாதம் காத்திருந்தார் புதிய நீதிக்கட்சித் தலைவரும் பா.ஜ.க. அபிமானியுமான ஏ.சி.சண்முகம். மார்ச் 05-ஆம் தேதி எம்.ஜி.ஆர். சிலையைத் திறக்க ஒத்துக்கொண்டார் ரஜினி. இதற்காக ஏ.சி.எஸ். தரப்பிலிருந்து அட்வான்ஸ் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ரஜினி மக்கள் மன்றத்தின் மேலிட உத்தரவுப்படி, கிட்டத்தட்ட பத்து மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில், மாவட்டத் தலைவர்கள் தலைமையிலான மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரியில் மதியம் 1:00 மணியிலிருந்தே குவியத் தொடங்கினர். கோயம்பேட்டிலிருந்து, கல்லூரி அமைந்துள்ள வேலப்பன்சாவடி வரையிலான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரஜினியை வரவேற்று வரிசையாக ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர் ரஜினி ரசிகர்கள்.
ரஜினியின் வருகை தாமதமானதால், கச்சேரியை இழுத்துக்கொண்டிருந்தனர் சங்கர்-கணேஷ் குழுவினர். சரியாக ஐந்தரை மணிக்கு வந்த ரஜினி, அவரது காரிலிருந்து இறங்கி, ஏ.சி.எஸ். ஏற்பாடு செய்திருந்த, திறந்தவெளி வசதியுள்ள காரில் ஏறி, கூட்டத்தினரைப் பார்த்துக் கையசைத்தபடியும் கும்பிட்டபடியும் வர, ஒரே ஆரவாரம்.
நிகர்நிலை பல்கலையின் வேந்தரான ஏ.சி.சண்முகம், ""அண்ணன் ரஜினியுடன் எனக்கு 30 ஆண்டு பழக்கம். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, மூன்றுமுறை அழைத்தும் மறுத்து, நாலாவது முறை அவரைச் சந்தித்தார் ரஜினி. எவ்வளவோ வற்புறுத்தியும் அரசியலுக்கு வர மறுத்துவிட்டவர், இப்ப கடவுள் கட்டளையிட்டதால், வந்துட்டாரு. ’20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் எம்.ஜி.ஆர். அதே போல் 21-ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் அண்ணன் ரஜினி. ராமனுக்கு லட்சுமணன் போல், ரஜினி நாடாண்டாலும் காடாண்டாலும் அவர்கூடவே இருப்பேன்''’என செமத்தியாக பொளந்துகட்டினார். சினிமா பிரபலங்களும் சில ரிடையர்டு அரசியல் புள்ளிகளும் மேடையை நிறைத்திருந்தனர்.
அவர்களுக்கு ரஜினி தன் கையால் விருது வழங்க, அனைவரும் ரஜினி முதல்வராக வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினர். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரோ, ""கோவைத் தம்பியின் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்' படத்தில் அசோஸியேட் டைரக்டராக பணியாற்றியதையும் அப்போது அந்தப் படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆர். வருவதற்கு முன்னால் பூனைப்படை, மோப்ப நாயெல்லாம் வந்ததாகவும் அள்ளிவிட்டார். டைரக்டர் பி.வாசுவோ, ""எங்க அப்பா பீதாம்பரம் மேக்-அப் போட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர். ஆகியோர் முதல்வரானார்கள். அவர் கடைசியாக மேக்-அப் போட்டது "ராணுவவீரன்' படத்தில் ரஜினிக்குத்தான். எனவே ரஜினியும் முதல்வராவார்''’என சென்ட்டிமெண்ட்டாகப் போட்டுத் தாக்கினார்.
இரவு 8:20-க்கு மைக் முன்பாக வந்தார் ரஜினி. “""கலைஞர், மூப்பனார், சோவிடம் அரசியல் கத்துக்கிட்ட எனக்கு அரசியல்ங்கிறது பூப்பாதை இல்லை முள்பாதை. பாம்புகள் படை எடுக்கும் பாதைன்னு நல்லாவே தெரியும். ஜெயலலிதா இருந்தபோது, ஏன் வரல; பயமான்னு கேட்குறாங்க. ஜெ.வுக்கு எதிராகவே வாய்ஸ் கொடுத்தவன் நான். மாஸ் சைக்காலஜி, அதாவது மக்களோட மனநிலை தெரிந்தவன் தான் அரசியல்ல ஜெயிக்க முடியும். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தவரைக்கும் ரேஷன் அரிசி விலையை ஏத்தல.
என்னுடைய வாழ்க்கையில் எம்.ஜி.ஆரின் பங்கு முக்கியமானது. லதாவை நான் கல்யாணம் பண்ண நினைச்சப்போ, சில எதிர்ப்புகள் வந்துச்சு. லதாவின் உறவினரான ஒய்.ஜி.பி.கிட்ட எம்.ஜி.ஆர். பேசுனதுக்கப்புறம்தான் சம்மதிச்சாங்க. அதேமாதிரி ராகவேந்திரா மண்டபம் கட்டும் போதும் எம்.ஜி.ஆர்.தான் ஹெல்ப் பண்ணுனார். சந்தேகம் இருந்தா, அப்ப ஹவுசிங் மினிஸ்டரா இருந்த திருநாவுக்கரசு இப்பவும் இருக்காரு கேட்டுக்கங்க...''’என பேசிக்கொண்டே வந்த ரஜினி, வெளியிலும் உள்ளும் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்ததும், ""தமிழ்நாட்டுல இப்ப அரசியல் தலைமையில் வெற்றிடம் இருக்கு. நல்ல தலைவர்கள் இல்லை. அதனால நல்லாட்சி தந்த எம்.ஜி.ஆர். ஆட்சியை நான் தருவேன்''’ என வெளிப்படையான சவால்களோடு 40 நிமிடம் பேசினார்.
ரஜினியின் பேச்சு மீடியாக்கள் மூலம் பொதுமக்களை ஈர்த்து, அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கமலுக்கும் ஸ்டாலினுக்கும் நேரடியாக சவால் விடுத்திருப்பதாகக் கருதப்பட்டது.
தி.மு.க.வின் சீனியர் ஒருவரிடம் கேட்டபோது, “""ரஜினி நேரடியா ஸ்டாலினுக்கே செக் வைக்குற மாதிரிதான் பேசியிருக்காரு. ராகவேந்திரா மண்டப விஷயத்துல எம்.ஜி.ஆரோட உதவி ரஜினிக்கு இருந்துச்சுங்கிறதெல்லாம் சரிதான். ஆனா அந்த மண்டபத்தை திறந்து வச்சது முதல்வரா இருந்த கலைஞர்ங்கிறத மட்டும் வசதியா மறந்துட்டாரு. அதேபோல் ஆன்மிக அரசியல்ங்கிறத மீண்டும் வலியுறுத்தியிருப்பதன் மூலம், பா.ஜ.க.வுக்கு பச்சைக்கொடி காட்டிட்டாரு. ரஜினி சொன்ன எம்.ஜி.ஆரின் ஆட்சியை நடத்திய ஜெயலலிதாவும் அவரின் தோழி சசிகலாவும் ஜெயிலுக்குப் போயிருக்கிறார்கள். ரஜினி சொல்வது எம்.ஜி.ஆர். ஆட்சி என்றாலும் அதன் பின்னணியில் இருக்கப் போவது பி.ஜே.பி. ஆட்சிதான்''’என்கிற நிதர்சனத்தைச் சொன்னார் அந்த சீனியர்.
ரஜினியின் பேச்சுக்கு அரசியலில் பல திசைகளிலிருந்தும் எதிர்ப்புச் சூறாவளி சுழன்றடித்துக் கொண்டிருக்க... அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதே நேரத்தில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி அலைகள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துவிட்டன. பல மாவட்டங்களில் 30 ஆண்டுகளாக ரஜினி மன்றத்திற்காக உழைத்தவர்களுக்கு பதவிகள் கொடுக்காமல், புதிதாக வந்த பணக்காரர்களுக்கு பதவிகள் வழங்கியிருப்பதாக புகார்கள் குவியத் தொடங்கிவிட்டன.
கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர் டாக்டர் இளவரசன். டாக்டர் இராமதாஸ், பங்காரு அடிகளார், ஜெகத்ரட்சகன், போன்றவர்களின் உறவினர். விருத்தாசலத்தில் செந்தில் மருத்துவமனை, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, கேஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க் என செல்வச் செழிப்புக்கு பஞ்சமில்லாதவர். இளவரசனை மாவட்ட பொறுப்பாளராக அறிவித்ததும் ரஜினி ரசிகர்கள் தலைமையிடம் புகார் கூறியிருக்கிறார்கள். இந்த முடிவு தலைமை எடுத்தது. மாற்றம் இல்லை. அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் போஸ்டிங் போட பணத்தை வாங்கிக்கொண்டு நிர்வாகிகள் பட்டியலை மேலிடத்தில் கொடுத்திருப்பதாக மாவட்டத் தலைவர் தாயுமானவன் மீது, ராஜு மகாலிங்கத்திடமே புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மன்றத்தின் மாஜி மாநிலத் தலைவர் சத்தியநாராயணன் ஆதரவாளர்கள், இப்போதைய தலைவர் சுதாகர் ஆதரவாளர்கள் என்ற இரு கோஷ்டி உள்ளது. சில மாவட்டங்களில் இரு கோஷ்டிக்கும் சரிசமமாக பதவிகளும், சில மாவட்டங்களில் சத்தி ஆதரவாளர்களைப் புறக்கணிக்கும் வேலைகளும் நடக்கின்றன. சத்தியின் ஆளான மதுரை ஜாபர் மீண்டும் லைம்லைட்டுக்கு வரப்போகும் வேளையில், விருதுநகர் மாவட்ட ரஜினி மன்றச் செயலாளர் தன்ராஜ் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து தன்ராஜ் நம்மிடம் பேசியபோது, ""1987-ல் "தர்மத்தின் தலைவன்' ரஜினி மன்றம் ஆரம்பிச்சவன் நான். "படிக்காதவன்' ரிலீசின்போது, கமல் மன்றத்தினரை வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போனேன். அந்தச் சம்பவத்தை மனசுல வச்சுக்கிட்டும், நான் தலித் என்பதாலும் சத்தி விசுவாசி என்பதாலும் எனக்குப் பதவி தராமல் மெஜாரிட்டி சாதியைச் சேர்ந்த முருகன் என்கிறவருக்கு தலைவர் பதவி வழங்கியுள்ளனர்''’என பொருமினார்.
மாவட்டத் தலைவர் முருகனோ, ""நாங்க சாதியோ மதமோ பார்ப்பதில்லை. அவருதான் சாதி பெயரில் பிரச்சனை பண்றாரு. நாங்க எல்லாருமே தலைவர் ரஜினியின் சொந்தம் அவ்வளவுதான்''’என்றார். ஆனால் பல மாவட்டங்களிலும் குமுறல்கள் ஓயவில்லை.
இதனைச் சரிசெய்ய ரஜினி மக்கள் மன்றத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் வி.எம்.சுதாகர், மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகிய இருவரும் சில மாவட்டங்களுக்கு விசிட் அடித்து, மன்றத்தினரின் பல்ஸ் பார்த்து நிர்வாகிகளை நியமித்து வந்தனர். அதில் சில கசமுசாக்களும் கரைச்சல்களும் ஏற்பட்டதால், சென்னை -ராகவேந்திரா மண்டபத்திற்கு அழைத்து நிர்வாகிகளை நியமிக்க ஆரம்பித்தனர். அந்தப் பட்டியலிலும் குளறுபடி இருப்பதாக பேச்சு கிளம்பியதும் மீண்டும் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர் சுதாகரும் ராஜு மகாலிங்கமும்.
""இருவரும் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகபட்டணம் மாவட்டங்களுக்கு விசிட் போய்விட்டுத் திரும்பியதும் மீண்டும் ஒரு பொதுமேடையில் அதிரடிப் பேச்சுக்குத் தயார் ஆவார் ரஜினி''’ என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.
-சி.என்.இராமகிருஷ்ணன், ஈ.பா.பரமேஷ்வரன், சுந்தரபாண்டியன்
படங்கள்: எஸ்.பி.சுந்தர்