தன்னை உலகநாயகனாக முன்னிறுத்திக்கொள்ளும் மோடிக்கு சினிமாத்துறை சார்ந்த ஒருவரிடமிருந்து இந்தளவு தாக்குதல் நடைபெறும் எனத் தெரியாது. மதவெறியாளர்களால் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து நடிகர் பிரகாஷ்ராஜின் ட்விட்டர்கள் அரசியல் ஏவுகணைகளாகி, மேடைப்பேச்சுகள் அஸ்திரங்களாக பாய்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகாவில் ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், ""கௌரியின் மரணத்தை ஒருசிலர் மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர். அவர்கள் யாரென்றும், அவர்கள் கொள்கை எதுவென்றும் நமக்கெல்லாம் தெரியும். அவர்களில் சிலர் நம் பிரதமரால் ட்விட்டரில் பின்தொடரப்படுபவர்கள். பிரதமரின் மவுனம் என்னைக் கவலைகொள்ளச் செய்கிறது. கௌரியின் மரணத்தைக் கொண்டாடுபவர்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்கிறாரா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அவர் என்னைவிட மிகப்பெரிய நடிகர் என நிரூபிக்கப் பார்க்கிறார்''’என முதல் அஸ்திரத்தை ஏவினார்.
பிரகாஷ்ராஜின் இந்தப்பேச்சு பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்த, லக்னோ நீதிமன்றத்தில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவில் பேசியதற்கு லக்னோவில் வழக்கு தொடர்ந்தால், அடங்கிப்போவார் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ட்விட்டர் வழியாக பதில்சொல்லத் தொடங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். த்ன்ள்ற்ஹள்ந்ண்ய்ஞ் என்ற ஹேஷ்டேக்குடன் பா.ஜ.க. மோடி, இந்துத்வா என அனைத்துத் தரப்பினர் குறித்தும் கருத்து தெரிவித்துவருகிறார்.
""பெரும்பான்மையானவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாட்டின் பிரதமர் மீது, ஒரு குடிமகனாகவும், ஒரு கலைஞனாகவும் கருத்து தெரிவிக்கவோ, குற்றம்சாட்டவோ எனக்கு உரிமை இருக்கிறது. எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவையோ எனது உரிமையை நான் பிரயோகிப்பேன்''’என தன் விமர்சனங்கள் குறித்து தீர்க்கமாக பதிலளிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
""பா.ஜ.க. மற்றும் காங்கிரஸின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, "150 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறுவதே நம் இலக்கு' என பேசியிருந்தார் பிரதமர் மோடி. ஆனால், தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வினருக்கு அத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்கவில்லை. ‘குஜராத் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள் பிரதமரே... ஆனால், இந்த வெற்றியால் தாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியோடுதான் இருக்கிறீர்களா? தங்கள் வெற்றியில் எங்கே போயின அந்த 150+தொகுதிகள்? பிரிவினைவாத அரசியல் வேலை செய்யவில்லை. இந்தத் தேர்தலில் விவசாயிகள், ஏழை இளைஞர்களின் புறக்கணிக்கப்பட்ட குரல் கொஞ்சம் அதிகமாக ஒலித்திருக்கிறது. உங்களுக்குக் கேட்கிறதா?'' என பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பினார்.
சமூக செயற்பாட்டாளர்கள் ஜனவரி 29ஆம் தேதியன்று ஒன்றுகூடிய நிகழ்வில், பிரகாஷ்ராஜ், ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் பிரகாஷ்ராஜிடம் நடிப்பிற்காக டிப்ஸ் கேட்ட ஜிக்னேஷ் மேவானியிடம், ‘"என்னிடம் கேட்பதற்குப் பதிலாக, பிரதம மந்திரியிடமே நீங்கள் கேட்கலாமே?'’என கிண்டலடிக்கும் விதமாகக் கூறியது வைரலானது.
"இந்தியா டுடே' நடத்திய விழாவில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், ""கலைத்துறை மீது இந்துத்வவாதிகள் நடத்தும் தாக்குதல் குறித்து கடுமையாக விமர்சித்தார். அப்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் குறுக்கிட்டு பிரகாஷ்ராஜுடன் விவாதம் நடத்தத் தொடங்கினார். அவருக்கு பதிலளித்த பிரகாஷ்ராஜின் உரை பொதுத்தளத்தில் அதிக கவனம்பெற்றது. ""என் தோழர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதைக் கொண்டாடுபவர்கள் யாரென்று தெரிந்திருந்தும் பிரதமர் மவுனமாக இருக்கலாம். ஆனால், அந்த மவுனம் பேசுகிறது, சத்தமாக பேசுகிறது''’என கலங்கிய கண்ணோடு பேசினார். மேலும், ‘""அவர்கள் என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்கிறார்கள். ஆனால் நானோ... மோடி, அமித்ஷா, அருண்ஜேட்லிக்கு எதிரானவன். என்னைப் பொறுத்தவரை அவர்கள்தான் இந்துக்களே கிடையாது''’என அவர் பேசி முடிக்கையில் அரங்கமே அதிர்ந்தது.
"இத்தனைக்காலம் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது ஏன் வாய்திறக்கிறீர்கள்' என்ற கேள்வியும் எழுப்பப்படாமல் இல்லை. அதற்கு, ‘""நான் முன்பே கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். அதற்காக இப்போது எனக்கிருக்கும் கேள்வி கேட்கும் உரிமை பறிக்கப்படுமா? நான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. என் மனசாட்சிக்கு பதில் சொல்கிறேன். என் மனசாட்சி நீ மவுனமாக இருக்காதே என என்னை முன்தள்ளுகிறது''’என பதிலளித்தார்.
கர்நாடக மாநிலம் சிர்சா மாவட்டத்தில் ‘"நம் சட்டம், நம் பெருமை'’என்ற தலைப்பில் பிரகாஷ்ராஜ் உரை நிகழ்த்தினார். அவர் பேசிமுடித்த பின் அந்த மேடையில், களங்கத்தை அகற்றிப் புனிதப்படுத்துவதாகக் கூறி, பசு மாட்டு மூத்திரத்தை தெளித்துவிட்டுச் சென்றனர் பா.ஜ.க.வினர். பிரகாஷ்ராஜோ, "நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம், மூத்திரத்துடன் வந்து இந்த சுத்தப்படுத்தும் வேலையைச் செய்வீர்களா?' என கிண்டலாக கேட்டார். எப்படி இந்த தைரியம் என்பதற்கும் அவரிடமிருந்து பதில் வெளிப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், ""ஒரு கலைஞனாக நான் குரலெழுப்புகிறேன். படைப்பாளிகள் கோழைகளாகிவிட்டால், இந்த சமூகமும் கோழையாகிவிடும்''’எனச் சொல்லி முடித்தார் பிரகாஷ்ராஜ். அரசியல் கட்சித் தொடங்க நினைக்கும் சீனியர் நடிகர்களே மோடியை விமர்சிப்பதென்றால் தயங்குகின்ற நிலையில், நேருக்கு நேராகக் கேள்வி கேட்பதுபோல குடைந்தெடுக்கும் பிரகாஷ்ராஜின் தில்... நாடு முழுக்க பரபரப்பாகியிருக்கிறது.