தனது மகள் திருமண அழைப்பிதழை அளிக்க வந்த இந்திய குடியரசு கட்சித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செ.கு.தமிழரசனிடம் ஒரு மணி நேரம் கலந்துரையாடியிருக்கிறார் ரஜினி.
சந்திப்புக் குறித்து செ.கு.தமிழரசனிடம் நாம் கேட்டபோது, ""பிப்ரவரி 4-ந் தேதி நடைபெறும் திருமணத்திற்கான அழைப்பிதழை அளிக்க நேரம் கேட்டபோது, உடனே அப்பாயின்ட்மெண்ட் தந்தார். என்னைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார் ரஜினி. என்னிடம் அவர் காட்டிய அன்பும் எளிமையும் என்னை வியக்க வைத்தது. நல்ல நினைவு சக்தி அவருக்கு. அதாவது, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி 2015-ல் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் ரஜினியும் நானும் அருகருகே அமர்ந்திருந்தோம். அதனை தற்போது நினைவுகூர்ந்து, அன்றைக்கு நாங்கள் பேசிக்கொண்டதை விவரித்தபோது அவரது நினைவாற்றல் என்னை வியக்க வைத்தது.
தமிழகத்தின் அரசியல் சூழலையும் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள் தற்போதைய அரசியல் தலைவர்களைவிட அவருக்கு நிறைய தெரிகிறது. அப்படிப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்கிற வேகம் அவரிடம் இருப்பதை உணர முடிந்தது. அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து என்னிடம் விவாதித்தபோது எனக்குத் தெரிந்தவற்றை விவரித்தேன். தன்னை சூப்பர் ஸ்டாராக்கிய தமிழக மக்களுக்கு -குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களுக்கு உழைத்திட வேண்டும் என்கிற சிந்தனை ரஜினியிடம் இருப்பதை அவருடனான பேச்சில் அறிந்துகொள்ள முடிந்தது. தவிர, பல்வேறு அரசியல் குறித்து விவாதிக்கவும் செய்தார் ரஜினி. அவருடைய அரசியல் வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்கிறார் மிகஅழுத்தமாக.
அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் பலரை சந்தித்தப்படிதான் இருக்கிறார் ரஜினி. சில சந்திப்புகள் வெளியே தெரிகிறது; பல சந்திப்புகள் வெளியே தெரிவதில்லை. இந்த சந்திப்புகளில், மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து கொள்கைகளை உருவாக்கும் தனது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். அத்துடன், கட்சி ஆரம்பிக்கும்போது முதல் குரலாக நதிநீர் இணைப்பு குறித்து பேசவிருக்கிறாராம் ரஜினி.
-இளையர்