"இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை நடத்தக்கூடாது' -இப்படி அந்தக் கட்சியின் இரண்டு மாவட்டச் செயலாளர்களே உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்கள். விசாரிக்கத் தொடங்கினோம், கட்சி நிலவரத்தை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கடந்த 2015-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தா.பாண்டியனே மீண்டும் மாநிலச் செயலாளராக முயற்சிசெய்து முடியாமல் போனது. சி.மகேந்திரனின் ஆதரவாளர்கள் அவருக்கு முட்டுக்கட்டை போட்டனர். அதையடுத்து, ஏற்பட்ட குளறுபடியைப் பயன்படுத்தி முத்தரசனை வேட்பாளராக நிறுத்தி, சி.மகேந்திரனை 2 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் தா.பாண்டியன். அவருடன் கோவை சுப்பராயனும் கைகோர்த்திருந்தார்.
முத்தரசன் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று கடலூர் மாவட்டச் செயலாளர் எம்.சேகரும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஏ.வேணுகோபாலும் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிற நிலையில், அடுத்த மாநாடும் நெருங்கிவிட்டது. "2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சியின் அகில இந்திய மாநாடு நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அதற்கு முன்னதாக மாநில மாநாடுகள் நடந்து மாநிலச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் மாநாடுகள் நடைபெற்று மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதன் முடிவில் மார்ச் 25-ஆம் தேதி மன்னார்குடியில் மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்குத்தான் இப்போது தடை கோரி இருக்கிறார்கள்.
இதனிடையே, சி.மகேந்திரன் மாநிலச் செயலாளர் ஆகவேண்டும் என்ற விருப்பமும் அதற்கான சூழலும் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மா.செ.க்கள் ஆதரவும் உள்ளது என்கிறார்கள் தோழர்கள். ஆனால், மீண்டும் முத்தரசன் அல்லது சுப்பராயன் மாநிலச் செயலாளராக வேண்டும் என்றும் ஒரு பகுதியினர் விரும்புவதால், கட்சிக்குள் இந்த மாநாட்டிலும் கோஷ்டிகளாகத்தான் செயல்படும் நிலை இருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில், மூத்த தலைவர்களான ஆர்.நல்லகண்ணுவும், தா.பாண்டியனும் இந்தமுறை கோஷ்டி மனப்பான்மையை தவிர்த்து போட்டியின்றி ஒருவரைத் தேர்வு செய்ய விரும்புவதாக மூத்த தோழர்கள் தெரிவித்தனர்.
""பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுசேருவதில்தான் கம்யூனிஸ்ட்டுகளிடையே குழப்படி என்றால், சொந்தக் கட்சிக்கான தலைமைத் தேர்விலும் குழப்படியா?'' என்று புருவத்தை உயர்த்துகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-அறிவு