தனது நற்பணி இயக்கத்தின் மாவட்டத் தலைவர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்திய கமல், மாநிலப் பொறுப்பாளர் கோவை தங்கவேலிடம் சில அசைன்மெண்டுகளைக் கொடுத்துவிட்டு ‘"சபாஷ் நாயுடு'’ பட விஷயமாக அமெரிக்கா பறந்துவிட்டார். கமலின் அசைன்மெண்ட்படி கமல் நற்பணி இயக்கத்தின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மதுரைக்கு வருமாறு அழைத்தார் தங்கவேல்.
சென்றமுறை மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, அழைத்து வந்திருந்த "பிக்பாஸ் டீம்' குறித்து மதுரை மாவட்ட நிர்வாகிகளிடம் அதிருப்தி கிளம்பியதால், இந்த முறை அந்த டீமை தவிர்த்துவிட்டு, கமலுடன் பல வருடங்களாக பயணிக்கும் டைரக்டர் ராசி.அழகப்பன், எழுத்தாளர் சுகா (இவர்தான் "பாபநாசம்'’படத்தில் கமல் பேசிய நெல்லை வட்டார மொழிக்கு உறுதுணையாக இருந்தவர்) இவர்களுடன் மட்டும் வந்திருந்தார் தங்கவேல்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தங்கம் கிராண்ட் ஓட்டலில் காலை 9 மணிக்கே அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஆஜராகிவிட்டனர். தமிழகம் மட்டுமல்லாது, புதுச்சேரி, கர்நாடகா, மும்பையிலிருந்தும் கமல் நற்பணி இயக்க நிர்வாகிகள் வந்திருந்தனர்.
11.30-க்கு கூட்டம் ஆரம்பித்ததும் முதலில் பேச வந்தார் கோவை தங்கவேல். ""அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது சில யுக்திகள் தேவைப்படும். ஆனால் நம்ம சார் (கமல்), உங்களின் சக்தியை நம்பித்தான் கட்சி ஆரம்பிக்கிறார். தனது நண்பர்களிடம் நமது நற்பணி இயக்கத்தாரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் "எங்க ஆளுங்க' என்றுதான் சார் சொல்வார். நாம் எல்லோரும் கைகோர்த்து இந்த அரசியல் களத்தில் இறங்குவோம். உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லுங்கள்''’என சுருக்கமாகப் பேசி அமர்ந்தார்.
மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கோமகன், ஆலோசகர் பாலமுருகன், துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் பேசியபோது, ""இராமேஸ்வரத்தில் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சியை தமிழகமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் எழுச்சியுடன் திரள்வோம். தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக மத்திய சென்னை இருக்கும். மாநிலப் பொறுப்பாளர் தங்கவேலின் எண்ணப்படி நடந்து கொள்வோம்''’என்றனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த பாபு என்பவர், ""தி.மு.க.வினரைவிட, அ.தி.மு.க.வினர்தான் நமக்கு அதிக நெருக்கடி கொடுக்கிறார்கள். எனது ஏரியாவில் வைத்திருந்த ஃப்ளக்ஸ் பேனரையும் சுவர் விளம்பரத்தையும் போலீஸ் சப்போர்ட்டுடன் ஆளுங்கட்சியினர் அழித்துவிட்டனர்''’என குமுறினார். பெரும்பாலான மாவட்டத் தலைவர்களின் குமுறலும் இதே ரீதியில்தான் இருந்தது.
இவர்களின் குமுறலுக்கு பதில் அளித்த ராசி.அழகப்பனும் சுகாவும், ""அரசியல் என இறங்கிவிட்டாலே எதிராளிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் ஆரம்பகட்டத்தில் நீங்கள் சமாளித்தால், மற்றதை தலைவர் பார்த்துக் கொள்வார். யாரிடமும் சண்டை போடாமல் கிடைக்கும் சுவர்களில் விளம்பரம் செய்யுங்க. யாரையும் வசைபாடி, குறிப்பாக ரஜினி சாரைச் சீண்டாமல் வாசகங்கள் எழுதுங்கள். பிப். 21-க்குப் பிறகு நாளை நமதே, வெற்றி நமதே''’என நம்பிக்கையூட்டினர். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, அமெரிக்காவிலிருந்து, அரைமணி நேரத்திற்கு ஒருமுறை தங்கவேலைத் தொடர்புகொண்டு நிலவரங்களைக் கேட்டபடியே இருந்தார் கமல்.
வந்திருந்த அனைவருக்கும் மதியம் தடபுடல் விருந்து நடைபெற்றது. கூட்டத்திற்கான செலவை கமல் நற்பணி இயக்கத் தலைமை ஏற்றுக்கொண்டாலும் மற்ற ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர் மதுரை மாவட்ட நிர்வாகிகளான அழகர், மயில்ராஜ், ஜாபர். அனைவரின் விருப்பப்படி மதுரையில் 21-ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் கமல்.
ரஜினி மக்கள்மன்றத்திலோ, சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி மா.செ. குறித்த சர்ச்சையும் சலசலப்பும் கிளம்பியுள்ளது. "மா.செ. ஏ.ஜே.ஸ்டாலின் மீது பணமோசடி உட்பட சில வழக்குகள் இருக்கின்றன. இப்படிப்பட்டவரை மா.செ.வாக நியமிக்கலாமா?' என்ற "ஹாட் டாக்' தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் ஓடிக்கொண்டிருந்தது.
இதுபற்றி ஏ.ஜே.ஸ்டாலினிடம் நாம் கேட்டபோது, ""அரசியலுக்கு வந்துட்டாலே அவதூறு கிளப்புவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கு. இருபது வருஷத்துக்கு முன்னால முடிஞ்சுபோன ஒரு கேஸைப் பத்தி இப்ப கிளறிவிடுகிறார்கள். 1979-ல் தலைவர் பேரில் ரசிகர் மன்றத்தை பூக்கடை நடராஜன், ஆரம்பிச்சவுடன் தூத்துக்குடியில் மன்றம் ஆரம்பிச்சவன் நான். "தம்பிக்கு எந்த ஊரு' ரிலீசப்ப, கமல் மன்றத்தினரால் கத்திக்குத்து வாங்கியவன். இப்ப எங்க மன்றத்தின் டக்ளஸ் மேலே அவர் சார்ந்த அரசியல் கட்சி தொடர்பா போஸ்டர் ஒட்டுனது, ஃப்ளக்ஸ் வச்ச வழக்கு இருக்கு. அதுவும் 300 ரூபாய் ஃபைன் கட்டுனா முடிஞ்சு போச்சு... அவ்வளவுதான்''’என்றார்.
-ஈ.பா.பரமேஷ்வரன், ஷாகுல்