"மக்கள் நீதி மய்யத்தை மதுரையில் ஆரம்பித்தபோது வந்ததைவிட, திருச்சியில் ஏப். 04-ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகஅளவில் கூட்டத்தைத் திரட்ட வேண்டும். அதேநேரம் காசு கொடுத்து யாரையும் அழைக்க வேண்டாம்' என கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கறார் உத்தரவு போட்டிருந்தார் கமல். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தீவிரமாக களத்தில் இறங்கினார்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.
திருச்சி -ஜி.கார்னர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்ட மேடையை 60ஷ்40 என்ற அளவில் டிஜிட்டல் மேடையாக வடிவமைத்தது "பிக்பாஸ்' டீம். மேடை முதல் பார்வையாளர்கள் அமரும் நாற்காலிவரை கருப்புக் கலரிலேயே அமைத்திருந்தார்கள். மொபைல் டாய்லெட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
03-ஆம் தேதி மதியம் வைகை எக்ஸ்பிரசில் திருச்சிக்கு கிளம்பிய கமலுடன், உயர்நிலைக்குழு உறுப்பினரான நடிகை ஸ்ரீப்ரியா உட்பட 48 நிர்வாகிகள் ரயிலில் பயணித்தனர். வட இந்திய ஆங்கில சேனல்களின் சென்னை நிருபர்கள் மற்றும் ஒருசில தினசரி நாளிதழ்களின் நிருபர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார் கமல். அதேபோல் 25 பேர் கொண்ட போட்டோகிராபர், வீடியோகிராபர் டீமும் கமலுடன் பயணித்தன. மாலை 6:45-மணிக்கு திருச்சி சந்திப்பு வந்திறங்கிய கமலை, உயர்நிலைக் குழு உறுப்பினர் சிவகுமார், திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் சுரேஷ், துணை பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து நேராக எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்குச் சென்று சிறிதுநேரம் ஓய்வுக்குப்பின் மேடையில் யார், யாரை அமரவைப்பது, எவ்வளவு நேரம் பேசுவது என்பது குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு, இரவு உணவு முடித்து உறங்கச் சென்றார். போக்குவரத்து போலீசின் மாமூல் வெறிக்குப் பலியான கர்ப்பிணி உஷாவின் தாயாரையும் கணவரையும் 04-ஆம் தேதி காலை, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரவழைத்து, ஏற்கெனவே அறிவித்திருந்த 10 லட்ச ரூபாய் நிதியை, இருவருக்கும் தலா 5 லட்சம் என பிரித்துக் கொடுத்தார் கமல். அதன்பின் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஓர் அறிக்கையை மட்டும் வாசித்துவிட்டுக் கிளம்பினார்.
"ஜி கார்னர்' பொதுக்கூட்ட மைதானத்திற்கு கமல் வருவதற்கு முன்பாக, சுப்பு குழுவினரின் வில்லுப்பாட்டு மற்றும் கர்னாடக இசை நிகழ்ச்சி நடத்தியது பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது. கமல் வந்ததும் கமீலா நாசர், ஸ்ரீப்ரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஜல்லிக்கட்டுக் குழுத்தலைவர் ராஜேஷ் போன்றவர்களைத் தவிர்த்து, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களின் மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள் மட்டும் மேடையில் அமரவைக்கப்பட்டனர். பேசிய எல்லோருமே, "அடுத்ததாக கமலின் ஆட்சிதான்' என்றனர்.
இரவு 8:35-மணிக்கு பேச ஆரம்பித்த கமல், எடப்பாடி-பன்னீரின் உண்ணாவிரதத்தை நாடகம் என இரண்டு மூன்று தடவை போட்டுத் தாக்கினார். வீரத்தின் உச்சம் அகிம்சை, "தமிழ்நாடு ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் மத்திய அரசு கிடுகிடுக்கும்' என காந்திய வழியில் பேசியவர், "தண்ணீரைச் சேமிப்பது எப்படி?' என்பதை, வல்லுநர்களுடன், தான் பேசியதை வீடியோவாகப் போட்டுக் காட்டினார்.
போகிற இடங்களில் எல்லாம் கட்சியின் கொள்கைகள் எனக் கேட்பவர்களுக்கு ""சொல்கிறேன், சோறு வெந்துகொண்டிருக்கிறது, அதிலிருந்து சில பருக்கைகள் பரிமாறுகிறேன்'' எனச் சொல்லிவிட்டு, ‘""காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்றே ஆகவேண்டும், அது நமது உரிமை. இங்கே சின்னச்சின்ன அணைகள் கட்டவேண்டும், மகளிர் உடற்பயிற்சி செய்ய ஏதுவான இடம் வேண்டும், அவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்படும், கல்வி வியாபாரம் முடக்கப்படும், காவல்துறை சீரமைப்பு வாரியம் அமைக்கப்படும், சிறுபான்மையினர் நலன் உறுதி செய்யப்படும்''’என சிலவற்றைக் கூறினார் கமல்.
பேச்சில் பொறி பறக்காததால்... வந்திருந்த தொண்டர்கள் பலரும், "இது கட்சிக் கொள்கையா? தேர்தல் அறிக்கையான்னு தெரியலையே?' என்ற குழப்பத்துடனேயே சுவாரஸ்யம் இழந்து ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
சென்னை திரும்பியபின், கமலைச் சந்தித்த நிர்வாகிகள் சிலர், ""நமது செய்திகளைப் பெரும்பாலான சேனல்கள் சரியாக காண்பிப்பதில்லை, அதனால் மக்கள் நீதி மய்யத்திற்கென தனி சேனல் ஆரம்பித்தால்தான் தேர்தல் நேரத்தில் நமக்கு பெரிய உதவியாக இருக்கும்''’எனக் கூறியதும், "அதுபற்றி யோசிப்போம்' என பாஸிட்டிவ் பதில் சொல்லியிருக்கிறார் கமல். அதேநேரம், அமைச்சர் ஜெயக்குமார் கமலை அரசியல் அப்ரண்டீஸ் என கலாய்க்க, ""என்ன தம்பி மாவட்டப் பொறுப்பாளர் ஆகிட்டீங்க, உங்க தலைவர்ட்ட ஒரு இன்னோவா கார் கேட்கலாம்ல''’என ம.நீ.ம.வினரை, அ.தி.மு.க. புள்ளிகள் உசுப்பேற்றும் வேலையும் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மதுரையைவிட திருச்சியில் கூட்டம் கொஞ்சம் குறைவு. கமல் படம் போலவே அவரது அரசியலும் லேட்டாகத்தான் புரியுமோ!