மணல் தடை நீக்கம்!
நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருவதாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான மணலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்ல தமிழக அரசு தடைவிதித்த விவகாரத்திலும், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை ஆறு மாதத்திற்குள் மூட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையின் தனிநீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கலெக்டர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அப்பீலும் தள்ளுபடியானது. மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில் மூன்று மாவட்டங்களின் கலெக்டர்களும் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மணல் குவாரிகளை மூட இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்த மேல்முறையீட்டின் பின்னணியில், பல நூறு கோடி மதிப்புள்ள மணலை ஸ்டாக் வைத்துள்ள பிரபல மணல் அதிபர் ஒருவர் உள்ளாராம்.
-பரமு
ஓ.பி.எஸ். தொகுதியில் வைகோ!
ஓ.பி.எஸ்.சின் போடி தொகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை எப்படியும் கொண்டுவந்தே தீருவது என்று மத்திய அரசு கங்கணம்கட்டி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியில் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படுவதோடு, முல்லைப்பெரியாறு அணைக்கும் பெரும் பாதிப்பு என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கும் வைகோ, நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பதற்காகவே மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார். இதன் சார்பில் தேனி மாவட்டப் பகுதியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை 1-ந் தேதி தொடங்கிய வைகோ, ""இந்தத் திட்டத்திற்காக வாங்கப்படும் செயற்கைக் கதிர்வீச்சு மூலம் எந்த நாட்டையும் தாக்கமுடியும். அப்படித் தாக்கினால் திருப்பி, இங்கேதான் குண்டு போடுவார்கள்''’ என விளக்கி வருகிறார். ஏற்கெனவே முல்லைப்பெரியாறு விவகாரத்திலும் தேனி மாவட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வைகோ, அதே மாவட்டத்தின் போடி தொகுதி பிரச்சாரம் மூலம் ஓ.பி.எஸ்.ஸுக்கு குறிவைத்துவிட்டார் என்ற டாக் இப்போதே பரபரப்பாக அடிபடுகிறது.
-சக்தி