வர்களில் ஒருவருக்கு 102 வயது. மற்றவர்கள் 90, 80, 75 வயதுடைய மூத்தவர்கள். எல்லோரும் கறுப்பு-சிவப்பு வேட்டி கட்டியவர்கள். தி.மு.க.வின் ஆரம்பகால முன்னோடிகளுக்கு மதுரையில் பொற்கிழி வழங்கி சிறப்பித்தார் அரசியலில் ஆரம்ப அடி எடுத்து வைத்திருக்கும் உதயநிதி. மார்ச் 19-ந் தேதி மதுரை ஒத்தக்கடையில் திரண்டிருந்த பெருங்கூட்டத்துடன் இதற்கான விழா நடைபெற்றது. தி.மு.க.வின் தொடக்ககால உறுப்பினர்கள் 1306 பேருக்கு உதயநிதி கையால் பொற்கிழி அளிக்கும் விழாவை மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் பி.மூர்த்தியும், மணிமாறனும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

udayanidhi

துணைமுதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, கட்சியின் மூத்தவர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்தியிருக்கிறார். அதை உதயநிதி வழியாகத் தொடரத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

பொற்கிழி பெற்ற 103 வயது வாழவந்தார் நம்மிடம், “""இப்ப என்னா தம்பி இந்துத்வான்னு பூச்சாண்டி காட்டுறாங்க. நான் எல்லாம், பெரியார் கட்டளையை ஏற்று மனுதர்மத்தையே எரித்து கைதாகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ரயிலில் எல்லோரும் ஒண்ணா போகமுடியாது. பார்ப்பனருக்கு தனிபெட்டி இருக்கும். ஆற்காட்டு இரட்டையர்கள்னு சொல்ற இராமசாமி முதலியாரும் லெட்சுமணசாமி முதலியாரும், போராடித்தான் முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று பிரித்து வாய்ப்பு உள்ள எல்லோரும் பயணம் செய்யும் வசதி கிடைத்தது. பெரியார் காங்கிரஸில் இருந்துகொண்டே சாதிப் பாகுபாடுக்கு எதிரா போராடி, அது முடியாமப் போனதும் கட்சியை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினாரு. அது சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக நின்றது. பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்தபோது அவருடன் வந்தோம்; போராட்டங்களில் கலந்துகொண்டோம். இப்போது தமிழன் தன்மானத்தோடு எழுந்து நிற்கிறான் என்பதை காணும்போது திருப்தியாக இருக்கு''’என்றார்.

Advertisment

102 வயதான தங்கசாமி கூறும்போது…""காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க.காரன்னாலே போலீஸ் அடிப்பான். எவ்வளவோ அடிவாங்கின தழும்பு இருக்கு பாருங்க. அரசு வேலைக்கு விண்ணப்பித் திருந்தேன். கையில் "விடுதலை' பத்திரிகையை பார்த்த அதிகாரி வெளியே போகச் சொல்லிவிட்டார். அப்பவெல்லாம் அவய்ங்கதான் மேலதிகாரியா இருப்பாய்ங்க. என்ன செய்றது? முழு நேரமும் கட்சி கட்சி என்றே இருந்துட்டேன். "ஒண்ண இழந்துதான் ஒண்ணு கிடைக்கும்' என்று எங்க அப்பா சொல்வார். அதுபோல என் பேரப்பிள்ளைகளெல்லாம் அரசு வேலை, தனியார் வேலையில் பெரிய பெரிய இடத்தில் இருக்குனா, அதற்கு இந்த இயக்கம்தான் காரணம். கடைசியா எனக்கு ஒரே ஒரு ஆசைதான். கலைஞருக்கு முன்னாடி நான் போயிடணும். அதுக்கு தயாராகிக்கிட்டிருகேன் தம்பி''’என்று அழுதேவிட்டார்.

udayanidhi

தாடியும் தலையில் தொப்பியும் அணிந்திருந்த அப்துல் மஜீத்திடம் பேசினோம். ""நினைவு தெரிந்ததில் இருந்து தி.மு.க.தான். இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், மதத்தால் இஸ்லாமியன். பெரியார் -அண்ணா -கலைஞர் -தம்பி ஸ்டாலின் -தற்போது ஐந்தாவது தலைமுறை உதயநிதியையும் பார்த்தாச்சு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் என் கை எலும்பு முறிக்கப்பட்டது. எமர்ஜென்ஸியில் சிறை சென்றோம். இந்த இயக்கம் ஐந்து தலைமுறை அல்ல நூறு தலைமுறையை தாண்டி நிற்கும்''’என்றார்.

Advertisment

உசிலம்பட்டி ராமநாதனிடம் பேசும்போது…""திராவிட இயக்கத்தின் வேர் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கடந்து குக்கிராமம்வரை ஊடுருவி இருக்கு. எல்லோரையும் சரிக்கு சமமாக்கிருக்கு. விஞ்ஞானம் வளர்ந்திருக்கு. ஆனா சாதிய அடக்குமுறையும் ஆணவக்கொலைகளும் நின்னபாடில்லை. அதான் என் பேரனுங்ககிட்ட, "கம்ப்யூட்டர் படிச்சுட்டு சென்னைப் பக்கம் போயிடுங்கடா'னு சொல்லிட்டேன். "பழைய குருடி கதவ திறடி'ங்கற மாதிரி மனுதர்மத்தை தூக்கிட்டு புது பெயரில் பா.ஜ.க. மோடி வந்திருக்காரு. பெரியார் இருந்திருந்தால் இவங்க நிலைமையை நினைச்சு பார்க்கிறேன்''’என்று சத்தம்போட்டு மீசையை வருடிக்கொண்டு சிரிக்கிறார்.

udayanidhi

இப்படிப்பட்ட கொள்கை உரம் பாய்ந்த தி.மு.க.வின் முன்னோடிகளிடம் வாழ்த்துப் பெற்றுவிட்டு பேசிய உதயநிதி, ""கலைஞரையும் பேராசிரியரையும் தளபதியையுமே பார்த்து வளர்ந்தவன் நான். இங்கு வந்து 103 வயசானவங்களைப் பார்க்கும்போது பெரியாரையும், அண்ணாவையும் சந்தித்த மனநிம்மதி ஏற்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டுமே 1306 முதல் தலைமுறையினர் இவ்வளவு வீரியமாக இருக்கும் போது, ஐந்தாம் தலைமுறையாகிய நாம், இன்னும் வேகமும் விவேகமும் கலந்து இந்த இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும்'' என்றார், தி.மு.க.வின் வரலாற்றை மூத்தவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட அனுபவத்துடன்.

-அண்ணல்