eps-ops

ன்னமும் தொடரும் கோஷ்டிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சில அதிரடி முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட அ.தி.முக. செயலாளர்கள், ‘""கட்சியில் ஒன்றாக இணைந்தும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களில் கேபி.முனுசாமி, வைத்திலிங்கம், மதுசூதனன் தவிர மற்றவர்களுக்கு கட்சி அல்லது ஆட்சியில் எவ்வித பதவிகளும் தரப்படாமலே இருக்கிறது. இணைப்புக்கு முன்பு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததால், தமிழகம் முழுவதும் இரண்டு அணிகளுக்குள்ளும் ஒட்டு உறவு இல்லாத நிலையே நீடித்ததுமல்லாமல் ஓ.பி.எஸ். மீது அதிருப்தியும் கோபமும் அவரது ஆதரவாளர்களிடம் அதிகரித்தது. அப்போதெல்லாம் வெவ்வேறு காரணங்களை சொல்லி "உறுதிமொழி நிறைவேற்றப்படும்' என நம்பிக்கை தந்தார் எடப்பாடி. இந்த நிலையில், அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளில் கோலோச்சியிருந்த சசிகலா, தினகரன் ஆதரவு நிர்வாகிகள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோரை அதிலிருந்து நீக்கினர் எடப்பாடியும் பன்னீரும். இதில், தினகரன் ஆதரவு மா.செ.க்கள் 6 பேரும் அடங்குவர். தவிர, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கட்சியிலிருந்து கல்தாவும் கொடுக்கப்பட்டது.

Advertisment

காலியான இடங்களில் புதியவர்களை நியமிக்க வலியுறுத்தி எடப்பாடி-ஓ.பி.எஸ். கோஷ்டியினர் போர்க்கொடி உயர்த்தினர். அப்போது புதிய நியமனங்கள் குறித்து ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களோடு எடப்பாடி பலமுறை ஆலோசித்தார். அந்த ஆலோசனைகளில், பதவிகளை 50-க்கு 50 என பகிர்ந்துகொள்ளலாம் என ஓ.பி.எஸ். தெரிவிக்க... அதனை கடுமையாக மறுத்தது எடப்பாடி தரப்பு. அதாவது, "அ.தி.மு.க.வின் மொத்த நிர்வாகிகளையும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் மா.செ.க்களும்தான் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான், தினகரன் பின்னால் கட்சி கலைந்து செல்லாமல் இருக்கிறது. மொத்த எண்ணிக்கையை கணக்கிடும்போது அதிகபட்சம் 10 சதவீதம் பேர்தான் உங்களை ஆதரிப்பவர்கள். இணையும்போதுகூட அந்தளவுக்குத்தான் ஆதரவாளர்கள் உங்களோடு வந்தனர். மற்றபடி கட்சி அப்படியேதான் இருக்கிறது. அதனால், புதிய நியமனங்களில் 10 சதவீத இடங்கள் மட்டுமே உங்களுக்கு. அதுவும் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் எடுத்துக்கொள்ளுங்கள்' என எடப்பாடியும், சீனியர் அமைச்சர்களும் வலியுறுத்தினர். இதற்கு, ஓ.பி.எஸ். சம்மதிக்காததால் புதிய நியமன பிரச்சனை இழுத்துக்கொண்டே போனது.

இப்படிப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தவிர, கட்சியின் உள்கட்சித் தேர்தலையும் நடத்தியாக வேண்டும். இந்த இரண்டு பிரச்சனைகளும் ஒரே சமயத்தில் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் தலைவலியை ஏற்படுத்தியது. இவற்றை எதிர்கொள்வது பற்றி சீனியர்கள் விவாதித்தபோது, "உள்கட்சித் தேர்தலை நடத்தி அதன் முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க நவம்பர்வரை காலஅவகாசம் இருக்கிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்தியாக வேண்டும். இதற்கிடையே பட்ஜெட் கூட்டமும் இருக்கிறது' என பேசியதோடு, மா.செ., ந.செ., ஒ.செ.க்களை தொடர்புகொண்டு கருத்தும் கேட்டனர். அவர்களோ, "காலியாக இருக்கும் பதவிகளில் புதியவர்களை நியமிக்காமல் உள்ளாட்சித் தேர்தலில் யாரும் வேலை பார்க்க மாட்டார்கள். நிர்வாகிகளை நியமித்தால் உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளிலும் ஆர்வம் காட்டுவார்கள்' என கட்-அண்ட் ரைட்டாக வலியுறுத்தினர். இதனையடுத்துத்தான், பதவிகளை நிரப்புவதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காகத்தான் பிப்ரவரி 2-ந்தேதி மா.செ.க்களின் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது''‘என்று விவரித்தனர்.

Advertisment

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ""பதவிகளை பகிர்ந்துகொள்வதில் பல கருத்து வேறுபாடுகளை கடந்து 65 சதவீத இடங்கள் எடப்பாடி தரப்புக்கும், 35 சதவீத இடங்கள் ஓ.பி.எஸ். தரப்புக்கும் என முடிவெடுத்துள்ளனர். அதேசமயம் பல மாவட்டங்களில் மா.செ.க்கள் உட்பட முக்கிய பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் நீடித்தே வருவதால், கட்சியின் மா.செ.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தற்போது அ.தி.மு.க.வில் 50 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை 70 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சியிலுள்ள 14 துணை அமைப்புகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 1800-லிருந்து 2000 வரை நிர்வாகிகளை நியமிக்க முடியும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இதன் மூலம், அதிருப்தியாளர்களை சமாளிக்க முடியும். இந்த எண்ணிக்கை உயர்வுக்கு மா.செ.க்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவிருக்கிறது. அதன்பிறகு, ஆட்சி மன்றக்குழுவின் ஒப்புதலையும் பெற்று கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்படும். ஆக, ஓ.பி.எஸ். கோஷ்டியை சமாளிக்க இந்த அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறார் எடப்பாடி''‘என்கின்றனர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

இந்த நிலையில், எடப்பாடியின் ஆதரவாளர்களாக உள்ள அமைச்சர்களோ, தங்கள் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். கோஷ்டிக்கு முக்கிய பதவிகளை தராமல் பார்த்துக்கொள்ளும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால், "கோஷ்டிப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்ட முடிவுகளே, இன்னொரு தலைவலியை உருவாக்காமல் இருந்தால் சரி' என ஆதங்கப்படுகின்றனர் ர.ர.க்கள்.

-இரா.இளையசெல்வன்