""பிப்ரவரி 27-ஆம் தேதி திருச்சிக்குப் போறேன், தமிழ்நாட்டுல திருப்புமுனை ஏற்படுத்தப் போறேன். அதப்பத்தி 28-ஆம் தேதி பத்திரிகையாளர்ட்ட சொல்லப்போறேன், சென்னைக்குச் செல்லப் போறேன்...''’இப்படி தனக்கேயுரிய அடுக்குமொழியில் பிப்ரவரி 24-ஆம் தேதி அதிரடி கிளப்பினார் லட்சிய தி.மு.க.வின் தலைவர் டி.ராஜேந்தர்.
சொன்னபடி செய்தாரா? 27-ந் தேதி கரூரில் நடந்த "அரசியல் பினாமி' அன்புநாதன் அக்கா மகள் நவீனா திருமணத்திற்கு வந்த டி.ஆரை வரவேற்று நகரம் முழுக்க போஸ்டர் ஒட்டியிருந்தனர். பிப். 28-ஆம் தேதி காலை 10:30 மணிக்கெல்லாம், சென்னை தியாகராய நகரில் இருக்கும் டி.ராஜேந்தரின் இல்லத்தில் மீடியா நண்பர்கள் குவியத் தொடங்கினர். முதல் மாடியில் இருந்து காலை 11 மணிக்கு இறங்கி வந்தார் டி.ஆர். அப்போது அவரின் பின்னால் இரண்டு பேர் வர... ""யோவ் பிரஸ்காரங்க போட்டோ எடுக்குறாங்க, பின்னால போங்கய்யா''’என அன்பாக அதட்டினார். கீழே இறங்கி வந்ததும் ஒரு அறைக்குச் சென்று, மெக்கா மசூதி போட்டோ முன்பு விழுந்து தொழுதார்.
பின்னால போங்கய்யான்னு சொன்னவர்களை மீண்டும் அழைத்து, ""இப்ப நான் வரிசையா சில போட்டோக்களைத் திறக்கப் போறேன். பெரியார் படத்தைத் திறக்கும்போது, "தந்தை பெரியார்'னு நான் சொன்னதும், "வாழ்க'ன்னு நீங்க சொல்லணும். அதே மாதிரிதான் மற்ற தலைவர்கள் படத்தைத் திறக்கும் போதும் சொல்லணும்''’என டியூஷன் எடுத்தார் டி.ஆர்.
அவர் சொல்லிக் கொடுத்தது போலவே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களைத் திறந்தபோது, கச்சிதமாகச் சொல்லி முடித்தனர் டி.ஆரின் சிஷ்யர்கள். தலைவர்கள் படத்திறப்பு முடிந்ததும், 2013-ல் டி.ஆரை மீண்டும் தி.மு.க.வில் சேர்த்த போது "முரசொலி'யில் வெளியான கலைஞரின் அறிக்கையை பிரேம் போட்டு மாட்டியிருந்ததையும் திறந்தார்.
படத்திறப்பு விழா முடிந்ததும், மீடியாக்களிடம் மனம் திறக்கும் வைபவத்தை ஆரம்பித்தார் டி.ஆர். ""இன்றைக்கு தி.மு.க., ஸ்டாலின் தி.மு.க. ஆகிவிட்டது. ஸ்டாலின், கலைஞர் பெத்த பிள்ளை, கலைஞருக்கு நான்தான் தத்துப்பிள்ளை. ஆனால் நான் தி.மு.க.வால் பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை, அதனால் என்ன பரவாயில்லை. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பிள்ளை இல்லை, ஆனாலும் அவர்களின் ஆன்மாக்களுக்கு நான் ஒரு தத்துப்பிள்ளை.
முன்னமாதிரி இல்லை இந்த டி.ஆர்., என்ன வேணும்னாலும் என்னிடம் கேளுங்க, நான் டென்ஷனாவதில்லை''’என பொளந்துகட்டிய டி.ஆரிடம், டி.வி. மீடியா ரிப்போர்ட்டர் ஒருவர், “"உங்க கட்சியோட கொள்கை என்னங்க?'ன்னு கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி! “""அட... ஒன்றரை மணி நேரமா இதத்தான்யா சொல்லிக்கிட்டிருக்கேன். இப்ப கேக்குற. என் பேரு டி.ஆரு, இதக் கேட்க நீயாரு''ன்னு மீடியா மீட்டிங்கை சட்டுன்னு முடிச்சாரு டி.ஆர்.
-பார்த்தது, கேட்டது, போட்டோ எடுத்தது: -எஸ்.பி.சுந்தர்