சீரான ராணுவம் போல கட்டுப்பாடுமிக்க பேரணியை நடத்தினர் மார்க்சிஸ்ட் தோழர்கள்.
தூத்துக்குடியில் கடந்த 17-ம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாட்டின் இறுதிநாளில் சிகப்புச் சீருடை அணிந்த செந்தொண்டர்கள் பேரணி, கொள்கை முழக்கத்துடன் அணிவகுத்தது. ராஜாஜி பூங்கா முன்பிருந்து செந்தொண்டர்கள் பேரணியை துவக்கி வைத்தார் கட்சியின் பொதுச்செயலாளரான சீத்தாராம் யெச்சூரி. பேரணிக்கான வழித்தட அனுமதியையும் தந்திருந்தது காவல்துறை. அனுமதிக்கப்பட்ட தடத்தில் பேரணி சென்றபொழுதே தடியடி நடத்தி தனது அரைவேக்காட்டுத்தனத்தைக் காண்பித்தது மாநகர காவல்துறை.
""அண்ணாநகர் 7-வது தெரு மற்றும் டூவிபுரம் 5-வது தெரு சந்திப்பு பகுதி வழியாக அமைதியாகத் தான் ஊர்ந்து சென்றது பேரணி. பேரணிக்கென முறையாக அனுமதி கொடுத்தும், போக்குவரத்தை சீர்செய்யாமல் போலீஸார் வேடிக்கை பார்த்ததோடு மட்டுமில்லாமல் பேரணிக்கு இடையே சிலரை டூவீலரில் செல்ல அனுமதித்தனர். இதுபற்றி போலீஸாரிடம் கேட்டதுதான் தாமதம். எங்கிருந்தோ தனது படை பலத்துடன் வந்தார் அந்த ஏ.எஸ்.பி. செல்வன் நாகரத்தினம். வந்த வேகத்திலேயே, "இங்க நான் வைச்சதுதான் சட்டம். அப்ப பேரணிக்கு அனுமதி கொடுத்தோம். இப்ப அனுமதி இல்லை. அத்தனைபேரு மேலேயும் வழக்குப் போடலாம் தெரியுமா?' என சினிமாபோலீஸ் மாதிரி பேச... "சார்... எங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் உங்களிடம் அனுமதி வாங்கித்தான் செய்திருக்கின்றோம். ஆளுங்கட்சியாக இருந்தால் நீங்க இப்படிப் பேசமுடியுமா..?' என்று தோழர்கள் சொன்னார்கள். "ஐயாவயே எதிர்த்துப் பேசுறியா?' என கேட்டுக்கொண்டே தடியடியை துவக்கி வைத்தார் ஏ.எஸ்.பி.யின் கன்மேனான முத்துசாமி. அதன்பின் அனைத்துப் போலீஸாரும் எங்களை அடிக்க ஆரம்பித்துவிட்டனர்' என்றனர் செந்தொண்டர் பேரணியில் கலந்துகொண்டு காயம்பட்ட திண்டுக்கல் விஷ்ணுவர்தனும், திருப்பூர் விமலும்.
விராலிமலை சோலைபெருமாள் உள்ளிட்ட கட்சியினரோ, ""காட்டுமிராண்டியைவிட மோசமானவர்களாக நடந்துகொண்டார்கள் போலீஸார். அங்கிருந்த கம்பு மற்றும் கடைகளில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த உருட்டுக் கட்டைகளைக் கொண்டு சரமாரியாக தடியடி நடத்தி தாக்கியது எங்களுக்குத் தெரிந்தது. திருப்பூரை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் மகன் 5 வயது அகிலேஷ் என்ன செய்தான்? அவனுக்கும் பலமான காயம்?'' என்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சியினரை அடித்து விரட்டுகிறேன் எனும் பெயரில், பெரிய பெரிய உருட்டுக்கம்புகளை வைத்து பொதுமக்களையும் போலீஸ் விரட்ட... பொதுமக்களுடன் சேர்ந்துகொண்டு மூவாயிரம் செந்தொண்டர்களும் போலீஸாரை திரும்ப அடித்து விரட்ட... பின்னங்கால் பிடரி தெறிக்க அண்ணாநகர் 7-வது தெரு வழியாக ஓட்டம் பிடித்தனர் ஏ.எஸ்.பி. தலைமையிலான போலீஸார். இதில் மீசையை முறுக்கி சினிமா போலீஸாகவே நடந்துகொண்ட ஏ.எஸ்.பி. செல்வன் நாகரத்தினம் ஓடும்போது தன்னுடைய ஒரு கால் ஷூவை இழந்துவிட்டு ஓடியது ஹைலைட். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. மகேந்திரன், ஏ.டி.எஸ்.பி. கந்தசாமி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு சம்பவத்தில் காயம் அடைந்ததாக கூறி தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஏட்டையா சேகர், போலீஸார் ராம்சுந்தரிடம் புகார் வாங்கி, தாக்குதலுக்குள்ளான மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்தனர் அவர்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ""தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். இத்தகைய நிகழ்வுகள் தொடராமல் இருக்க வேண்டும். அதற்காக தமிழகம் முழுக்க கண்டன இயக்கம் நடத்தப்போகிறோம்'' என்றார்.
மார்க்சிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக முத்தரசன், சீமான் போன்றோர் தடியடி நடத்திய போலீஸார் மீது கன்டனக்குரலை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் தரப்பில் விசாரித்தோம்...
""முதலில் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி திரிபுரா பகுதியில் எஸ்.பியாக பணியாற்றிவந்த வேளையில், தமிழக சர்வீஸிற்கு வரவேண்டும் என இரண்டு தடவை ஐ.பி.எஸ். தேர்வு எழுதிய ஒரே அறிவுஜீவி எங்களுடை ஏ.எஸ்.பி. செல்வன் நாகரத்தினம்தான். இவர் தடியடி நடத்துவது இன்று மட்டும் புதிதல்ல.. 2016-ம் ஆண்டு தீபாவளியன்று இரவு 10 மணிக்குமேல் கடை திறந்திருப்பதாக கூறி பிரபல ஜவுளிக் கடையினுள் நுழைந்து தடியடி நடத்திய சம்பவத்தால் வர்த்தக சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் மீது தடியடி மற்றும் அதே ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அலங்கரிக்கப்பட்ட லாரிகளில் இளைஞர்கள் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் நடத்தி செல்லும்போது தடியடி நடத்தியது என பல தடியடி சம்பவங்களுக்கு இவர்தான் காரணம். சிங்கம் பட சூர்யானு நினைப்பு. நேர்மையாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் தன்னுடைய பஜார் காம்ப்ளக்ஸில் இரண்டாம் நம்பர் பிஸினஸ் செய்துவரும் ஒருவர்மூலம் பஞ்சாயத்தை முடித்துக்கொடுப்பதும் இவருடைய வேலை. இந்த ஊரின் முக்கிய மூன்று எழுத்துப்புள்ளி குடும்ப விவகாரத்தில் தலையிட்டு அதற்கான சர்வீஸ் சார்ஜை அவருடைய நண்பர் மூலம் வாங்கிக்கொண்டதாக புகாரும் உண்டு'' என ஏ.எஸ்.பி.யின் வண்டவாளத்தை புட்டு வைத்தார் உளவு அதிகாரி ஒருவர்.
இது குறித்துக் கருத்தறிய ஏ.எஸ்.பி.யைத் தொடர்புகொண்டோம். பதில் இல்லை.
ரவுடி போலீஸாரை காவல்துறை தலைமை என்ன செய்யப்போகிறது?
-நாகேந்திரன்