"ஸ்கீம்'’என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மட்டும் குறிக்காது’’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, தனது தீர்ப்பு குறித்து விளக்கியிருந்தாலும் எங்களின் போராட்டத் தீயை அணைத்துவிட முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது தமிழகம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்த நிலையில்... தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டக் களத்தில் குதித்தன. கோடை வெயிலையும் மீறி, போராட்டக் கனல் தகிக்க ஆரம்பித்தது. மக்களின் எழுச்சி, நாளுக்கு நாள் வேகம் எடுப்பதைப் பார்த்த தி.மு.க., ஏப்ரல் 01-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தமது தோழமைக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியது.
தி.மு.க. பாய்ச்சல் -கோட்டைவிட்ட உளவுத்துறை!
காலை 10:30 மணியிலிருந்து 12 மணி வரை நடந்த தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்குப் பின், வெளியே வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “"கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏப். 05-ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும், இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும்'’என பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். "இன்றைய தினம் (ஏப்.01) ஏதாவது போராட்டம் நடத்தும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?'’என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, பதில் எதுவும் சொல்லாமல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களின் கார்களில் ஏறிப் பறந்துவிட்டனர்.
அறிவாலயத்தில் குழுமியிருந்த தொண்டர்களும் தங்கள் தலைவர்களின் கார்களைப் பின் தொடர்ந்து சென்றனர். போராட்டத்திற்குத் தயாராக இருக்கும்படி தனது ஆதரவாளர்களிடம் மார்ச் 31-ஆம் தேதி இரவே ரகசிய சிக்னல் போட்டிருந்தார் மா.செ. சேகர்பாபு. மற்றொரு மா.செ.வான ஜெ.அன்பழகனோ, போராட தயாராக இருக்கும்படி 31-ஆம் தேதி பின்னிரவு 2:30 மணிக்கு, தனது ட்விட்டரில் போட்டுவிட்டு, சில நிமிடங்களிலேயே டெலிட் பண்ணிவிட்டார்.
இவை எதையுமே ஸ்மெல் பண்ண முடியாமல் திணறியது உளவுத்துறை. இதை கச்சிதமாகப் பற்றிக் கொண்டு தி.மு.க. காய் நகர்த்தியது. தோழமைக் கட்சித் தலைவர்களின் கார்கள் வள்ளுவர் கோட்டம் நோக்கித் திரும்பியது. அங்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய ம
"ஸ்கீம்'’என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மட்டும் குறிக்காது’’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, தனது தீர்ப்பு குறித்து விளக்கியிருந்தாலும் எங்களின் போராட்டத் தீயை அணைத்துவிட முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது தமிழகம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்த நிலையில்... தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டக் களத்தில் குதித்தன. கோடை வெயிலையும் மீறி, போராட்டக் கனல் தகிக்க ஆரம்பித்தது. மக்களின் எழுச்சி, நாளுக்கு நாள் வேகம் எடுப்பதைப் பார்த்த தி.மு.க., ஏப்ரல் 01-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தமது தோழமைக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியது.
தி.மு.க. பாய்ச்சல் -கோட்டைவிட்ட உளவுத்துறை!
காலை 10:30 மணியிலிருந்து 12 மணி வரை நடந்த தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்குப் பின், வெளியே வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “"கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏப். 05-ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும், இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும்'’என பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். "இன்றைய தினம் (ஏப்.01) ஏதாவது போராட்டம் நடத்தும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?'’என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, பதில் எதுவும் சொல்லாமல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களின் கார்களில் ஏறிப் பறந்துவிட்டனர்.
அறிவாலயத்தில் குழுமியிருந்த தொண்டர்களும் தங்கள் தலைவர்களின் கார்களைப் பின் தொடர்ந்து சென்றனர். போராட்டத்திற்குத் தயாராக இருக்கும்படி தனது ஆதரவாளர்களிடம் மார்ச் 31-ஆம் தேதி இரவே ரகசிய சிக்னல் போட்டிருந்தார் மா.செ. சேகர்பாபு. மற்றொரு மா.செ.வான ஜெ.அன்பழகனோ, போராட தயாராக இருக்கும்படி 31-ஆம் தேதி பின்னிரவு 2:30 மணிக்கு, தனது ட்விட்டரில் போட்டுவிட்டு, சில நிமிடங்களிலேயே டெலிட் பண்ணிவிட்டார்.
இவை எதையுமே ஸ்மெல் பண்ண முடியாமல் திணறியது உளவுத்துறை. இதை கச்சிதமாகப் பற்றிக் கொண்டு தி.மு.க. காய் நகர்த்தியது. தோழமைக் கட்சித் தலைவர்களின் கார்கள் வள்ளுவர் கோட்டம் நோக்கித் திரும்பியது. அங்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. "இது தடையை மீறிய போராட்டம்தான்' என அழுந்தச் சொன்ன ஸ்டாலின், அடுத்தடுத்த நாட்களில் நடக்கப் போகும் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். சாலை மறியல் தீவிரமானதை உணர்ந்த காவல்துறை அனைவரையும் கைது செய்து வண்டியில் ஏற்றியது. தலைவர்கள் செல்லும் வண்டிகளை தொண்டர்கள் மறிக்க, மேலும் டென்ஷனானது போலீஸ்.
"மெரினாவுக்குத்தான் செல்வார்கள்' என நினைத்து அங்கே பாதுகாப்பை பலப்படுத்தியது சட்டம்-ஒழுங்கு போலீஸ்துறை. ஆனால் 01-ஆம் தேதி நடக்கப்போவது ஆர்ப்பாட்டமா, சாலை மறியலா என்பது தெரியாமல் கோட்டைவிட்டது உளவுத்துறை.
செருப்பு வீச்சு -ஆபீசுக்குப் பூட்டு
01-ஆம் தேதி பற்ற வைக்கப்பட்ட போராட்ட உணர்வுத் தீ மளமளவென தமிழக தலைநகரிலிருந்து மாநிலமெங்கும் பரவத் தொடங்கியது. 02-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் சென்னை -சாஸ்திரி பவனை, திருமுருகன் காந்தி தலைமையிலான மே-17 இயக்கத்தினர் முற்றுகையிட்டனர். திடீரென ஒருவர் கையில் கத்தியுடன் கூட்டத்திலிருந்து விலகி ஓட ஆரம்பித்ததும் விக்கித்துப் போன போலீஸ், அவரை விரட்டிக் கொண்டு ஓடியது. இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு பிரிவினர், சாஸ்திரிபவன் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை செருப்பால் அடிக்க ஆரம்பித்தனர். பெரும்பாடுபட்டு அவர்களை கீழே இழுத்து கைது செய்தனர்.
மே-17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் விடுதலை ராஜேந்திரன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் சாஸ்திரிபவன் வளாகத்துக்குள் நுழைந்தனர். கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், அதன் பின் கைது செய்யலாம் என போலீஸ் நினைத்துக் கொண்டிருந்த போது, திடீரென வருமான வரித்துறை அலுவலகத்தின் கதவைச் சாத்தி, பூட்டுப் போடும் முயற்சியில், கையில் பூட்டுடன் சில தோழர்கள் பாய்ந்து வந்ததைப் பார்த்து, போலீசும் பாய்ந்து வந்து தடுத்தி நிறுத்தி தள்ளுமுள்ளுவாகி, ஒருவழியாக அனைவரையும் கைது செய்து வேனில் கூட்டிச் சென்றனர்.
கடுகு சிறுத்தாலும்...
மத்திய மோடி அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வேகம் எடுக்க ஆரம்பித்ததுமே தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்கள், மாவட்டங்களில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியது போலீஸ். 02-ஆம் தேதி காலை சென்னை -சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக பரிசோதித்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தது போலீஸ். பயணிகளோடு பயணிகளாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இயக்கத்தினர் பத்துபேர் நுழைந்துவிட்டனர். 5 மற்றும் 6-ஆவது பிளாட்பாரங்களில் நின்று கொண்டிருந்த ரயில்களை மறிக்க திடீரென ஓடியதைப் பார்த்த ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்து, அதன்பின் சுதாரிப்பாகி, பத்து பேரையும் கைது செய்து வெளியே கொண்டு வந்தனர். "வந்தது பத்து பேர்தான் என்றாலும் கொஞ்ச நேரம் எங்களை படபடப்புக்குள்ளாக்கிவிட்டார்கள்'’என்றார் ஸ்பாட்டிலிருந்த ரயில்வே போலீஸ் உயர்அதிகாரி ஒருவர்.
களத்தில் இறங்கிய கமல் கட்சி
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் அப்பாஸ். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசனுடன் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் ராஜூ, கத்திப்பாரா ஜனார்த்தனன், யுவராஜா ஆகியோர் கலந்துகொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
2000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் விழுப்புரம் ரயில்வேகேட் அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சையில் விவசாய அமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு திரண்டு மோடி அரசுக்கு எதிராக ஆவேசமாக குரல் எழுப்பியவாறு, அலுவலகத்தில் இருந்த பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளைச் செருப்பால் அடித்தனர்.
திருவாரூர் நகர வர்த்தகர் சங்கம் சார்பில் 02-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட வர்த்தகர் சங்கத்தினர் திருவாரூர் ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டனர். கமலின் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டப் பொறுப்பாளர் ஹாஜா மைதீன், வர்த்தகர் சங்கத்தில் இருப்பதால் ஐம்பது பேரில் ஒருவராக அவரும் சென்றார்.
ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், மேம்பாலம் அருகே சென்று, காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலை மறிக்கும் முடிவுக்கு வந்தனர். சிறிது நேரத்தில் அனைத்துக் கட்சியினரும் வர்த்தகர் சங்கத்தினருடன் இணைந்து கொள்ள பெரும் கூட்டம் கூடிவிட்டது. காலை 10:35 வந்த ரயிலை மறித்து, இரண்டுமணி நேரம் கழித்து விடுவித்தனர். "வேறு எந்த ஊர் போராட்டத்திலும் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாதபோது, நீங்கள் எப்படி கலந்து கொண்டீர்கள்?'’என ஹாஜாமைதீனிடம் நாம் கேட்டபோது, ""காவிரி பாயும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த நான், எங்கள் தலைமையிடம் ரயில் மறியலுக்கு அனுமதி கேட்டபோது, "மய்யத்தின் கொடி இல்லாமல் கலந்துகொள்ளுங்கள்' என்ற பிறகுதான் மறியலில் கலந்துகொண்டேன்''’என்றார்.
கடை அடைப்பு -முழு அடைப்பு
"தமிழகம் முழுவதும் 03-ஆம் தேதி கடைகள் அடைக்கப்படும்' என வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்ததால், சென்னை -கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உட்பட சென்னையில் முக்கிய ஏரியாக்கள் வெறிச்சோடின. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்பாக 02-ஆம் தேதி சென்னையில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த விக்கிரமராஜா, ""தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் இணைந்து 05-ஆம் தேதி நடத்தவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, எங்களின் மற்ற சங்கங்களிடம் கலந்தாலோசித்துவிட்டு ஆதரவு தருவோம்''’என உறுதியளித்தார். 05-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவதில் தி.மு.க. தோழமைக் கட்சிகள் முனைப்புக் காட்டின.
இதேபோல், "காவிரி உரிமைக்கான அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவு உண்டு' என உறுதியாக அறிவித்துள்ளனர் டாக்டர் ராமதாசும் அன்புமணி ராமதாசும்.
வரிந்துகட்டிய அ.ம.மு.க.வினர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 03-ஆம் தேதி திடீரென திருச்சி வந்திறங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினருடன் திருச்சி விமான நிலைய முற்றுகைப் போராட்டத்தில் இறங்கி, கைதானார் தினகரன். விவசாய சங்கத் தலைவர்அய்யாக்கண்ணுவும் தினகரனுடன் கைதானார்.
"சக்தி மகா சக்தி' எனும் நிகழ்ச்சியில் 02-ஆம் தேதி கலந்து கொள்வதற்காக 01-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை வந்தார் தமிழிசை. 02-ஆம் தேதி காலை ஓட்டலில் இருந்து கிளம்பி நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் கருப்புக் கொடி காட்டியதைப் பார்த்து அதிர்ச்சியானார் தமிழிசை.
இந்தியத் தலைநகர் ஜந்தர்மந்தர் ஏரியாவில் மாணவர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில், தி.க.தலைவர் கி.வீரமணி, கனிமொழி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொண்டு மோடி அரசைக் கண்டித்து குரல் எழுப்பினார்கள். காவிரிக்கு முன்பாக, தமிழகத்தை வஞ்சித்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இது.
நாங்களும் இறங்குவோம்ல...……
மத்திய அரசின் சேவகர்களாக செயல்படும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுக்கு நெருக்கடியும் அழுத்தமும் அதிகரிக்க ஆரம்பித்ததால், வேறு வழியின்றி அ.தி.மு.க.வினரும் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர். முதலில் 02-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் 03-ஆம் தேதி மாற்றப்பட்ட உண்ணாவிரதப் பட்டியலில் முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் பன்னீர் பெயர்கள் இல்லை. இல்லாட்டி என்ன நாங்களும் களத்தில் இறங்குவோம் என்ற கணக்கோடு, சென்னை -சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டத் தலைநகரங்களில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்ட மந்திரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர்களில் திருச்சி வெல்லமண்டி நடராஜனும் கோவை வேலுமணியும் கருப்புச் சட்டையுடன் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தினார்கள்.
அ.தி.மு.க.வின் வழக்கமான பாணியான தலைக்கு 200 ரூபாய், வாகனச் செலவு, சாப்பாட்டு பேட்டா வரை வழங்கப்பட்டு, உண்ணாவிரதத்திற்கு ஆட்கள் திரட்டப்பட்டனர். மாவட்டம் ஒன்றிற்கு 50 "எல்' எஸ்டிமேட் போட்டு, சென்னையிலிருந்து பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாம்.
ஏப். 11-ந் தேதி சீமானின் நாம் தமிழர் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பெ.மணியரசனின் தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட கட்சிகள், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அனைத்துக் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக வரிந்து கட்டி களத்தில் இறங்கிவிட்டன. இனியும் மோடி அரசு சொரணையற்றதனமாக இருந்தால்……….
-பரமசிவன், ஈ.பா.பரமேஷ்வரன், ஜீவாபாரதி, பகத், ராஜா, ஜெ.டி.ஆர்.