stalin

டந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை மொத்தமாக கழுவி ஊற்றிய மாவட்டம் ஈரோடு. மார்ச் மாதத்தில் மண்டல மாநாட்டை நடத்த வேண்டிய நிலையில், பிப்ரவரி 7-ந் தேதி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். காலை ஈரோடு வடக்கு மாவட்டமும் மாலை தெற்கு மாவட்ட உ.பி.க்களும் கலந்து கொண்டனர். முதல்கட்டமாக வடக்கு மாவட்டத்தின் ஊராட்சி செயலாளர்கள், பகுதி, வட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட அமர்வில், சத்தியமங்கலம் ஒ.செ. பற்றி புகார்களை அடுக்கினார்கள்.

"தர்மலிங்கத்தைப் பற்றிச் சொல்றீங்களா?'’என ஓப்பனாகவே ஸ்டாலின் கேட்டதும், உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது. தயக்கத்தை உடைத்து, கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ’கடந்த மூன்றுவருடமாக சத்தியமங்கலத்தில் கட்சி நிகழ்ச்சி எதையும் ஒ.செ. தர்மலிங்கம் நடத்தவில்லை. கட்சிக்கு சொந்தமாகவும் அலுவலகம் கட்டவில்லை. வாடகைக்கும் இடம் பிடிக்கவில்லை. அவர் வீட்டையே கட்சி ஆபீஸாக நடத்துறாரு. அங்கே போனா மதிப்பதில்லை. மனக்கசப்போடு மறுபடி மறுபடி கட்சிக்காரங்க எப்படிப் போகமுடியும்?“என்பது பலரது குற்றச்சாட்டு.

Advertisment

நம்பியூர் ஒ.செ. சென்னிமலைபற்றி எலத்தூர் ஊராட்சி செயலாளர் புகார் வாசித்தார். டி.என்.பாளையம் ஒ.செ. டி.கே.சுப்பிரமணி மற்றும் கோபிசெட்டிபாளையம் நகரச் செயலாளர் நாகராஜ் மீதும் ஏராளமான புகார்களை உ.பி.க்கள் கொட்டியுள்ளனர். புகார் பெட்டியில் கடிதம் போட்டுள்ளவரில் ஒருவரான கோபி முன்னாள் நகரச் செயலாளர் மணிமாறன், 1996-ல் செங்கோட்டையனை ஜெயித்த தி.மு.க. ஜி.பி.வெங்கிடுவின் மகன்.

stalinmeet

Advertisment

1992-ல் செங்கோட்டையனோடு சேர்ந்துகொண்டு, நக்கீரன் இதழ்கள் விற்கப்பட்ட கடைகளை அடித்து நொறுக்கிய அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ்தான் இப்போது கோபி தி.மு.க. நகரச் செயலாளர். கவுண்டர் லாபியால் என்.கே.கே.பி.ராஜா மூலம் வாங்கிய பதவி இது. பிற சமுதாயத்தினரை ஒதுக்கும் போக்கினை துணை அமைப்பாளர்கள், ஊராட்சி, நகர வார்டு செயலாளர்களும் கோடிட்டு புகார் பெட்டியில் போட்டுள்ளனர்.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என மக்களை நெருங்கிவிடுகிறார்கள். உண்மையை எடுத்துச் சொல்லப் போனால்கூட எங்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி வழக்குப் பதிவு செய்கிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் மாவட்ட-ஒன்றிய செயலாளர்கள் பக்கபலமாக நின்றால்தான் நாம் பலமாக செயல்படமுடியும். ஆனால் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை எனத் தெரிவித்துள்ளனர் உ.பி.க்கள் பலரும்.

ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கான முதல் அமர்வில் கலந்து கொண்ட ஊராட்சி செயலாளர்களில் கொடுமுடி ஒ.செ.சின்னுச்சாமி பற்றி பேசிய ஊராட்சி செயலாளர்கள், ""கட்சி நடத்தும் எந்த போராட்டத்திற்கும் தகவல் சொல்வதே இல்லை"" என கூறியிருக்கிறார்கள். மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கனிமொழி ""மாவட்டச் செயலாளர் முத்துசாமி கட்சிக்காரர்களிடம் இணக்கமாக இருப்பதில்லை'' என கூறியிருக்கிறார். ""அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வருபவர்களுக்கு உடனே பதவி தரக்கூடாது'' என்றார் பகுதிச் செயலாளரான குருமூர்த்தி.

stalinmeet

வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்ட கள ஆய்விலும் மூன்றாம் அமர்வாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின், ""உங்களை அடிக்கடி சந்திப்பதால், நீங்கள் யாரும் எதுவும் பேச வேண்டாம்; கட்சிக்கு வேர் போன்றவர்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள். அவர்கள் ஏராளமான தகவல்கள் கூறியுள்ளார்கள். தேர்தலில் ஈரோடு மாவட்டம் ஜீரோ. அதற்கு காரணம், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் பணம் செலவு செய்யவில்லை என்ற ஒரு தரப்பும், குரூப் பாலிடிக்ஸ் தான் காரணம் என்று மற்றொரு தரப்பும் குற்றம்சாட்டுகிறது. இனிமேல் அந்தநிலை இருக்கக்கூடாது. தொகுதியில் ஜெயிக்கிற வழியைப் பார்க்காமல், கலைஞர் இருந்தால் இந்நேரம் ஆட்சியைக் கலைத்திருப்பார் என்னும் பேச்சு அதிகமாக இருக்கிறது... கலைஞருடைய ஆட்சிதான் இரண்டு முறை கலைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் எந்த ஆட்சியையும் கலைத்ததில்லை. கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவது கலைஞரின் கொள்கையல்ல. நேரடியாக ஆட்சிக்கு வருவோம், விரைவில் தேர்தல் வரும். அதை எதிர்கொள்ளும் வகையில் பலமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும்.

தி.மு.க.வில் ஒரு கிளைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுத்தாலும், அவர் கோர்ட்டுக்கு போக முடியும். அப்படி கட்சியின் சட்ட விதிமுறைகள் ஜனநாயகப்படி உள்ளது. அந்த ஜனநாயகத்தைக் காக்க நான் சர்வாதிகாரியாக மாறப்போகிறேன் கட்சிக்கு உழைக்காமல் துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும்'' என்று வேகமாகப் பேசிய ஸ்டாலின், "கட்சி நிர்வாகிகளில் 60% என்.கே.கே.பி.ராஜா தரப்புக்கும் 40% முத்துசாமி தரப்புக்கும் பிரித்துக் கொடுத்ததுதான் பிரச்சினை' எனக் கோடிட்டுக் காட்டினார்.

மேலும், ""இந்தக் களஆய்விலேயே தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் சுமார் இருநூறு பேர் வரவில்லை. ஏன், என்ன காரணம்? கட்சி போஸ்டிங் போடவேண்டும் என்று கணக்கு காட்ட முகம் தெரியாத ஆட்களையெல்லாம் அணிகளின் துணை, இணை அமைப்பாளர்களாக, பிரதிநிதிகளாக நீங்கள் போட்டுள்ளீர்கள். இனிமேலும் கட்சி தலைமையை ஏமாற்ற முடியாது. மண்டல மாநாடு முடிந்தபிறகு நிச்சயம் நடவடிக்கை இருக்கும்'' என உறுதியளித்ததுடன், நிர்வாகிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு, அவர்களை உற்சாகமாக அனுப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின் .

கட்சிக்கு அடிநாதமாக, ஆணிவேராக இருக்கும் ஊராட்சி மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்கள் நிறைந்த நம்பிக்கையுடன் ஊர் திரும்பியிருக்கிறார்கள்.

-ஜீவாதங்கவேல்

-சி.ஜீவாபாரதி