rajini-kamal

பிரபல வாரஇதழில் கமல் எழுதும் கட்டுரைத் தொடர் வெளியாகும் நாளில் தமிழகத்தில் கமலின் அரசியல் குறித்த அலசலும் ஆரம்பாகிவிடுகிறது. கமல்பற்றிப் பேசினால், கூடவே ரஜினியும் வருகிறார். அந்த வகையில்தான் இந்த வாரம், "ரஜினியுடன் நீங்கள் கைகோர்ப்பீர்களா?' என என்னைக் கேட்கிறார்கள். இப்போது அதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை என பதில் சொல்லியிருக்கிறார் கமல்.

இந்த "ஹாட் டாபிக்' ஓடிக்கொண்டிருந்தபோதே, ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் படை எடுத்தார்கள் காட்சி ஊடக நண்பர்கள். "கமலுடன் நீங்கள் கைகோர்ப்பீர்களா?'’என்னும் கேள்விக்கு, ’’""காலம்தான் பதில் சொல்லும்'' என ஏற்கெனவே சொன்ன பதில் இப்போதும்'’எனச் சொன்ன ரஜினியிடம், ""சிஸ்டம் சரியில்லைன்னு நீங்க சொன்னது இந்தியா முழுமைக்குமா, தமிழ்நாட்டுக்கு மட்டுமா?''’என அடுத்த கொக்கியைப் போட்டனர். “""இப்போதைக்கு சரிபண்ண வேண்டியது தமிழ்நாடு சிஸ்டத்தைத்தான்''’என பதில் சொன்ன ரஜினி, ""நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போதையச் சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும்''’என்றார்.

Advertisment

அதேநேரம் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் சேர்ப்பு நிலவரத்தை மாவட்ட வாரியாக தெரிந்து கொண்டு வருகிறார் மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர் வி.எம்.சுதாகர். அந்த ரிசல்ட் அடிப்படையில்தான் வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். பிப். 10, 11 தேதிகளில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சுதாகர் "விசிட்' அடிப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் "கேன்சல்' செய்யப்பட்டது.

Advertisment

இன்னும் சில முன்னேற்பாடுகளையும் முன்னேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின், மாவட்ட விசிட்டை வைத்துக் கொள்ளலாம் என ரஜினியிடமிருந்து இன்ஸ்ட்ரக்ஷன் வந்துள்ளதால், சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் சுதாகர். பழைய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், அதே பொறுப்பில் ரஜினி மக்கள் மன்றத்திலும் தொடரவேண்டும் என்கிற தங்களது விருப்பத்தை சுதாகரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கமல் ஏரியாவிலோ, பிப்.21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சி தொடக்க விழா, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர். ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 3 பஸ், 10 வேன், 20 கார்களில் ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் அதைத் தொடர்ந்து சிவகங்கை, திண்டுக்கல்லுக்கும் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாகியுள்ளனர் கமல் நற்பணி இயக்கத்தினர்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் கமல் நற்பணி இயக்கத்தினருக்கு அந்த மாவட்டங்களின் சமூக அக்கறையுள்ள தொழிலதிபர்கள் பலர் உதவுகிறார்களாம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாவட்டத் தலைவர்களுக்குத் தேவையான நிதி உதவியை கமலே நேரடியாக வழங்குகிறாராம். இந்த நிதியை மாநிலப் பொறுப்பாளர் கோவை தங்கவேல் தலைமையிலான டீம்தான் ரகசியமாக பட்டுவாடா செய்கிறதாம்.

இதற்கிடையே அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கே கலிபோர்னியாவில் ஸ்பேஸ் டெக்னாலஜி லேபரட்ரி நடத்தும் டாக்டர் ஸ்ரீதரைச் சந்தித்து, அரசியல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ரஜினி-கமல் கேம்ப்பின் சிஸ்டம் டெவலப் பற்றிய இந்தவார நிலவரம் இதுதான்.

-ஈ.பா.பரமேஷ்