கொரோனாவே பரவாயில்லை என்கிற நிலைமைக்கு மக்களைத் தள்ளுகினற்ன மத்திய-மாநில அரசுகள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, மின் கட்டண குளறுபடி. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சியான தி.மு.க. கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியது. போராடும் எதிர்க்கட்சிகளைக் கொச்சைப் படுத்துவதே அரசுகளின் முதல் பணியாக இருக்கிறது. அதிலும், மத்தியில் ஆளும் பா.ஜக. அரசு தனக்கு எதிரான எந்தவொரு ஜனநாயக கருத்தையும் அனுமதிப்பதில்லை என்பதை பல்கலைக்கழகங்கள் முதல் சமூகவலைத்தளங்கள் வரை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் பற்றியும், அதன் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பற்றியும் சமூக வலைதளத்தில் திட்டமிட்டு ஆபாசபதிவுகள் அரங்கேறின. இதனைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் கட்சிக்கொடிகளுடன் போராட்டம் நடத்தின.
தி.மு.க.வின் கறுப்புக்கொடி போராட்டம் பற்றி முன்னாள் அமைச்சரும் தி.மு.க. ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளருமான சு.முத்துச்சாமி நம்மிடம், ""இந்த கொரோனா வைரஸ் எனும் நெருக்கடியான பேரிடர் காலத்தில் ஒட்டு மொத்த மக்களும் வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கம், அதனைச் செய்யாமல், மின் கட்டணம் என்ற பெயரில் மேலும் சுமையை மக்கள் தலையில் ஏற்றியுள்ளது. இருநூறு, முன்னூறு ரூபாய் என வந்த வீடுகளுக்கு மூவாயிரம் நான்காயிரம் என பில் வந்துள்ளதை மக்களே ஆதாரத்துடன் காட்டினார்கள் ஆகவே துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு பெரும் துன்பத்தை அரசு கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி தான் தோழமை கட்சிகளோடு தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தினோம்'' என்றார்.
கம்யூனிஸ்ட் இயக்கம் மீது அவதூறு பரப்பியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் விரிவாக நம்மிடம் விளக்கினார் சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினரான த.லெனின், ""இந்திய கம்யூளிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைமையகம்தான் பாலன் இல்லம். இந்த கட்டிடத்திற்கான நிலத்தை அப்போதே மிக குறைந்த விலைக்கு கொடுத்தது வங்க கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் குடும்ப உறவினரான அருணா சங்கர் மற்றும் அவர் மனைவி அமலா சங்கர். இந்திய சுதந்திர போராட்டத்திலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்த போராளிகளின் கருவூலம்தான் பாலன் இல்லம். ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட் தொண்டர் களின் உழைப்பால், மக்கள் கொடுத்த நன்கொடையால், வங்கி கடன் மூலம் புதிய எட்டு மாடி கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மனித குல விடுதலைக்கான பாசறையாக இருக்கும் பாலன் இல்லத்தை ஒரு கொச்சையான விடுதி என்று ஆர்.எஸ்.எஸ். மதவாத அமைப்பை சேர்ந்த விஸ்வா என்பவன் தனது முகநூலில் பகிரங்கமாக பதிவிட்டிருந்தான். அடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்ரீராம் என்பவன் தியாக தலைவர் மூத்த பொதுவுடமை போராளி -மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் தோழர் ஆர் நல்லக்கண்ணு பற்றியும், ஒரு பெண் தோழர் அமர்ந்துள்ள படத்தை பதிவிட்டும் தவறான பதிவுகளை பதிவிட்டிருந்தான். இதை கண்டித்து இந்த அவதூறு களை பரப்பிய நபர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் தமிழக முழுக்க போரடினோம்.
கொரோனா காலத்தில், மக்கள் பக்கம் அரசு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. இதை திசை திருப்ப, மதவாத கும்பல் செய்யும் சதிகள் இவை. சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொடூரக் கொலை சம்பவத்தில் போலீசாரோடு ஈடுபட்ட ப்ரன்ட்ஸ் ஆப் போலீஸ் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவான சேவாதள தொண்டர்கள் என்பதை நக்கீரன் இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. இதனால் இந்த பா.ஜ.க. பினாமி எடப்பாடி ஆட்சி, வேறு வழியில்லாமல் அந்த ப்ரன்ஸ் ஆப் போலீஸ் கூட்டத்தை தமிழகம் முழுக்க தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையெல்லாம் பிரிவினைவாத மதவாத சக்திகளால் பொறுக்க முடியாமல் திராவிட இயக்க சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர், பெரியாரிய அம்பேத்காரிய அமைப்பினர் மீது திட்டமிட்டே அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இப்போது சமூக நீதி தலைவர் தந்தை பெரியாருக்கும் காவி சாயம் பூசி அநாகரீக அரசியலை செய்கிறார்கள். இவற்றையெல்லாம் அடிமைகளாக இருந்து இந்த தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் பொது நாகரீகத்திற்கு கட்டுப்பட்ட வர்கள்.
இவர்களுக்கு போட்டியாக இங்குள்ள பா.ஜ.க தலைவர்கள் முதல் அமித்ஷா வரை அவர்களின் ஒழுங்கீனங்களை பட்டியலிட முடியும் ஏன்? பிரதமர் மோடி மீதே பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை செய்ய வேண்டிய மூன்றாம் தர மனிதர்கள் அல்ல நாங்கள். திசை திருப்பும் இந்த கூட்டம் கருத்தியல் பயங்கரவாதிகள். மனித குல வாழ்வுக்கும் சமாதானத்திற்கும் எதிரானவர்கள் இவர்களை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்'' என காட்டமாக கூறினார்.
அவதூறுகள் பரப்பியே மக்களிடம் செல்வாக்கு பெற்றுவிடலாம் எனத் திட்டமிடும் ஆளும் வலதுசாரிகளின் பாசிசப் போக்கை இடதுசாரி-ஜனநாயக சக்திகள் சவாலுடன் எதிர்கொள்கின்றன.
-ஜீவாதங்கவேல்