மிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வின் அடுத்த அசைவை தீர்மானித்திருப்பவர் யார்? என கேள்வி கேட்டால் முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன், திவாகரன் என நால்வரில் ஒருவர் பெயர் பதிலாக வரும். இந்த நான்கும் தவறான விடை. அ.தி.மு.க.வின் அடுத்த அசைவை தீர்மானித்திருப்பவர் ராவணன் என்பதுதான் சரியான விடை என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்திற்கு நெருக்கமானவர்கள்.

sasifamily

சசிகலாவின் குடும்பத்தை பிரிக்க வேண்டும் தினகரனின் அ.ம.மு.க.வை உடைக்க வேண்டும் என்கிற முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது. சித்ரா பௌர்ணமி அன்று காலை 6 மணிக்கு தனக்கென்று உள்ள ஒரு சில ஆதரவாளர்களை அழைத்தார் திவாகரன். கட்சி அலுவலகம் திறக்கணும் என்கிற திவாகரனின் அழைப்பை ஏற்று அடிக்கடி அணி மாறும் இளந்தமிழன், கள்ளர் மகாசங்க தலைவர் பாண்டியன் ஆகியோருடன் ஜெய்ஆனந்த்தின் போஸ் மக்கள் பணியகத்தை சேர்ந்த சில இளைஞர்களும் வந்து சேர்ந்தார்கள்.

Advertisment

"அம்மா அணி' என்கிற பதாகையை வைத்துவிட்டு ஜெ. படத்திற்கு முன்பு குத்துவிளக்கு ஏற்றினார் திவாகரன். தொடர்ந்து "இதுதான் அம்மா அணியின் தலைமை அலுவலகம். இதேபோல் தமிழகம் முழுவதும் அலுவலகம் திறக்கப்படும். நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றார். மாலையில் அவர் ஆரம்பித்த புதிய அமைப்பிற்கு அவரே தலைமை ஒருங்கிணைப்பாளர்' என அறிவித்ததோடு மாநில செய்தித் தொடர்பாளர்களை அறிவித்தார்.

""சசிகலாவை சிறைக்கு அனுப்ப காரணம் தினகரன். ஜெ. இறப்புக்குப் பிறகு சசிகலாவும் நடராஜனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார்கள். அதைத் தடுத்தது தினகரன்தான். அந்த விரக்தியில் தான் நடராஜன் இறந்துவிட்டார். நடராஜன் இறப்புக்கும் தினகரன்தான் காரணம். எனது தலைமையிலான அணி அரசியலில் தொடர்ந்து பயணிக்கும்'' என்றார் திவாகரன்.

""திவாகரனுக்கு உடல்நிலைதான் சரியில்லாமல் இருந்தது. அவர் செய்யும் செயல்களை பார்த்தால் அவருக்கு மனநிலையும் சரியில்லை என தெரிகிறது'' என திவாகரனின் புதிய அமைப்பு ............... பற்றி கமெண்ட் அடித்தார் தினகரன்.

Advertisment

divakaran

திவாகரன் ஏன் அவசரப்பட்டு கட்சி அமைப்பை தொடங்கினார் என அவரது ஆதரவாளர்களை கேட்டோம். ""திவாகரன் எங்கே தொடங்கினார். அவரை தொடங்க வச்சுட்டாங்க. கடந்த வாரம் வரை திவாகரன், தினகரனுக்கு ஆதரவாகத் தான் இருந்தார். மதுரையில் மாஜி எம்.பி. ஒருத்தரை திவாகரன் சொல்லித்தான் தினகரன் சேர்த்தார். சேலத்திலும் பலரை திவாகரன் சேர்த்தார். அதைப் பார்த்த எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் அ.ம.மு.க.வை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது. அதற்கான பணியை திருச்சியில் தொடங்கினார்கள். திருச்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் குமார், தினகரன் அணியினரிடம் பேசினார். தினகரன் அணியில் இருப்பவர்களுக்கு கட்சிப் பதவி, உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் என ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துக் கொண்டிருக்கிறார். அடுத்து டெல்டா மாவட்டங்களை குறிவைத்தார்கள். அங்குதான் தினகரன் அணிக்கு கூடுதலாக இளைஞர்கள் உள்ளனர். அவர்களை உடைக்க வழி தேடியபோது தினகரனுக்கும் திவாகரனுக்குமிடையே மோதல் இருப்பதை பயன்படுத்த முடிவு செய்தார்கள். அதைப் பயன்படுத்தி இருவரையும் பிரித்து விட்டார்கள்.

vivekதிவாகரனின் புதிய அணிக்கு அவரால் சிபாரிசு செய்யப்பட்டு இன்று பெயர் சொல்லும் அளவில் தினகரன் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை'' என்றனர்.

இது சாதாரண அரசியல். அதைப் பற்றி திவாகரன் கவலைப்படவில்லை. அவர் அமைப்பு ஒன்றை ஏன் திடீரென ஆரம்பித்தார் என அவருக்கு நெருக்கமானவர்களுக்கே புரியவில்லை. எங்கிருந்தோ ஒரு கட்டளை வருகிறது. அதை திவாகரன் செயல்படுத்துகிறார். அவரை இயக்குபவர் இராவணன். ஜெ. உயிருடன் இருந்த காலத்தில் இருந்து சசிகலா கார்டனில் இருந்து 2011-ம் ஆண்டு வெளியேற்றப்படும் வரை சசிகலாவின் படைத்தளபதியாக கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்தவர்தான் இந்த இராவணன்.

இன்று எடப்பாடி அமைச்சரவையை அலங்கரிக்கும் இரண்டு மணிகளான வேலுமணி, தங்கமணி ஆகியோர் கோவையில் இருக்கும் இராவணன் வீட்டில் தவமாய் கிடந்தார்கள். அப்படி இருந்தவர்களை எம்.எல்.ஏ.வாக்கி, அமைச்சராக்கியதால் பின்னணியில் இருந்தார் இராவணன். முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியும் இராவணனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவராக இருந்ததால்தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜெ.வின் கேபினெட்டில் இராவணன் மூலமாக சசிகலாவின் சிபாரிசால் இடம் பெற்றார். கார்டனிலிருந்து துரத்தப்பட்டு, வழக்குகளில் பின்னப்பட்டு, கைதாகி சிறையை அனுபவித்து ஓரங்கட்டப்பட்டு கோவையில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த இராவணனைப் பிடித்தார்கள். தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடியை சந்திக்க வைத்தார்கள். இவர்களுடன் உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தியும் இணைந்தார். இந்த ஐவர் அணியும் சேர்ந்து போட்ட திட்டத்தின்படி தினகரனை சந்தித்தார் இராவணன்.

சந்திப்பிற்காக ஒரு பிளானை இந்த ஐவர் அணி தயார் செய்தது. சாட்சிக்கு தஞ்சாவூரில் இப்போது ரியல் எஸ்டேட் செய்து வரும் தேசபந்துவையும் அனுப்பி வைத்தது. அதன்படி நடந்த ஆக்ஷன் பிளானை திவாகரனிடம் சொல்லி அனுப்பினார் எடப்பாடி.

""நாங்கள் இன்றுவரை சசிகலாவை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை. ஜெ.வுடன் இணைந்து குற்றம் செய்ததால் தியாகத்தை சிறைவாழ்வாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலாவை தியாகத் தலைவி என நாங்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் சசிகலாவின் தியாகத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சசிகலாவை மட்டுமல்ல நடராஜனையும் நாங்கள் எதிர்க்கவில்லை. அவரது மருத்துவ சிகிச்சைகளுக்காக எங்களது அரசு எந்திரம் பயன்படுத்தப்பட்டது. எங்களுக்கு பிரச்சினை திவாகரன்தான்.

அவர் முதல்வர் ஆக வேண்டுமென்கிறார். அதை ஏற்க ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ் உட்பட தஞ்சை மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை அவர் முதல்வராகும் சூழல் வந்தால் நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்துவிடும். அதனால் எடப்பாடியே முதல்வராக தொடரட்டும். நாம் பா.ஜ.க.வின் ஆதரவை பெறுவோம். அது ஒன்றும் கஷ்டமான காரியமாக தெரியவில்லை. சசிகலாவை மறுசீராய்வு மனுபோட்டு சட்டரீதியாக வெளியே கொண்டு வர முயற்சி செய்வோம். இன்று தினகரனின் அ.ம.மு.க. எப்படி செயல்படுகிறது என உங்களுக்கே தெரியும். தினகரனுக்கும் டாக்டர் வெங்கடேஷுக்கும் மாமனாரான பண்ணைவயல் பாஸ்கர் இப்பொழுதே ஆதாயம் அடைந்தபடிதான் கட்சி பதவி கொடுக்கிறார். தினகரனின் மனைவி அனுராதா வைத்ததுதான் சட்டமாக உள்ளது.

sasifamily

உங்களது மகன் ஜெய்ஆனந்த், இளவரசி மகன் விவேக் ஆகியோர் அரசியலுக்கு வந்தால் குடும்ப அரசியல் என சொல்லும் தினகரன், பண்ணை வயல் பாஸ்கர், டாக்டர் வெங்கடேஷ், அனுராதா ஆகியோர் அ.ம.மு.க.வில் செய்யும் செயல்களை குடும்ப அரசியல் என சொல்ல மறுக்கிறார். மகாதேவனின் இறப்பின்போது நீங்கள் சொன்னதைக் கேட்டுதான் எங்கள் அணி பலம் பெற்றது. தினகரனை நாங்கள் எதிர்த்தோம். தொடர்ந்து சசிகலாவையும் எதிர்க்கும் கட்டாயத்தை எங்களுக்கு தினகரன்தான் உருவாக்கினார்.

21 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆடுகிறார் தினகரன். ஒருவேளை 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு எதிராக வந்துவிட்டால் ஆட்சியை தினகரன் கவிழ்ப்பார். அதற்குப் பதிலாக ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுவார். தினகரன் அணியில் இருக்கும் அறந்தாங்கி ரத்தினசபாபதி, பழனியப்பன், தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உங்களது வெளிப்படையான ஆதரவாளர்கள். இது தவிர பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நீங்கள் சொன்னால் கேட்பார்கள். எனவே நீங்கள் ஒரு முடிவெடுங்கள் என திவாகரனிடம் பேசினார் இராவணன். இராவணன்- திவாகரன் சந்திப்பு நடந்தவுடன் வெற்றிவேலை வைத்து எதிர்வினை புரிந்தார் தினகரன். மோதலை ஆரம்பத்திலேயே தினகரன் வெடிக்க வைத்ததால் அமைப்பை துவக்கி விட்டார் திவாகரன்'' என நடந்ததை விளக்குகிறார்கள்.

நடந்ததையெல்லாம் சசிகலாவிடம் சொல்லி விட்டார் திவாகரன். இந்த வாரத்தில் சசிகலாவை பெங்களூரு சிறையில் சென்று பார்க்க உள்ளார். என்ன இருந்தாலும் தம்பியைத்தான் சசிகலா ஆதரிப்பார் என்கிறார்கள் திவாகரன் ஆதரவாளர்கள். இதற்கிடையே சசிகலாவின் பணத்தை நிர்வாகம் செய்யும் விவேக்கை தங்கள் வசமாக்க தினகரன்-திவாகரனுக்கு இடையே போட்டி நடக்கிறது.

விவேக், திவாகரன் சொல்வதைத்தான் கேட்கிறார். தினகரன் சொல்வதை மதிப்பதில்லை. விவேக்குக்கும் கிருஷ்ணப்ரியாவுக்கும் தினகரனையும் அவரது ஆதரவாளர் வெற்றிவேலையும் அதிகமாக பிடிக்காது என்கிறார்கள் திவாகரன் தரப்பினர்.

""திவாகரன் சொல்வதெல்லாம் பொய். 21 எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் உறுதியாக உள்ளனர். எடப்பாடியும் திவாகரனும் இணைந்தாலும் எடப்பாடி ஆட்சி வீட்டுக்குப் போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடியும் திவாகரனை ஏற்றுக் கொள்ளவில்லை. திவாகரனுக்கும் அவரது மகனுக்கும் உள்ள அரசியல் ஆசைகளுக்காக நாடகம் போடுகிறார்கள். இந்த நாடகம் பக்கா டுபாக்கூர்'' என்கிறார் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல்.

யார் சொல்வது உண்மை என அடுத்தவாரம் பெங்களூரு சிறையில் நடக்கும் சந்திப்புகள் சொல்லிவிடும் என்கிறார்கள் அ.ம.மு.க. தொண்டர்கள்.

-தாமோதரன் பிரகாஷ், பகத்சிங்