"ஹலோ தலைவரே, அரசியல் தலைவர்களும் சாதாரண மனிதர்கள்தான்ங்கிறதை தனது மனைவி மரணத்தின்போது ஓ.பி.எஸ். கலங்கியதைப் பார்த்தப்ப புரிஞ்சிச்சி.''”

"கட்சி வேறுபாடுகளைக் கடந்து, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்குப் போய் ஓ.பி.எஸ்.சுக்கு ஆறுதல் சொன்னது மனிதப் பண்பாட்டின் வெளிப்பாடு''.”

ops-wife

"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ்.சின் மனைவி விஜயலட்சுமி, உடல்நலக் குறைவால் பெருங்குடியில் இருக்கும் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல்நிலை தேறிவந்த நிலையில், 2-ந் தேதி அதிகாலையில் திடீர்னு ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இதனால் ஓ.பி.எஸ். ரொம்பவே உடைந்துபோய்விட்டார். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே, அமைச்சர் துரைமுருகன், மகன் உதயநிதி சகிதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயலட்சுமியின் உடல் இருந்த ஜெம் மருத்துவ மனைக்குப் போயிட்டார். சொந்தக் கட்சிப் பிரமுகர்கள் பலரும் வர்றதுக்கு முன்பே, ஸ்டாலின் வந்ததைக் கண்ட ஓ.பி.எஸ்., நெகிழ்ந்துபோய்க் கண்ணீர் வடிக்க, அவரது கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னார் ஸ்டாலின்.''”

"ஓ.பி.எஸ்.சிடம் துக்கம் கேட்க, சசிகலா வந்ததும் கவனிக்கப்பட்டதே?''”

"ஆமாங்க தலைவரே... சசிகலா வந்து கொண்டிருப்பதாக ஓ.பி.எஸ்.சுக்குத் தகவல் வந்தது. இதைக்கேட்டு அவர் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டார். பிறகு, அவர் தன் அருகே சோகமாக அமர்ந்திருந்த எடப்பாடியிடமும் மற்றவர்களிடமும் இதைச் சொல்ல, பகீரானார் எடப்பாடி. மற்ற அ.தி.மு.க. மாஜி மந்திரிகளும் கட்சிப் பிரமுகர்களும் நெளிந்தனர். அப்போது எடப்பாடி, "அந்தம்மா பக்கத்துல வந்துட்டாங்க போலிருக்கு. நான் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்'னு பதட்டமா எழுந்தார்.''”

"ம்...''”

"அப்ப கே.பி.முனுசாமி, "அந்தம்மா வந்தால் என்ன? நீங்கள் எதுக்குக் கிளம்பறீங்க?'ன்னு எடப்பாடியை இருக்கச் சொன்னார். எடப்பாடியோ அதை ஏற்காமல், அங்கிருந்து அவசரம் அவசரமாக கிளம்பிவிட்டார். அதற்குள் மருத்துவ நடைமுறைகள் முடிந்து, விஜயலட்சுமியின் உடல், அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தயாரான நிலையில், சசிகலா அங்கே வந்து சேர்ந்தார். ஓ.பி.எஸ்.சின் கரங்களைப் பற்றிக்கொண்டு ஆறுதல் சொல்ல, இருவருமே அப்போது கண்ணீர் வடிச்சிருக்காங்க. அங்கிருந்த மாஜி மந்திரிகள் சசிக்கு வணக்கம் வைக்க, அவரும் பதில் வணக்கம் வச்சிருக்கார். மருத்துவமனைக்கு அ.தி.மு.க. கொடி கட்டிய காரில்தான் சசிகலா வந்திருந்தார். ஓ.பி.எஸ்.சின் மனைவி உடல் அவர்கள் சொந்த ஊரான பெரியகுளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.''”

"காங்கிரஸின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கே?''”

"தமிழக காங்கிரசுக்கு தமிழகத்தில் அமைப்பு ரீதியா 72 மாவட்டங்கள் இருக்கு. உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போன மாதம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டாங்க. மேலும் கட்சியில் இருக்கும் 23 துணை அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்களை நியமியுங்கள்னு கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பலரும் இதில் அசட்டையைக் கடைப்பிடிச்சிருக்காங்க. இந்தச் சூழலில் கடந்த 30-ந் தேதி கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்திலும் கலந்துக்கிட்டாங்க. அப்ப, சசிகாந்த் செந்தில், "இன்னும் 8 மாவட்டங்களில் துணை அமைப்புகளுக்கான பொறுப்பாளர்களை ஏன் நியமிக்கலை? 15 நாளில் புதிய நியமனங்களை நியமிக்காவிட்டால், தலைமை எடுக்கும் முடிவுகள் கசப்பானதாக இருக்கும்'னு எச்சரிச்சிருக்காரு.''”

"அ.தி.மு.க.வினரை காங்கிரஸுக்கு இழுக்கணும் என்கிற குரலும் அந்தக் கூட்டத்தில் எழுந்திருக்கே?''”

"ஆமாங்க தலைவரே... மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "என் தந்தை குண்டுராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது, எங்கள் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். வந்திருக்கார். இன்று நாம் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். இருந்தாலும், நாம் நம் கட்சியை வலிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பலவீனமாகிவிட்ட அ.தி.மு.க தொண்டர்களை பா.ஜ.க. இழுக்கப் பார்க்குது. அவர்களை நாம் நம் பக்கம் கொண்டுவரணும்'னு உற்சாகமாகச் சொன்னார். அப்ப, "அவங்க எப்படி நம்ம பக்கம் வருவாங்க'ன்னு சிலர் முனகினாங்க.''”

"நானும், அது தொடர்பா எனக்குக் கிடைச்ச தகவலைச் சொல்றேன். தினேஷ் குண்டுராவ் பேசியதும், எரிச்சலாகப் பேச ஆரம்பித்த கட்சியின் துணைத்தலைவர் விஜயன், "கட்சியை வளர்க்க உழையுங்கள்னு சொல்கிறீங்க. தேர்தல்னு வந்துட்டா உழைத்தவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது இல்லை. பணம் கொடுப்பவனுக்கும் வாரிசுகளுக்கும்தானே சீட்டையும் பதவிகளையும் கொடுக்க றீங்க'ன்னு தொண்டர்களின் குரலை எதிரொலிச்சிருக்காரு.''