மதுரையை அடுத்துள்ள குன்னத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணன், அவரது உதவியாளர் முனியாண்டி ஆகியோரை கடந்த 11-ஆம் தேதி இரவு மர்ம கும்பல் வெட்டிச் சாய்த்தது. இது இப்பகுதி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஊராட்சிமன்றத் தலைவரான கிருஷ்ணன் இந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இறந்த இருவரும் காலை, மாலை நேரங்களில் அருகிலுள்ள மலைக்கோட்டை பகுதிக்குச் சென்று சிறிது நேரம் காற்றோட்டமாக அமர்ந்துவருவது வழக்கம். சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு கிருஷ்ணனும் முனியாண்டியும் மலைக்கோட்டையில் பேசிகொண்டிருந்த போது 8-க்கும் மேற்பட்ட நபர்கள் அவர்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
இருவரின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப் பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரான குன்றத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வரும் வழியில் பொதுமக்கள் ஆயி ரக்கணக்கில் ஒன்று திரண்டு கொலை யாளியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் திரண்டிருந்தவர்கள் குன்றத்தூர் முன்னாள் பஞ்சாயத்து செயலாளர் பால்பாண்டி வீட்டை அடித்துநொறுக்கினர்.
இதனையடுத்து போலிஸ் பாது காப்புடன் பிரேத அடக்கம் நடந்தது. பால்பாண்டி மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதியை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். என்னதான் நடந்த தென நாம் அங்கு சென்று விசாரிக்கத் தொடங் கினோம் கொலையான ஊராட்சித் தலைவர் கிருஷ்ணனின் அண்ணன் பாஸ்கர் நம்மிடம், ""பால்பாண்டி மற்றும் அவரைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகச் சொல்கிறார்களே தவிர இதுவரை இன்னார் தான் கொலையாளி என்று உறுதிப்படுத்த வில்லை. என் தம்பியின் இறுதி ஊர்வலத்தில் சிலபேர் கோபத்தில் பால்பாண்டி வீட்டின் மீது கல் எறிந்ததாக எங்கள் தரப்பு ஆட்கள் 15 பேரை கைது செய் திருக்கிறார்கள். படுகொலை நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கமுடியாமல் காவல்துறை திணறுகிறது. உண்மையி லேயே குற்றவாளிகளைப் பிடிக்கமுடிய வில்லையா… இல்லை மேலிடத்திலிருந்து அழுத்தம் வருகிறதா… எட்டுப் பேர் கொண்ட கும்பல் சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் ஒருவர்கூடவா போலீசில் சிக்கவில்லை. ஆளும்தரப்பின் தலையீடு இந்த வழக்கில் இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கிருஷ்ணனின் மறைவால் எங்கள் குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது'' என்றார் சோகமாக.
மக்களின் கோபத்துக்காட்பட்டு கல் வீச்சுக்கு உள்ளான ஊராட்சி மன்றச் செயலாளர் பால்பாண்டி வீட்டிற்குச் சென்றோம். பலத்த போலீஸ் பாதுகாப்போடு இருந்த அவரது தாய் வெள்ளச்சி, ""தம்பி, என் மகன் நிரபராதி. 2012-ல் என் கணவர் பெரியகருப்பனை அவர்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் விபத்து ஏற்படுத்திக் கொன்றுவிட்டார்கள். இருந்தும் நாங்கள் பொறுத்துப் போனோம். பகை வேண்டாம் என்று ஒதுங்கியுள்ளோம். ஒரே இடத்தில் வேலைபார்க்கும்போது சிறு சிறு மனஸ் தாபங்கள் இருக்கும். அதற்காக என் மகன் கொலையளவுக்கெல்லாம் போகமாட்டான். என் மகனின் மீது ஊர்மக்களும் வீண்பழி சுமத்து கிறார்கள். எங்கள் வீட்டை அடித்து நொறுக்கிவிட்டனர். என் மகனையும் போலீஸ் விசாரணை செய்துள்ளது'' என்றார்
கிருஷ்ணன் கொலையான தகவல் கிடைத்ததும் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ""கொலையாளி களை நெருங்கிவிட்டோம். விரைந்து கைது செய்வோம்'' என்றார்.
நடந்த கொலைச்சம்பவம் குறித்து இப்பகுதியைச் சேர்ந்த வர்கள், ""ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் நல்ல மனுஷன். அவரை வெட்டிச் சாய்த் திருக்க வேண்டாம். பலியான ரெண்டு பேருக் குமே ஏராளமான கத்திக்குத்து, அரிவாள் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. முன் கூட்டியே திட்டம்போட்டு சம்பவத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு முன்தினம் மதுரை பாண்டி கோவில் வளாகத்தில் துணை பூசாரி முத்துராஜாவை பட்டப் பகலில் மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலைசெய்துள்ளது. அந்த கும்பல் அன்று இரவு குன்னத்தூர் மலைக்கோட்டையில் தங்கியிருந்ததாக இங்கு ஆடு மேய்ப்பவர்கள் கூறுகிறார்கள். பொதுமக்களும் பார்த்திருக் கிறார்கள். அவர்கள் கூலிப்படையாக இருக்கும் என போலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலை யாளிகளை போலீஸ் விரைந்து கைதுசெய்ய வேண்டும்'' என்கின்றனர்.
காவல்துறை தரப்போ, ""கொலை நிகழ்ந்தபின்பு இருவரது உடலையும் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் பயனில்லை. ஊராட்சிக்கு புதிய செயலர் நியமிப்பது குறித்து சர்ச்சைகள் நிலவி வந்ததாகத் தெரிகிறது. விசாரணையில் அந்தக் கோணத்தையும் கருத்தில் கொண்டுள்ளோம். விரைவில் உண்மைகள் வெளிப்படும்'' என்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மதுரையில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. குற்றங்களின் தலைநகராகிறதா தூங்கா நகரம் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளை விரைவில் பிடிப்பதும், அவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருவதும்தான் மேலும் கொலை நடப்பதை தடுத்து நிறுத்தும். காவல் துறை மேலும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
-அண்ணல்