"காவல்துறை என்று சொல்லிக்கொண்டு, போலியான தேடுதல் வாரண்டுடன் வந்தவர்கள், வீட்டிலிருந்த 170 பவுன் தங்கநகை, பணத்தை கொள்ளையடித்தார்கள். இப்போது மேலும் ரூ.30 லட்சம் கொடுக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமான உங்கள் மதுரை காவல் துணை ஆணையர் பழனிகுமார், இன்றும் எங்களை மிரட்டி வருகிறார்'' என்று மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் மதுரையில் மிகவும் பெயர்பெற்ற குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களது தரப்பில் அமைச்சரிலிருந்து எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எங்களைக் கொலையும் செய்வார்கள் என்று அழுது கூப்பாடு போட்டவர்களை, சமாதானம் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.
மதுரை ஆணையூரைச் சேர்ந்தவர் குணசேகரன். பொதுப் பணித் துறையில் ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவரது நெருங்கிய உறவினர்தான் மதுரை காவல் துணை ஆணையர் பழனிகுமார். குணசேகரனின் அண்ணன் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் சோலை முத்தையாவின் மகன் சோலைராஜா, இந்திய விளையாட்ட
"காவல்துறை என்று சொல்லிக்கொண்டு, போலியான தேடுதல் வாரண்டுடன் வந்தவர்கள், வீட்டிலிருந்த 170 பவுன் தங்கநகை, பணத்தை கொள்ளையடித்தார்கள். இப்போது மேலும் ரூ.30 லட்சம் கொடுக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமான உங்கள் மதுரை காவல் துணை ஆணையர் பழனிகுமார், இன்றும் எங்களை மிரட்டி வருகிறார்'' என்று மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் மதுரையில் மிகவும் பெயர்பெற்ற குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களது தரப்பில் அமைச்சரிலிருந்து எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எங்களைக் கொலையும் செய்வார்கள் என்று அழுது கூப்பாடு போட்டவர்களை, சமாதானம் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.
மதுரை ஆணையூரைச் சேர்ந்தவர் குணசேகரன். பொதுப் பணித் துறையில் ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவரது நெருங்கிய உறவினர்தான் மதுரை காவல் துணை ஆணையர் பழனிகுமார். குணசேகரனின் அண்ணன் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் சோலை முத்தையாவின் மகன் சோலைராஜா, இந்திய விளையாட்டு சம்மேளனத்தில் தலைவராக இருக்கிறார். அ.தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இவர், அமைச்சர் செல்லூர் ராஜூவின் வலதுகரமாகவும் இருக்கிறார். இதில் குணசேகரனுக்கும், பழனி குமாருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக நீண்டகால பிரச்சனை இருந்துள்ளது. நீதிமன்றத்தில் குணசேகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கும் நிலையில்தான், அந்த சம்பவம் நடந்தது. இதில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் குணசேகரனின் மனைவி பரஞ்சோதி, நடந்தவற்றை அதிர்ச்சி விலகாமல் விவரித்தார்.
""ஜூலை 27ந்தேதி காலை வீட்டுக்கதவை யாரோ பயங்கரமாக தட்டினார்கள். பதட்டத்தோடு கதவைத் திறந்தபோது, போலீஸ் அதிகாரிகளைப் போல சிலர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒரு பெண், நிர்மலா என பேட்ஜ் அணிந்திருந்தார். இன்னொருவர் யூனிஃபார்மில் ரஞ்சித் என்ற பேட்ஜுடன் இருந்தார். மற்ற மூவர் மஃப்டியில் இருந்தனர். என்னவென்று விசாரித்தபோது கோர்ட் சீலுடன் கூடிய போலியான தேடுதல் வாரண்டைக் காட்டி, வீட்டில் தடை செய்யப் பட்ட பொருட்கள் இருப்பதாக சொன்னார்கள். எவ்வளவோ சொல்லியும் பிடிவாதம் காட்டியதால் உள்ளே அனுமதித்தோம். உள்ளே வந்தவர்கள் வீட்டிலிருந்தவர்களின் செல்போன்களை பிடுங்கிக்கொண்டு, பீரோ சாவியை வாங்கியவர்கள் அதிலிருந்த 170 பவுன் தங்கநகை, ரூ.2.70 லட்சம் ரொக்கத்தை பையில் போட்டபோது தான், நான் சுதாரித்துக் கொண்டு கத்தினேன்.
என்னையும், என் மகன் கதிரவனையும் ஒரு அறையில் தள்ளி அடைத்தார்கள். நான் உதவி கேட்டு கதறினேன். உடனே என் கணவரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்ட ஆரம்பித்தனர். என் அலறல் சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்குவந்த கூடல்புதூர் போலீசார், கதவைத் தட்டியபோது, நாங்க டி.சி. பழனிகுமார் டீம்தான் என்று அவர் களிடம் சொன்னதோடு, டி.சி. பழனிகுமாருக்கு போன் போட்டும் கொடுத்தார் ரஞ்சித். வந்தவர்களோ, நமக்கேன் வம்பு என்று கிளம்பிவிட்டார்கள்.
"சார் போகாதீங்க' என்று நான் கத்திய போது, ஐந்துபேரில் மூவர் தங்கள் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை மேசைமீது வைத்து செல்போனில் வீடியோ எடுத்தார்கள். அப்போது அவர்களது செல்போனுக்கு அழைத்த டி.சி. பழனிகுமார், ""ஒழுங்கா போலீஸ் சொல்றதைக் கேளு. இல்லைன்னா, உன்னையும், உன் மகனையும் என்கவுண்டர் பண்ணிருவோம்'' என்றதோடு, வந்தவர்களிடம் ரூ.30 லட்சம் கொடுத்து அனுப்பும்படியும் சொன்னார்.
எங்கள் வீட்டில் ஆறு துப்பாக்கிகள் இருந்ததாக என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு, நகை, பணத்தோடு அந்த கும்பல் கிளம்பியது. லைசன்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததாக, என் கணவர்மீது வழக்குப்பதிவு செய்தார்கள். இதில் சோலைராஜாவையும் தொடர்புபடுத்தி சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கில் முகாந்திரம் இல்லையெனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது, போலி தேடுதல் வாரண்டுடன் காவல்துறையினர் என்ற போர்வையில் வந்த கும்பல், அவர்களை தயார்செய்து அனுப்பிய டி.சி. பழனிகுமார் எனச் சொல்லி எங்களை மிரட்டி நகை, பணத்தை எடுத்துச் சென்றது, போனில் மிரட்டியது என சி.சி.டி.வி., ஆடியோ ஆதாரங் களை நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார் உடைந்த குரலில்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் பழனிகுமாரிடமே கேட்டோம். ""குணசேகரனின் முதல் மனைவி பிள்ளைகளுக்கும், இவர்களுக்கும் இடையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. இதில் என்னை எதற்காக இழுத்து விடுகிறார்கள் என்று தெரியவில்லை''’ என்றவரிடம், ""நீங்களும் குணசேகரனுக்கு நெருங்கிய உறவுமுறை தானாமே. அவர்களிடம் ரூ.30 லட்சம் பணம்கேட்டு மிரட்டினீர்களா?'' என்று கேட்டபோது, ""நாங்கள் உறவினர்கள்தான். ஆனால், அவர்கள் என்னைப்பற்றி சொல்வதெல்லாம் பொய்'' என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
தனது குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்பற்றி பரஞ்சோதி போலீஸில் புகார்கொடுத்த பிறகும், டி.சி. பழனிகுமார் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம்சாட்டுகிறது குணசேகரன் தரப்பு. துணை கமிஷனரே ஒரு குடும்பத்தை சினிமா பாணியில் மிரட்டியிருப்பது, மதுரையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
-அண்ணல்