தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், முதலில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த், சதீஷ், வசந்தகுமார், ஆச்சிப்பட்டி மணிகண்டன் ஆகிய ஐந்துபேரும் சேலம் சிறையில் உள்ளனர். பின்னர் கைதான அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு, அருண்குமார் ஆகிய நான்குபேர் கோவையில் உள்ளனர். 9 பேரும் கடந்த 20-ந் தேதி சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கூடுதலாக குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலான குற்றப்பத்திரிகை நகல் என்பதால் 9 பேரும் கலங்கிப்போய்விட்டார்கள் என்றது போலீஸ் தரப்பு. கோர்ட் விசாரணை முடிந்ததும் கிளம்பி, சேலம் போலீஸ் வாகனம் திடீரென நீலம்பூர் டோல்கேட் அருகே சட்டென பிரேக் அடித்து நின்றது. சாலையோரத்தில் தயாராக 5 பேரின் உறவினர்களும் நின்றிருந்தார்கள். "தங்கம், சாமீ நல்லா இருக்கியா?' என 5 பேரிடமும் கண்ணீரும், கம்பலையுமாக நலம் விசாரித்தார்கள். இதில் திருநாவுக்கரசும், சதீசும் வாகனத்தின் கதவு திறந்து படியில் நின்று உறவினர்களுடன் உணர்ச்சிவசமாய் பேச... பிறகு சேலம் போலீசார் வாகனத்தைக் கிளப்பி போனார்கள்.
சேலம் போலீசார் அளித்த இந்த சிறப்பு சலுகை சம்பவம் சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல் ஹோடாவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். "5 அக்யூஸ்ட்களின் உறவினர்களுக்கும் வாகனம், இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு வரும், இங்கே நிற்க வேண்டும் என தகவல் தந்தது யார்?' என விசாரிக்கப்பட்டது. சரியான பதில் வராததால், விதிமுறைகளை மீறியதற்காக ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. சுப்பிரமணியம், போலீசார் வேல்குமார், பிரபு, ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் சேலம் கமிஷனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கைதான பாலியல் குற்றவாளிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போலீசாரும் சலுகை அளித்திருப்பது வேதனைக்குரியது என்கிறார்கள் பொள்ளாச்சி மக்கள்.