"ஜெயராஜ்-பென்னிக்ஸிற்கு ஒரு நீதி... மணிகண்டனுக்கு ஒரு நீதியா..?' என மாணவர் மணிகண்டனின் இறப்புக்கு எதிராக குரல் எழுப்புகின்றன அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

கடந்த 4-ஆம் தேதியன்று முதுகுளத்தூர் நீர்க்கோழியேந்தல் கிராமத்தினை சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணக்குமார்-ராமலட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் மணிகண்டன், வாகன சோதனையின்போது கீழத்தூவல் காவல்நிலைய போலீஸாரால் பிடிக்கப்பட்டு, விசாரணைக்குப் பின் பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மறுநாள் உடல் நலக்குறைவால் மணிகண்டன் மரணமடைய... "போலீஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால்தான் மணிகண்டனுக்கு இறப்பு ஏற்பட்டது' என மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய, பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. இது அரசியல் களத்திலும் எதிரொலித்தது.

dd

Advertisment

"எம்மவன் கமுதியிலுள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் 2-ம் வருஷம் படித்து வருகின்றான். பைக்கில் கீழத்தூவல் பக்கம் போகையில், அங்க காளி கோயில் பக்கம் நின்று, வண்டியை மறிச்சு செக்பண்ணிட்டிருந்த லட்சுமணன், பிரேம்குமார் ஆகிய இரண்டு போலீஸ்காரங்க, என்னுடைய மகனையும் மறிச்சு வண்டியோட ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போயிட்டாங்க. அங்க வைச்சு அடியோ அடின்னு அடிச்சுட்டு, எங்களை வரவழைச்சு எழுதி வாங்கிட்டு அனுப்பிட்டாங்க. வீட்டுக்கு வந்த புள்ள அழுதுக்கிட்டே, போலீஸ் அடிச்ச விபரத்தை சொன்னுச்சு. சமாதானம் சொல்லி தூங்க வைச்சேன்.

மறுநாள் பார்த்தால் பொணமாத்தான் கிடந்தாப்ல. அடிச்ச போலீஸ்காரங்க மீது கொலை வழக்கு பதியணும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன்'' என்றார் இறந்த மாணவர் மணிகண்டனின் தாயான ராமலெட்சுமி.

இதேவேளையில், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையோ இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், "அன்றைய தினம் பச 05 ஈஉ 2641 என்கின்ற பதிவெண் கொண்ட பைக்கில் இறந்த மாணவர் மணிகண்டன் வாகனத்தை இயக்க, பின்சீட்டில் ஒருவன் இருந்துள்ளான். பைக்கை போலீசார் நிறுத்தியபோது, அவனது தூண்டுதலால் வண்டி அங்கு நிற்காமல் சென்றது. போலீஸாரும் விரட்டிப் பிடிக்க, பின் சீட்டில் இருந்தவன் தப்பிவிட்டான். பிடிபட்ட மணிகண்டனை விசாரிக்கும்போதுதான், தப்பியவன் சஞ்சய் என்பதும் கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, அடிதடி என பல வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் என்பதும் தெரிந்தது. வாகனமும் சொந்தமானதில்லை. திருட்டு வண்டி என்றாலும் மணிகண்டன் மாணவன் என்பதால் அவனுடைய குடும்பத்தார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த இராமலிங்கத்தின் சாட்சியத்துடன் அனுப்பப்பட்டான். இதற்கு சி.சி.டி.வி. காட்சிகள் தொடங்கி வீடியோ பதிவுகள்வரை உள்ளது. முழுமையான விசா ரணையை டி.எஸ்.பி. மேற்கொண்டிருக்கிறார்'' என்கிறது.

Advertisment

மணிகண்டனின் தாயார் ராமலெட்சுமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வர, "ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவரது உடல் அடக்கம் செய்ய கொண்டு செல்லும்வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். அதன்படி உடற்கூராய்வுக்கான தொடக்க வேலைகள் நடைப்பெற்ற நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த மதுரை மருத்துவர் சரவணனை உடற்கூராய்வின்போது அனுமதிக்க வேண்டும் என இறந்த மணிகண்டன் சார்ந்த சமுதாய அமைப்புக்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையில் பா.ஜ.க. சரவணன் அனுமதிக்கப்பட்டார். உடற்கூராய்வு முடிந்த நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் மணிகண்டனின் இறுதிச்சடங்கு நடந்தது.

mm

"கடந்த ஆட்சிக் காலத்தில் முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, கடலாடி பகுதிகளில் கஞ்சா வியாபாரம் சாதாரணம். குறிப்பாக மாணவர்களை குறிவைத்தே இங்கு கஞ்சா வியாபாரம் நடக்கின்றது. கஞ்சாவை ஒழிக்கவேண்டிய போலீஸ் மற்றும் தனிப்பிரிவு போலீஸ், குறிப்பிட்ட தரப்பினரின் உறவினர்களாக இருப்பதால் இங்கு அதற்கு தடை போட ஆள் இல்லை. எஸ்.பி.க்கு தகவல் சொல்லவேண்டிய தனிப்பிரிவு எதனையும் தெரிவிப்பதில்லை. கஞ்சா வியாபாரியான சஞ்சய் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தது, வாகன சோதனையில் மணிகண்டனை போலீசிடம் சிக்க வைத்திருக்கிறது. கடந்த ஆட்சியில் கஞ்சாவை இப்பகுதியில் தடை செய்யத் தவறிய போலீஸ், இந்த ஆட்சி யில் உயிர்ப்பலி சர்ச்சை யில் தலையைக் கொடுத் திருக்கிறது" என்கிறார் முதுகுளத்தூரைச் சேர்ந்த உளவு அதிகாரி ஒருவர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சாத்தான்குளம் காவல் துறையின் கொடூரத் தாக்குதலுக்குள்ளான ஜெயராஜ்-பெனிக்ஸ் மரணம் தமிழ்நாட் டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அப்போது முழுமையான விசாரணைக்கும் வெளிப்படையான அறிக்கைகளுக்கும் தி.மு.க வலியுறுத்தியது. இப்போது அந்தக் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், மணிகண்டன் மரணம் குறித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வலியுறுத்த, பா.ஜ.க. அரசியல் செய்ய, சாதி அமைப்புகளும் இதன் பின்னணியில் உள்ளன.

உடற்கூராய்வு அறிக்கை அடிப்படையில் முழுமையான விசாரணையும், உண்மைகளும் வெளிப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் மிகப்பெரும் சவாலாகியுள்ள கஞ்சா போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.