சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டைக் கொலைகளின் இரத்த வாடை காய்வதற்குள் மற்றொரு காவல் மரணம் தமிழ்நாட்டை உலுக்குகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (எ) செல்வமுருகன். 40 வயதான இவருக்கு பிரேமா என்ற மனைவியும், மன்மதன் என்ற மகனும், லீனா என்ற மகளும் உள்ளனர். முந்திரி வியாபாரம் செய்துவந்த இவர்கள் தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் தங்கியிருந்தனர்.

jjial

முந்திரி வியாபாரத்தில் நன்றாகவே வாழ்ந்த செல்வமுருகன் கடந்த 28-10-2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26- ல் காவியா என்ற பெண் அணிந்திருந்த செயினைப் பறித்ததாகக் கூறி நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதாகி சிறையிலடைக்கப் பட்டார்.

Advertisment

கடந்த நவம்பர் 02-ஆம் தேதி செல்வ முருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகக் கூறி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையளிக்கப் பட்ட அவர், 04-ஆம் தேதி மீண்டும் வலிப்பு வந்து இறந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

செல்வமுருகன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேசமயம் செல்வமுருகனின் மனைவி பிரேமா, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம் "கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதில்தான் அவர் உயிரிழந்தார் எனவும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றும் புகார் மனு அளித்தார்.

நம்மிடம் பேசிய செல்வமுருகனின் மனைவி பிரேமா, ""நாங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் முந்திரி வியாபாரம் செய்துவருகிறோம். வியாபாரத்திற்காக நெய்வேலி இந்திரா நகரில் தங்கியிருந்தோம். என் அப்பா, என் அண்ணன் என குடும்பமே போலீஸ் குடும்பம்தான். கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி காலையில் வீட்டைவிட்டுச் சென்ற கணவர் நெடுநேரமாகியும் வராததால், மறுநாள் நானும், என் உறவினர்களும் அவர் செல்லும் இடங்களி லெல்லாம் தேடினோம்.

Advertisment

பின்னர் வடலூர் ஸ்டேஷனில் "என் கணவரைக் காணவில்லை'’ என்று புகார் கொடுத்ததற்கு "நீங்கள் இந்திரா நகரில் தங்கியிருப்பதால் நெய்வேலி ஸ்டேஷனில் புகார் கொடுங்கள்' என்றனர். அதன்பின்னர் இரவு 8 மணியளவில் நெய்வேலி ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்தால்... ‘"டைம் ஆகிடுச்சும்மா, நாளை காலை 10 மணிக்கு வந்து பெட்டிஷன் கொடுங்கள்'’ என்று சொன்ன போலீஸ்காரர்கள், எங்களை குரூப்பாக நிற்க வைத்து போட்டோவும் எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்கள்.

jail

மறுநாள் காலை என் கணவர் செல்போனிலிருந்து "போலீஸ் ஸ்டேஷன்லருந்து பேசறோம்'’னு எனக்கு போன் வந்தது. ‘"இந்திரா நகர்ல இருக்கற ராணி & ராணி லாட்ஜ் பக்கத்துல இருக்கறோம். நீங்க அங்கே தனியா வந்துடுங்க'ன்னு சொன்னாங்க, நான் என் பொண்ணை மட்டும் அழைச்சிட்டு அங்கே போனோன். அங்கே நீல நிற இன்னோவா கார்ல என் கணவரோடு 3 பேர் போலீஸ் யூனிபார்ம் இல்லாம காருக்குள் இருந்தார்கள். வெளியே 3 பேர் போலீஸ் யூனிபார்ம்ல இருந்தாங்க. அப்போது ஒரு போலீஸ்காரர், ""உம்புருசனை ஒரு திருட்டு கேஸ்ல பிடிச்சிருக்கிறோம். அவர்மேல கேஸ் போடாம இருக்கணும்னா போயி 10 பவுன் நகை, இல்லைன்னா 4 லட்சம் பணம் எடுத்துட்டு வந்து தந்துட்டீன்னா உம் புருசன்மேல எந்த வழக்கும் போடாமல் விட்டுடுறோம்''’என்றார்கள்.

""எம் புருசனை காணோம்னு நேற்று நெய்வேலி வடக்குத்து ஸ்டேஷனுக்கு போனோம் அங்க பெட்டிஷனை வாங்கவில்லை. இப்ப என் கணவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல் றீங்களே. அதுக்கு ஆதாரம் இருக்கா...'னு நான் கேட்டதுக்கு... "அதெல்லாம் உன்கிட்டே காட்டனும்னு அவசியமில்லை' என்றனர்.

""என் அப்பாவும் போலீஸ், என் அண்ணனும் போலீஸ். எங்களுக்கே இந்த நிலைமையா''ன்னு சொன்னதற்கு, ""அப்போ 10 பவுன் வேண்டாம், உன் கழுத்துல போட்டிருக்கிற தாலிச்செயினை கழற்றிக் கொடுத்துட்டு புருஷனை அழைச்சிட்டுப் போ. இல்லேன்னா, ஸ்டேஷன்ல இருக்கிற பெண்டிங் கேஸ் எல்லாத்தையும் உன் புருசன் பேரில் போட்டு உள்ளே தள்ளிடு வோம்''’என்று மிரட்டினார்கள்.

“எதா இருந்தாலும் ஸ்டேஷன்ல வச்சி பேசிக்கலாம்னு வந்துட்டோம். 30-ஆம் தேதி காலையில் பெட்டிஷன் கொடுக்க நெய்வேலி வடக்குத்து ஸ்டேஷனுக்குப் போனோம். என்னை உள்ளே விடவில்லை. ‘பின்னர் ஸ்டேஷனுக்குள் அழைத்து வெற்று பேப்பரில் கையெழுத்து போடச்சொன்னார்கள். நானோ, ‘நான் ""போடமாட்டேன்''’என்று சொன்னதற்கு, ‘"கையெழுத்துப் போடவில்லை என்றால் உன்னை தொலைச்சிடுவோம்'னு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மிரட்டினார். ஒரு பெண் போலீசும் என்னை அடிப்பதுபோல மிரட்டினார். வேறு வழியில்லாமல் கையெழுத்துப் போட்டேன்.

jail

அதன்பிறகு, "உன் புருசனை அரஸ்ட் பண்ணியிருக்கோம், அவன் மேல எத்தனை கேஸ் இருக்குதுன்னு தெரியுமா?'’என்றார்கள்... மிரட்டினார்கள். நான் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து என் நாத்தனாருக்கு போன்போட்டுச் சொல்ல, அவரது கணவர் வக்கீலோட வந்தபோது என் கணவர் ஸ்டேஷனில் இல்லை. கொரோனா டெஸ்ட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கிறதா சொன்னார்கள்.

பிறகு விசாரித்ததில்... "இந்த போலீஸ்காரங்க பணக்கார ஆட்களா பார்த்து இப்படி பொய் கேஸ் போடுவதாக மிரட்டியே நெய்வேலி பகுதியில் வசதியானவர்கள் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்திருக்கிறார்கள்' என தெரியவந்தது.

02-ஆம் தேதி விருத்தாசலம் சப்-ஜெயிலுக்கு என் கணவரைப் பார்ப்பதற்காக சென்றோம். எங்களுக்கு முன்பாகவே நெய்வேலி போலீசார் இருவர் ஜெயிலுக்கு வந்து என் கணவரை ஜெயிலிலிருந்து கைத்தாங்கலாக வெளியே அழைச்சிட்டு வந்தாங்க.‘""என் கணவருக்கு என்ன சார் ஆச்சு''ன்னு கேட்டேன். ‘""உன் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு அழைசிட்டுப் போறோம்''னு சொன்னாங்க. நாங்களும் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே என் கணவருக்கு ட்ரிப் ஏறிக்கொண்டிருந்தது. என் கணவரிடம் பேசியபோது, ‘""நல்லா அடிச்சிட்டாங்க, வாயெல்லாம் புண்ணா இருக்கு, என்னால சுத்தமா சாப்பிடமுடியலை. டாக்டர்கிட்டே சொல்லி எதாவது மருந்து வாங்கிக் கொடு''’ என்றார். ‘""கடலூருக்கு வேண்டுமானால் ரெபர் பண்றேன், அங்கே அழைச்சிட்டு போயி ட்ரீட்மெண்ட் பார்த்துக்கோங்க''’’ என்று சொன்னார் டாக்டர். ஆனால் அங்கிருந்த 2 போலீசாரும் அவரை மீண்டும் ஜெயிலுக்கு அழைச்சிட்டுப் போறதிலேயே குறியாக இருந்து அழைச்சிட்டுப் போய்ட்டாங்க.

baagf

04-ம் தேதி இரவு 11.45 மணிக்கு, ‘""விருத்தாசலம் ஜெயில்லருந்து பேசறோம். உங்க கணவருக்கு உடம்பு சரி யில்லை. நீங்க புறப்பட்டு வாங்க''ன்னு சொன்னாங்க. அடுத்த இருபது நிமிசத்தில ‘"உங்க கணவர் வலிப்பு வந்து இறந்து விட்டார்'னு சொன்னாங்க. ""என் கணவருக்கு வலிப்பு வியாதியே கிடையாது. என் கணவர் சாவுக்குக் காரணமான நெய்வேலி வடக்குத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், நெய்வேலி க்ரைம் பிராஞ்ச் டீமிலுள்ள சுதாகர் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களுக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டும்''’என்றார் அழுதுகொண்டே.

இது குறித்து சசி மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கடலூர் பாபு, “""செல்வமுருகன் கடந்த 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு 2 நாட்கள் சட்டவிரோதக் காவலில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தாரிடம் நகை, பணம் கேட்டு பேரம்பேசி அவர்கள் தராததால் வழக்குப்போட்டு சிறையிலடைத்துள்ளனர். 3 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்தியதே கண்டிக்கத்தக்கது.

நீதிமன்றக்காவலில் இருந்த விசாரணைக் கைதி மரணத்திற்கு அரசும், சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் பாதிக்கப்பட்ட கைதியின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் உடனே வழங்கவேண்டும். சிறைகளில் மரணங்கள் தடுப்பது குறித்து கடந்த 2014-ல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள 15 அம்ச வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், “""இந்த மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணையும், நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

-சுந்தரபாண்டியன்

________________

அரசின் இரட்டை வேடம்! சட்டப்போரில் வேல்முருகன்!

பாதிக்கப்பட்ட செல்வமுருகன் குடும்பத்துக்கு நீதிகேட்டு போராடிவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் velmuruganநம்மிடம், ""எடப்பாடி ஆட்சியில் காவல்துறையின் எதேச்சதிகாரம் கட்டுக்கடங்காமல் போகிறது. இதனால் காவல்நிலையங்களில் நிகழ்த்தப்படும் கொடூர சித்ரவதைகளால் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையை கட்டுப்படுத்த துணிச்சல் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்நிலைய மரணங்களுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

"கணவரை காணவில்லை' என பிரேமா கொடுத்த புகாரை வாங்க மறுத்ததுடன், ஸ்டேசனை விட்டு வெளியே வந்தபோது, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் க்ரைம் போலீஸார் ஆகியோர் பிரேமாவிடம், "உன் புருஷன் செல்வமுருகன் மீது பல வழக்குகள் இருக்கு; அவனைத் தேடாதே' என மிரட்டிவிட்டு போயிருக்கிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல், கணவருக்கு சித்ரவதை, மருத்துவமனையில் அனுமதிப்பதில் தாமதம், இதுவரை இல்லாத வலிப்பு நோயினால் இறந்ததாக சொன்னது எல்லாமே விசா ரணைக்குரியது.

சாத்தான்குளம் வியாபாரி களான தந்தை-மகன் படுகொலையைப் போல, நெய்வேலி போலீசாரும் செல்வமுருகனை லாட்ஜிலும், ஸ்டேசனிலும் அடைத்து வைத்து சித்ரவதைசெய்து படுகொலை செய்திருக்கிறார்கள். காவல்துறையின் இந்த ஆணவப் படுகொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உட்பட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்வதோடு, மக்கள் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரேமாவுக்கு அரசு வேலையும், 1 கோடி ரூபாய் இழப்பீடும் தரவேண்டும்.

இந்த படுகொலையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் துவங்கி வைகோ, திருமா, ஜவாஹிருல்லா, தமிமுன்அன்சாரி, தெகலான் பாகவி என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்திருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடியும் பா.ம.க. ராமதாசும் மட்டும் வாய் திறக்கவில்லை. சாத்தான்குளம் படு கொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வரை சென்ற எடப்பாடி, இந்த சம்பவத்தில் கள்ள மௌனம் சாதிக்கிறார். ஸ்டேசனில் நடந்த சித்ரவதைக்கு சி.சி.டி.வி. புட்டேஜ் அங்கு இருக்கு. இதுவரை அதனை ஆய்வு செய்யவே இல்லை. அதனை அழிக்கும் முயற்சி நடக்கிறது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார் வேல்முருகன்.

இதற்கிடையே, பிரேமா மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டியின் அறிக்கையையும், நீதிமன்ற விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

-இரா.இளையசெல்வன்