சட்ட ஒழுங்கை நிலை நாட்டி, குற்றங் களைத் தடுத்து, மக்களைப் பாது காப்பதுதானே காவல்துறையின் கடமை? அருப்புக் கோட்டையிலோ, இதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறார்கள் காவல்துறை அதிகாரிகள். அதனால், தொடர் கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், சாலை மறியல் பதற்றங்களால், அருப்புக்கோட்டை அல்லோகல்லோலப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி, ஓய்வுபெற்ற ஆசிரியர்களான சங்கரபாண்டியன் - ஜோதிமணி தம்பதியர் அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டதால், மொத்த ஊரும் பதை பதைத்தது. இரண்டு மாதங்கள் கடந்தும், காவல்துறை கொலையாளிகளைக் கண்டுபிடிக்காத நிலையில், இரட்டைக் கொலை நடந்த அதே எம்.டி.ஆர். நகரில், கடந்த 13-ஆம் தேதி இன் னொரு ‘சம்பவம்’ நடந்து, நெசவுத் தொழிலாளி யான தங்கப்பாண்டியன் கொலை செய்யப்பட்ட தாக, ஊரே பரபரத்துக் கிடக்கிறது. நடந்தது லாக்கப் மரணம் என்றும், இதற்குக் காரணம் அருப்புக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சுந்தர லட்சுமியின் கணவரும், கவுன்சிலருமான சிவப்பிரகாசம் எனவும், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டன. மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, இறந்து 9 நாட்களான நிலையில், தங்கப்பாண்டியன் உடலைப் பெற்று உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
காவல் மரணமா? என்ன நடந்தது?
எம்.டி.ஆர். நகரில் வசிக்கும் சவுந்திரபாண்டியன் என்பவர் அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் ‘"இதற்குமுன் யாரென்றே தெரியாத தங்கப்பாண்டி யன், செப்டம்பர் 13-ஆம் தேதி காலை 6-15 மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவரை எதிர் வீட்டில் குடியிருக்கும் ரமேஷ் தடுத்து நிறுத்தினார். ஏற்கனவே, என் வீட்டுக்குப் பக்கத்தில் இரட்டைக் கொலை நடந்துள்ள தால், பயத்தில் சத்தம் போட் டேன். அதனால் அக்கம்பக்கத் தில் உள்ளவர்கள் கூடிவிட்டனர். அப்போது தங்கப்பாண்டியன் என்னைப் பார்த்து, உங்கள் வீட்டை உடைத்து திருடத்தான் வந்தேன் என்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'’ எனப் புகாரளித்தார்.
மேற்கண்ட புகாரை, 13-ஆம் தேதி இரவு 9 மணிக்கு அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம் பதிவு செய்தது.
எந்த வழக்கானாலும் எப்.ஐ.ஆர். போடுவதில்லை என்பதில் அழுத்தமாக உள்ள அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம், இந்த வழக்கை ஏன் பதிவு செய்தது?
திருடன் எனச் சந்தேகப் பட்டதால், எம்.டி.ஆர். நகர் பகுதியில் தங்கப்பாண்டியனைக் கட்டிவைத்து ஆளாளுக்கு அடித்துள்ளனர். அதன்பிறகே, அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்தனர். தங்கப்பாண்டியன் உளறியதைக் கேட்டு, மனநலம் பாதிக்கப்பட்டவ னாக இருப்பானோ எனச் சந்தேகித்த போலீசார், வழக்கம்போல வழக்கு பதிவு செய்யாமல், மாலை 6 மணியளவில் கோபாலபுரம் அருகிலுள்ள அன்னை இல்லம் என்ற மனநலக் காப்பகத்தில் கொண்டுபோய் விட்டனர்.
‘திருடனைப் பிடித்துக்கொடுத்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையே..’ என்று ஆத்திரமான எம்.டி.ஆர். நகர் ஏரியாவாசிகள், கவுன்சிலர் ஒருவரை அழைத்துக்கொண்டு, அருப்புக்கோட்டை சேர்மன் சுந்தரலட்சுமியின் வீட்டுக்குப் போனார்கள். அங்கிருந்த சேர்மனின் கணவர் சிவப்பிரகாசத்திடம் அவர்கள் முறையிட, அவர் அருப்புக்கோட்டை காவல் நிலை யத்தைத் தொடர்புகொண்டு, ‘"முறைப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?'’என அழுத்தம் தந்திருக்கிறார். அதன்பிறகே, தங்கப்பாண்டியன் மீது வழக்கு பதிவாகி, அந்த மனநலக் காப்பகத்தில் இருந்து அவரை டவுண் காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
14-ஆம் தேதி காலை 6 மணியளவில் தங்கப்பாண்டியனின் மனைவி கோகிலா தேவியைத் தொடர்புகொண்ட போலீசார், "உடல் நலம் பாதித்ததால் தங்கப்பாண்டியனை அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள் ளோம், உடனே வரவும்'’எனத் தெரிவித்துள்ளனர். அலறியடித்துக்கொண்டு கோகிலாதேவியும் உறவினர்களும் போய்ப் பார்த்தபோது, உயிர் பிரிந்து சடலமாகக் கிடந்திருக்கிறார் தங்கப்பாண்டியன்.
தங்கப்பாண்டியனின் உறவினர்கள் தரப்பில் கிடைத்த வேலையைப் பார்த்துவந்த தங்கப் பாண்டியனுக்கு மனநல பாதிப்பு எதுவும் இல்லை. 13-ஆம் தேதி போதை தெளியாத நிலையில், எம்.டி.ஆர். நகர் ஏரியாவில் வசிக்கும் சித்தி பொன்னம்மாள் வீட்டுக்குப் போனார். அப்போது நடக்கமுடியாத தள்ளாட்டத்தில் சவுந்திர பாண்டியன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறார். அங்கே ஆளாளுக்கு கேள்வி கேட்க, உளறியிருக்கிறார். அதைவைத்து திருடன் என்ற முடிவுக்கு வந்து அடித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் சேர்மனின் கணவர் சிவப்பிரகாசம் தலையிட்டதும், காவல் நிலையத்திலும் விசா ரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியிருக் கிறார்கள்''’என்றனர்.
தங்கப்பாண்டியனின் மனைவி கோகிலாதேவி "மொதல்ல.. கேஸ் போடாம போலீஸ்காரங்க விட்டுட்டாங்க. ஏரியாக்காரங்க, அதெப்படி விடலாம்னு பிரச்சனை பண்ணுனாங்க. அப்புறம் தான் ஹோம்ல போய் விட்டாங்க. ஹோம்ல விடறப்ப என்கிட்ட நல்லாத்தான் பேசினாரு. ஹோம்ல சேர்றதுக்கு அவரேதான் பாரத்தை நிரப்பிக் கொடுத்தாரு. ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன்னு சொல்லி, நல்லபடியா எங்கள அனுப்பி வச்சாரு. அப்புறம் எப்படி உசிரு போச்சு? எங்க ளுக்கு போலீஸ் மேலதான் சந்தேகம். நான் போலீஸ்கிட்ட, நீங்கதான் மனநிலை சரியில் லைன்னு ஹோம்ல சேர்த்தீங்க. அப்புறம் எப்படி அங்கயிருந்து இங்க வந்தாருன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, விசாரணைக்கு கூட்டிட்டு வந்தோம்னாங்க. இத எங்ககிட்ட அப்பவே சொல்லிருக்கணும்ல. போலீஸ்காரங்க, யார் பேச்சயோ கேட்டு, என்னமோ பண்ணி சாகடிச்சிட்டாங்க'' ’என்று அழுகிறார். இதுகுறித்து விளக்கம்பெற அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகனைத் தொடர்புகொண்டபோது, அவர் நம்மை முற்றிலும் தவிர்த்த நிலையில், அருப்புக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் சிவப்பிரகாசத்திடம் பேசினோம்.
"எனக்கும் தங்கப்பாண்டியன் இறந்ததுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. காம்பவுன்ட் சுவர ஏறிக் குதிச்சு திருட வந்தவன பிடிச்சுக் கொடுத்தும் போலீஸ் விட்ருச்சுன்னு என்கிட்ட சொன்னாங்க. நான் போலீஸ்கிட்ட கேட்டேன். அப்படியெல்லாம் விடல. ஹோம்ல சேர்த்திருக்கோம்னு சொன்னாங்க. உடனே நான், எதுன்னாலும் முறையா பண்ணுங்கன்னு சொன்னேன். மத்தபடி, அந்த தங்கப்பாண்டியன் யாரு, எந்த ஊருன்னுகூட தெரியாது. கவுன்சிலர் ஒருத்தர் பப்ளிக்க கூட்டிட்டு வந்து முறையிட்டாரு. என்ன விவரம்னு நான் போலீஸ்கிட்ட கேட்டேன். இத என்பக்கம் திரிச்சு விட்டுட்டாங்க''’என்றார் கவலையுடன்.
தங்கப்பாண்டியனின் மரணத்துக்கான காரணத்தையும், உண்மைக் குற்றவாளிகளையும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அம்பலப்படுத்துமா?
___________
பிணத்தை வைத்து அரசியல்!
சாலை மறியல் போராட்டங்களின் பின்னணியில் அரசியல்’ இருக்கிறது. இதற்குமுன், தங்கள் சாதியினரை இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி, விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்துத் துன்புறுத்திய கோபம் இருக்கிறது. அதனால், சாதி ரீதியாகவும் தங்கப்பாண்டியனின் உறவினர்கள் தூண்டிவிடப்பட்டனர். ஆளும்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவரைக் குறிவைத்தே, போராட்டங்கள் நீர்த்துப்போகாமல் இருப்பதற்கான எல்லா வேலைகளும் நடந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சமும் அரசு உதவிபெறும் பள்ளியில் வேலையும் தரவேண்டும் எனப் பேரம் நடந்தது. அதனால்தான், தங்கப்பாண்டியனின் உடலை வாங்கமாட்டோம் என்பதில் உறவினர்கள் உறுதியாக இருந்தனர். ‘வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டும் உடலை வாங்க மறுப்பதா? 2 நாட்களுக்குள் உறவினர்கள் உடலைப் பெறத் தவறும் பட்சத்தில், காவல்துறையினரே உடலை அடக்கம் செய்யும் நடவடிக்கையை எடுக்கலாம்’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்ட பிறகுதான், நிலைமை சீரானது’ என்கிறார், ஊர் நிலவரத்தை நன்கறிந்த பிரமுகர் ஒருவர்.