"காவல்துறையில் ஒரே சீட்டை ஆண்டுக்கணக்கில் தேய்த்துக்கொண்டு இருப்பவர்களால்தான் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை'” என்ற குரல், காவல்துறையிலேயே கேட்கத் தொடங்கியிருக்கிறது.
காவல்துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் தனிப்படை ஒன்று இயங்கி வருகிறது. அனைத்து காவல் நிலையத்திற்கும் இந்த தனிப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர் நியமிக்கப்படுவார்.
இப்படி நியமிக்கப்படுகிறவர்கள் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் குறித்து, காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டு செல்வார்கள். இவர்களுடைய அதிகபட்ச பணிக்காலம் 5 ஆண்டுகள் வரைதான் இருக்கும். அதன்பிறகு வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டுவிடுவார்கள். இதுதான் விதி. ஆனால் சில காவலர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, திருச்சி மண்டலத்தில் இதை அதிகம் பார்க்கமுடியும். இப்படி நீடிக்கும் நபர்களில் சிலர், குற்றங்களுக்கும் துணைபோகின்றனர்.
மத்திய மண்டலப் பகுதியான திருச்சி மாநகரைப் பொறுத்தவரை, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் எதிர்பார்த்த அளவிற்கு ரிசல்ட் இல்லை. இதைக் கவனித்த மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் தனிப்பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்து, அவர்களுக்குப் பதில் இளம் காவலர்களை நியமிக்க உத்தரவிட்டார்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 37 தனிப்பிரிவு காவலர்களை, திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் ப.மூர்த்தி மாற்றுப் பணிகளுக்கு நியமித்து, அவர்களுக்கு பதிலாக 37 இளம் காவலர்களைத் தனிப்பிரிவுக்கு நியமித்தார்.
மாவட்ட அளவில் நடை பெற்ற இந்த பணியிட மாறுதல் தற்போது நல்ல பலனை தந் துள்ளதாகவும், குற்றங்களைத் தடுக்க ஒத்துழைப்பு கிடைப்ப தாகவும் கூறுகின்றனர் காவல் அதிகாரிகள்.
இதேபோல் திருச்சி மாநகர பகுதியில் பணியாற்றிவரும் நுண்ணறிவுப் பிரிவு காவலர்களையும் பணியிடமாற்றம் செய்து புதியவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திருச்சி மாநகர காவல்துறை ஆணை யரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுப் பிரிவு, தகவல்களை சரியாகக் கொடுத்து... குற்ற நட வடிக்கைகளைக் கண்காணித்தாலும், பெரும்பாலும் அவற்றை முழுமையாகத் தடுக்க முடியாத நிலை இருந்தது. இன்னும் ஒருசில காவலர்கள், "முன்னதாகவே குற்றம் குறித்த தகவல் தெரிந்தும், அதை மேலதிகாரிகளுக்கு சொல்வதில்லை' என்ற குற்றச்சாட்டும் அங்கே நிலவுகிறது.
திருச்சி மாநகரில் உள்ள 15 காவல் நிலை யங்களில் ஐ.எஸ். காவலர்கள் அனைவரும் சுமார் 10 ஆண்டு காலத்திற்கு மேலாகப் பணியாற்றுபவர் கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கோட்டை -சந்துரு, ஜி.எச்.ஸ்டேஷன் -பொன்னு சாமி, பொன்மலை -கணேசன், அரியமங்கலம் -மூர்த்தி, பாலக்கரை -ஜெகதீசன், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவிலுக்கு என நியமிக்கப்பட்ட ரமேஷ், ஏர்போர்ட் -ஜெயக்குமார், காந்தி மார்க்கெட் -கணேசன், கண்டோன்மெண்ட் -நாகேந்திரன் எல்லாரும் சுமார் 15 வருடகாலமாக ஐ.எஸ்.சில் இருப்பவர்கள்.
15 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் பணியாற்றுவதால் திருச்சி மாநகரின் ஒட்டுமொத்த தகவலும் இவர்களுக்கு அத்துப்படி. எனினும் இவர்கள் பெரும்பாலும் அட்ஜெஸ்ட்மெண்டில் தான் பணியாற்றுகிறார்கள். "ரவுடித்தனம் தொடங்கி, கஞ்சா விவகாரம் வரை அனைத்தும் அவர்களுக்கு அத்துப்படி... ஆனாலும் நடவடிக்கை பெரிய அளவில் இல்லை' என்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதிகளில் சில தகவல்களை கண்டும் காணா மலும், சில தகவல்களை மேலிடங்களுக்கு சொல்லாமலும் இருக்க வேண்டிய நிலையில் இருக் கின்றனர். அதற்கு காரணம் அந்தந்த காவல் நிலை யங்களில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். கடந்த முறை, திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருந்த அருண், தனிப்படை டீமை பிரித்து பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்தார். ஆனால் அவர்கள் அந்த இடங்களுக்கு செல்லாமல் மீண்டும் திருச்சி மாநகரக் காவல்நிலையங்களில் பணியில் அமர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே தொடர்ந்து பல ஆண்டுகளாக மாநகர பகுதிக்குள் ஒரே இடத்தில் பணியாற்றும் நுண்ணறிவு பிரிவு, தனிப்படை புலனாய்வு பிரிவு காவலர்களை இடமாற்றம் செய்து புதியவர்களை நியமித்தால் குற்றங்களை தடுக்க முடியும் என்றும், காவல்நிலையங்களில் நடக்கும் குற்றங்களையும் தடுக்க ஏதுவாக இருக்கும் என்றும், நேர்மையாக காவல்துறை அதிகாரிகளே சொல்கின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது.. ”"தற்போது காவலர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக பணியிட மாற்றம் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அனைத்து நுண்ணறிவுப் பிரிவு, புலனாய்வு தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்''’என்று கூறினார்.
காவல்துறையில் நிகழவேண்டிய அதிரடி மாற்றங்கள்தான், க்ரைம் ரேட்டைக் குறைக்கும். காவல்துறை அதிரடி ஆக்ஷனில் இறங்குமா?