ழுத்தாளர் ஜெயகாந்தன் இப்போது இருந்திருந்தால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்று அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறார் வைரமுத்து.

jayakanthan

தமிழ் வளர்த்த சான்றோர்களைப்பற்றி, அறிமுக நோக்கில் கட்டுரைகளை அரங்கேற்றிவரும் கவிஞர் வைரமுத்து, இதுவரை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், தொடங்கி, மறைமலையடிகள், பாரதிதாசன், கலைஞர், கண்ணதாசன் என 16 தமிழ்ச் சான்றோர்களைப் பற்றிக் கட்டுரை ஆற்றியிருக்கிறார். இதற்கிடையே ஆண்டாளைப் பற்றி இவர் வாசித்த கட்டுரைக்காக, இந்துத்வா கும்பல் வைரமுத்துவைக் கடுமையாக விமர்சித்தது. வைரமுத்துவுக்காக தமிழ் உணர்வாளர்கள் வரிந்துகட்டி, அவர்களின் எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றியது குறிப்பிடத்தக்கது..

Advertisment

இந்த நிலையில் வைரமுத்துவின் 17ஆவது தமிழாற்றுப்படை படைப்பாக ’கலகக் கலைஞன் ஜெயகாந்தன்’ என்னும் கட்டுரை 13-ந் தேதி அரங்கேற்றம் செய்யப்பட்டது. தமிழ் வாழ்த்துப் பாடலோடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், முன்னதாக முக்கிய ஆளுமைகள் பலரும் ஜெயகாந்தனின் திருவுருவிற்கு மலர் அஞ்சலி செய்தனர்.

வாழ்த்துரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்த இருவரில் கவிஞர் கனிமொழி எம்.பி., வரவில்லை. காய்ச்சலுக்கு நடுவிலும் கவிஞரை வாழ்த்திப் பேச வந்த எழுத்தாளர் சிவசங்கரி... இடையூறு செய்த இருமலுக்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டு...

""ஜெயகாந்தனையும் வைரமுத்துவையும் வாழ்த்துகிற வாய்ப்பு என்பது, எனக்கு இரட்டை மகுடத்தைச் சூட்டியது போன்ற வாய்ப்பாகும். இங்கே ஒரு ஜாம்பவானைப்பற்றி இன்னொரு ஜாம்பவான் பேச இருக்கிறார். வைரமுத்துவின் பேச்சு நம்மை மயங்கவைக்கும். ஜெயகாந்தனும் வைரமுத்துவும் எந்த மேடைக்குப் போனாலும், அவர்களே சபை முழுக்க நிறைந்துவிடுவார்கள். வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட வேண்டும்'' என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். தனது கட்டுரையை வாசிக்கும் முன், உரை நிகழ்த்திய வைரமுத்து...

Advertisment

jayakanthan

""மத்திய வர்க்கத்தின் மொழி அலங்காரமாய் இருந்த சிறுகதையை, அடித்தட்டு மக்களின் வேர்வை, ரத்தம், கண்ணீர் என்ற பிசு பிசுப்போடு சிறுகதை செய்தவர் ஜெயகாந்தன். ஓர் எழுத்தாளனுக்குரிய கட்டற்ற சுதந்திரத்தை அவர் பெற்றிருந்தார். அவர் வாழ்ந்த சமூகம், அவர் எழுத்தையும் சுகித்துக்கொண்டது. அவரையும் சகித்துக்கொண்டது'' என அவையை கலகலப்பாக்கிவிட்டு,

""உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் தர்மங்களையும் உடைத்தெறிவதற்கான உக்கிரத்தை ஜெயகாந்தனின் எழுத்து கொண்டிருந்தது. அந்த கருத்து வெளிப்பாட்டுக்கான உரிமைகளை காலம் அவருக்குத் தந்திருந்தது. இன்று இந்திய சமூகத்தில் அந்த சுதந்திரம் இருக்கிறதா? கருத்துரிமைப் போராளிகள் கொல்லப்படுவதும் ஒடுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. இன்று சகிப்புத்தன்மை குறைந்திருப்பதை நினைத்தால் நெஞ்சில் ரத்தம் கட்டுகிறது. பெரியார் இன்று இருந்திருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார். ராஜாராம் மோகன்ராய் இன்று இருந்திருந்தால் அவர் கழுத்தைத் தூக்குக் கயிறு எத்தனை முறை நெரித்திருக்கும்? ராமானுஜர் இன்று இருந்திருந்தால் அவரை எத்தனை அமைப்புகள் ஏற்றுக்கொண்டிருக்கும்? ஜெயகாந்தன் இன்று இருந்திருந்தால் குண்டர் சட்டத்தில் அவர் எத்தனைமுறை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்?'' என்று அவர் கேள்விகளை அடுக்கியபோது கைத்தட்டல்களால் அரங்கம் அதிர்ந்தன.

vairamuthu""அன்றைய "மணிக்கொடி' எழுத்தாளர்கள் திராவிட இயக்கப் படைப்பாளிகளைப் பொருட்படுத்தவில்லை என்பதும், அண்ணா, கலைஞர், டி.கே.சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு போன்ற திராவிட இயக்கப் படைப்பாளிகள் மணிக்கொடி எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதும் இலக்கியத்துக்கு நேர்ந்த இறந்தகால இழப்பாகும். ஆனால் ஜெயகாந்தனுக்கு அந்த துர்ப்பேறு நேரவில்லை. தன் இறுதிக் காலத்தில் எல்லோராலும் கொண்டாடப்பட்ட படைப்பாளி ஆனார். அவர் கம்யூனிஸத்தை நேசித்தவர். கம்யூனிஸ்ட்டுகளை நேசிக்கவில்லை. காமராசரை நேசித்தார், காங்கிரஸை நேசிக்கவில்லை. ஜெயகாந்தன் மிகப்பெரிய சிந்தனையாளர். அவரை எல்லோரும் வாசிக்கவேண்டும்'' என்ற வைரமுத்து, ஜெயகாந்தன் எழுதிய திரைப்படப் பாடலான ‘நல்லதைச் சொல்லுகிறேன். இங்கு "நடந்ததைச் சொல்லுகிறேன்' என்ற பாடலின் இரண்டொரு வரிகளைப் பாடி தன் உரையை நிறைவுசெய்தார்.

கதை மரபு தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது. கதையின் அடிப்படையிலேயே நாடகம் திகழ்ந்தது என்று அறிஞர் பெருமக்கள் பலரும் சொல்லிவரும் நிலையில், வைரமுத்து, ""இதிகாசம்-புராணம்-இலக்கியம்-வேதம்- உபநிடதம் என்கிற வழக்கின் ஊடாக, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, இந்தியக் கதைசொல்லிகள் கதையாடலை வளர்த்தெடுத்து வந்திருக்கிறார்கள்''’என்றவர், நாரத கான சபையின், சத்குரு ஞானானந்தா ஹாலில், வைக்கப்பட்டிருக்கும் சங்கராச்சாரியார் கட் அவுட்டைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தன்னை தமிழ்க்கவிஞர் என்கிற நிலையில் இருந்து இந்தியக் கவிஞராக நகர்த்திக்கொண்டு, வைரமுத்து கட்டுரை ஆற்றியிருக்கிறார். அவரது தகுதிக்கு, இது ஞானபீடத்தை நோக்கிய நகர்வு என்கிறார்கள் தமிழார்வலர்கள்.

-சூர்யா

படங்கள் : சுந்தர்