தென்மாவட்டங்களுக்கு வருடம்முழுக்க வற்றாமல் தாகம்தீர்க்கிற அட்சயபாத்திரமாய் கிடைத்திருப்பது தாமிரபரணி. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங் களின் லட்சக்கணக்கான குடும்பங்களின் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மாவட்டங்களிலிருக்கும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங் களையும் விளைய வைத்து வேளாண் மக்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் குன்றாமல் வைத்திருக்கிறது.

tt

தாமிரபரணியில், நெல்லை பகுதியில் போகிற போக்கில் வெளியேற்றப்படுகிற சாக்கடை கழிவு நீர் மெல்ல மெல்லக் கலந்து வந்திருக்கிறது. நெல்லை நகரம் மாநகரமாகத் தரம் உயர்த்தப்பட்டபோது மாநகராட்சி, நகருக்கான கழிவுநீரை ஒருங் கிணைத்து வெளியேற்றுகிற வகையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அறிவித்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், நகரின் சாக்கடைக் கழிவுகளும், தொழில் நிறுவனங்களின் கழிவுநீரும் வெளிப்படையாகவே கலக்க ஆரம்பித்ததால் தாமிரபரணி நிறம்மாறி, குடிப்பதற்கும், பிற பயன்பாட்டுக்கும் தகாததாக மெல்ல மாற ஆரம்பித்துள்ளது.

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதிகள் மிகவும் சீர்கெட்டுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி, ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தடுப்பதற்கு வழிபாருங்கள் என்ற மக்களின் குரல்களுக்கு மாநகர நிர்வாகம், கழிவுப்பகுதிகளில் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுமையாக நிறைவேறும்போது கழிவுநீர் கலப்பது முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்று தெரிவித்தது.

Advertisment

விடுபட்ட பகுதிகளுக்கும் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு மாமன்ற தீர்மானம் எண் 574, 24.12.2009-ல் அனுமதித்துள்ளது. மேலும் அதற்கான ஒப்பந்தப் புள்ளி பெங்களூருவின் என் கன்சல்டிங் பிரைவேட் லிமிடட் கம்பெனியிடம் வழங்கப்பட் டுள்ளது. அதற்கன நிதி ஆதாரங்களும் மேற்கொள் ளப்பட்டன. ஆனாலும் 9 வருடமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டு தாமிரபரணி மாசுபட்டு சீர்கெட்டு வந்ததைச் சுட்டிக்காட்டி அதனைச் சீரமைக்கக்கேட்டு சமூக ஆர்வலர்கள் 2018-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதையடுத்து மதுரை ஐகோர்ட் கிளை கடந்த மார்ச் மாதம், சாக்கடையை நதியில் கலப் பதைக் கட்டுப்படுத்தவேண்டும். படித்துறை மற்றும் மண்டபங்களைச் சீரமைக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால் கடந்த 8 மாதங்களாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர்களான, சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் உள் ளாட்சி அமைப்புகள், மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த உத்தரவின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பினர். மட்டுமல்லா மல் தாமிரபரணி நதியில் கலக்கும் சாக்கடைகள் குறித்து ஆய்வு செய்யப் போவதாகவும் அறிவித்தனர். இதனால் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளுக்குள் பதற்றம் ஏற்பட்டது. ஐகோர்ட் நீதியரசர்கள் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் தாமிரபரணியின் நெல்லைப் பகுதி ஆற்றில் கழிவுநீர் கலக்கும், ஆறு மாசுபடும் இடங்கள் குறித்து ஏற்கெனவே தகவல்களை சேகரித்துத் தெரிந்துகொண்டனர். அறிவிப்பின்படி நவ-10 அன்று ஆய்வுக்கு வந்தனர் நீதியரசர்கள்.

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் தியேட்டர் ஏரியா, ராமையன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைப் பார்வை யிட்டனர். மாநராட்சி கமிஷனர், மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் தொடர்புடைய அதிகாரி கள் அனைவரும் அங்கு ஆஜராகினர். மீனாட்சி புரம் தியேட்டர் இறக்கத்தில் ஆற்றில் சாக்கடை கலக்கும் இடத்தைப் பார்வையிட்டனர். அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வுசெய்தனர்.

Advertisment

tt

ராமையன்பட்டியிலிருக்கும் பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்களை நீதியரசர்கள் ஆய்வு செய்தபோது அவை சரியா செயல்பட வில்லை, அதில் வெளியேறும் நீரில் மூன்று மடங்கு அசுத்தம் இருப்பதாகத் தெரிவித்தனர் பொதுமக் கள். அங்குள்ள விவசாயிகளோ, இங்குள்ள 60 மாடுகள் இந்தத் தண்ணீரைத்தான் குடிப்பதாகத் தெரிவிக்க, அங்கிருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை நீதியரசர்கள் கடிந்துகொண்டனர்.

குறுக்குத்துறை பகுதி அசோக் என்பவரிடம் பேசினோம். "நாப்பது வருடமா இந்தப் பகுதியில குடியிருக்கேன். சாக்கடை நீர் கலந்து தண்ணி யோட நிறமே மாறிருச்சி. இதைத் தான் நாங்க குடிக்க, குளிக்க வேண்டியிருக்கு. இதையெல்லாம் விரிவா நீதிபதி அய்யாட்ட சொல்லணும்னு நாங்க போனப்ப அதிகாரிக அவுககிட்ட பேச அனுமதிக்கலை'' என்றார் ஆதங்கமாய்.

தாமிரபரணியாறு மாசுபடுவது பற்றிய புகாருடன் உயர்நீதிமன்றம் சென்றவர்களில் மீனாட்சிபுரம் பகுதியின் கணேசனும் ஒருவர். அவர் நம்மிடம், "இந்தத் தண்ணீரை கேரளா வரை கடத்திப்போய் 13 ரூபாய்க்கு பாட்டல்னு விக்கிறாக. அதே பாட்டில் தண்ணிய இங்க கொண்டாந்து 22 ரூபாய்க்கு விக்கிறாங்க. தாமிரபரணி மாசுபட்டுப் போச்சுன்னு நானும் பல வருஷமா போராடிட்டி ருக்கேன். இப்ப மதுரை உயர்நீதிக் கிளை நீதியரசர்கள் உத்தரவு போட்டிருக்காங்க'' என்றார் வேதனையுடன்.

நீதியரசர்களின் ஆய்வுக்குப் பின்பாவது அதிகாரிகள் வேகம்காட்டுகிறார்களா பார்ப்போம்!

-ப.இராம்குமார்