கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்டு பழைய வேட்டியால் மூட்டையாக கட்டிய நிலையில் கழிவுநீர் சாக்கடையில் கொலையுண்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளார் சிறுமி ஆர்த்தி. போதையின் உச்சத்தில் பாலியல் வல்லுறவால் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளாள் சிறுமி என்பது தெரியவர, அரசிற்கு எதிராக புதுச்சேரி மட்டுமல்லாது இந்தியாவே கொதிநிலையில் உள்ளது.

pondy

"பக்கத்தில்தான் எங்கேயாவது விளையாடப் போயிருப்பாள், இப்ப வந்துவிடுவாள்' என்கின்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளனர் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சோலைநகர் நாராயணன்-மைதிலி தம்பதியினர். கடந்த 2ம் தேதி மதியம் 2 மணிக்கு வீட்டைவிட்டு வெளியில் சென்ற 9 வயது ஆர்த்தி, அன்றைய தினம் முழுவதும் வராமல் போகவே, வேறு வழியின்றி முத்தியால்பேட்டை காவல்நிலையத்தை நாடியிருக்கின்றனர் ஆர்த்தியின் பெற்றோர். முதலில் சாதாரணமாக நினைத்துக் கொண்டு கொலையுண்ட ஆர்த்தி விஷயத்தைக் கண்டும்காணாமல் விட்டது சம்பந்தப்பட்ட காவல்நிலையம். தொடர்ந்து பெற்றோர் தரப்பில் அழுத்தம் கூடியும் ஏனோ தொடர் விசாரணையில் ஈடுபடவில்லை போலீஸார். இறுதியில் 3 நாட்கள் ஆகியும் ஆர்த்தி கண்டுபிடிக்கப்படாமல் போகவே, ஆர்த்தியை விரைந்து மீட்கக் கோரி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால் பேட்டை மணிக்கூண்டு அருகே கடந்த 4 ஆம் தேதியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். விவகாரம் பெரிதாவதைக் கண்ட பின்னரே போலீஸார் தனிப்படை அமைத்தது தனிக்கதை.

pondy

Advertisment

s முத்தியால்பேட்டை போலீஸாரோ, "2 எஸ்.பி.க்கள் தலைமையில் 40 போலீஸார் உள்ளிட்ட ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்தோம். சிறுமி ஆர்த்தியை யாராவது கடத்தியிருப்பார்களா? அல்லது முன்விரோதம் ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தேடிப் பார்த்தோம். ஆர்த்தி வீட்டைவிட்டு வெளியேறியது தெருவிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம் உறுதியானது. அதனால் அவர் சோலை நகர் பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் வீதி மற்றும் கண்ணதாசன் வீதியைத் தாண்டி செல்லவில்லை என்பது எங்களது விசாரணையில் புலனானது. இருப்பினும் அவர் அம்பேத்கர் நகர் பகுதி கழிவுநீர் சாக்கடையில் பிணமாக மீட்கப் பட்டது வேதனையே'' என்றனர் அசட்டையாக.

கழிவுநீர் சாக்கடையில் பிணமாக மிதப்பது தனது மகள்தான் என்பதை தந்தை நாராயணன் உறுதி செய்ய, ஆர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் உடனடியாக பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வல்லுறவால் ஆர்த்தி சிதைக்கப்பட்டிருப்பதும், கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவர, புதுச்சேரியில் ஆர்த்திக்கு நீதிவேண்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில், இந்த சம்பவத்தை கண்டிக்கும்விதமாக விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் பட்டானூரில் இருந்து பேரணியாக வந்து தமிழக -புதுச்சேரி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தியும், மெத்தனமாக செயல்பட்ட போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதே வேளையில், சிறுமி ஆர்த்தியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் கடற்கரை சாலை வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்ட போலீஸார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி நாலாபுறமும் தெறித்து ஓடவிட்டனர். இதில் சில பேரை போலீசார் தரதரவென்று இழுத்து வலுக்கட்டாயமாகக் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

ff

இது இப்படியிருக்க, காவல்துறையும் தொடர் விசாரணையின் முடிவில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 19 வயதேயான காக்கா என்கின்ற கருணாஸையும், விவேகானந்தன் என்கின்ற 59 வயது நபரையும் கைது செய்தது. இதே வேளையில், ஆர்த்தி கொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச் சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப் பின் சார்பில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இ.சி.ஆர். சிவாஜி சிலை அருகே ஒன்றுகூடி அங்கிருந்து ஊர்வலமாக வந்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், புதுச்சேரியில் தலைவிரித்தாடும் கஞ்சாவும், போதை ஸ்டாம்ப் மற்றும் மது வகைகளால் உள்ளூர் மக்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள். சிறுமியின் மரணத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியான தி.மு.க.வின் சிவா வலியுறுத்திய நிலையில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசை கண்டித்து புதுச்சேரி -காரைக்காலில் 8-ம் தேதி பந்த் நடத்துவதாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

Advertisment

ff

விவகாரம் வீரியமாக மாநிலம் முழுக்க பரவிய நிலையில்... பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொலையுண்ட சிறுமி ஆர்த்தியின் தந்தை நாராயணனை சந்தித்து, உடலை வாங்கிக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினார் முதலமைச்சர் ரங்கசாமி. கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்வரை சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரி விக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத் துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்பின்னர், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, சிறுமியின் உடலை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்வதை விரும்பாத சிறுமியின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய வலியுறுத்தியதையடுத்து, சிறுமியின் உடலுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

"சிறுமி ஆர்த்தி கொலை வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா?'' என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக எஸ்.பி. கலைவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளும் அடையாளம் கண்டு கைது செய்யப்படுவார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன் போலீசாருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், பந்த், போராட்டம் நடத்தி சிறுமியின் கொலை வழக்கை அரசியலாக்க வேண்டாம்'' என்றார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். இதே வேளையில், கொலையாளிகள் மீது, கொலை செய்தல், கடத்தல், அடைத்து வைத்தல், குற்றத்தை மறைத்தல், போக்சோ, வன்கொடுமை தடுப்பு என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறை, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப் படத்தை பிரசுரிக்கக் கூடாது என அறிவுறுத்தியது.

pp

சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசையோ ஆர்த்தியின் தாய் மைதிலியைக் கட்டி அணைத்தபடி, "சிறுமி கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்டதில் இருந்து நிலைகுலைந்து போயிருக்கிறேன். இங்கி ருக்கும் பெண்களின் மனநிலைதான் ஒரு தாயாக எனக்கும் இருக்கிறது. அதனால்தான் சில காவல் பாதுகாப்பு சிக்கல்கள் இருந்தாலும் அவர்களுடன் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே எனது எண்ணம். விரைவு சிறப்பு நீதிமன்றம் உடனடியாக அமைத்து, ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் உடன்படுகிறேன். சில நேரங்களில் சட்டங்களை நாம் கையில் எடுக்க முடியாவிட்டாலும் உணர்வுரீதியாக அவர்கள் பக்கம் நான் இருக்கிறேன்'' என்றார். அவர்.

dd

பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்தி குறித்து பேசிய தனிப் படை அதிகாரிகளோ, "சம்ப வத்தன்று ஆர்த்தி வீட்டை விட்டு வெளியே வந்தபொழுது நைசாக பேசி விவேகானந்தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றி ருக்கின்றான் கருணாஸ். அறிமுகமானவன், தெரிந்த வன் என்பதால் எவ்வித முரண்பாடும் இல்லாமல் ஆர்த்தி சென்றிருக்கலாம். குற்றவாளிகளான கருணாஸும், விவேகானந்தனும் உறவினர்கள். அதுபோக கஞ்சா உள்ளிட்ட மது போதையை அனுபவிப்பவர்கள். "அண்ணே.... தாத்தா விட்டு டுங்க...' என கெஞ்சிய நிலையிலேயே ஆர்த்தியிடம் அத்துமீறி இச்சையைத் தணித்த பின் இருவருமாக சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்க லாம். ஆர்த்தியை கொலை செய்து தங்களது வீட்டி லேயே வைத்தவர்கள், ஆர்த்தியின் பெற்றோருடன் சேர்ந்து ஆர்த்தியை தேடுவதுபோல் நடித்திருக் கின்றார்கள். ஒருகட்டத்தில் பிரச்சினை விபரீத மாவதைக் கண்டவர்கள், மூன்றாவது நாளில் கை, காலை கட்டி விவேகானந்தனின் வேட்டியில் சுற்றி சாக்கடையில் வீசியிருக்கின்றார்கள். அதாவது, 2ஆம் தேதி ஆர்த்தியை கைப்பற்றியவர்கள் 5ஆம் தேதியன்றே சாக்கடையில் வீசியிருக்கின்றனர். இன்னொன்று, சிறுமியின் வாயில் திணிக்கப்பட்ட துணி அருகிலுள்ள மூடிக்கிடக்கும் அரசு கிட்னி சென்டரின் பழைய துணி என்பதும், கை, கால்களில் கட்டப்பட்டது கிட்னி சென்டரின் பழைய கையுறைகளே என்பதுமான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இயங்காத அந்த கிட்னி சென்டரிலுள்ள பொருட்கள் கிடைத்திருப்பதால் குற்றவாளிகள் இவர்கள் தவிர மேலும் பலர் இருக்கின்றனரா? என்கின்ற கேள்விக்குறியும் எங்களிடம் உள்ளது'' என்கின்றனர்.

எது எப்படியாகினும் ஆர்த்திக்கு நீதி வேண்டுமென்பது புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பு..! நிறைவேற்றுமா புதுச்சேரி காவல்துறை..?