இராஜபக்ஷே குடும்பத்தின் ஆதிக்கத்தி லுள்ள இலங்கை, தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக நின்று சிலர் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள நிலவரம் குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் நக்கீரனுக்கு அளித்த பேட்டி....
இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களைக் கூற முடியுமா?
தமிழர்களின் வாக்குகளினால் அல்ல, சிங்கள மக்களின் 3 இல் 2 பங்கு வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த வெற்றி வீரன் என்று மார்தட்டி னார் கோத்தபய ராஜபக்சே. தமிழர் தாயகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இலங்கையின் சிவில் நிர்வாகத்தையும் இராணுவமயப்படுத்தி எஞ்சி யுள்ள தமிழர்களையும் முழுமையாக அழித்தொழிக் கும் நோக்குடன் இராணுவ ஆட்சியை முன் னெடுத்தார். இன்று கோத்தபயவுக்கு வாக்களித்த அதே சிங்கள மக்கள், ஜனாதிபதி மாளிகைக்கு முன்பு இலட்சக்கணக்கில் அணிதிரண்டு அவரது உருவ பொம்மையை எரித்து ‘"கோத்தபயவே பதவி விலகு'’என்று கோஷமெழுப்புகின்றனர். எந்த மக்கள் அவரை தோளில் தூக்கி அதிகாரத்தில் அமர வைத் தார்களோ அவர்களே இன்று அவருக்கு எதிராக தீப்பந்தங்கள் ஏந்திப் போராடும் அளவிற்கு இலங்கை யின் பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலையில் உள்ளது. ஆனால், வழக்கம்போலவே இந்த பொருளியல் நெருக்கடிக்கும் முள்ளிவாய்க் கால் அரசியலுக்கும் இருக்கும் தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், இதை வெறும் விலைவாசி உயர்வு பிரச்சனையாக இங்குள்ள பெரும்பாலான தமிழ் ஊடகங்களே காட்சிப்படுத்துவது, இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை தமிழர்களுக்கு இருப்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையே என்று போயிருக்கும் இனப் படுகொலையாளி கோத்தபயவின் கூற்றுக்கு வலுச்சேர்த்துவிடும்.
சின்னஞ்சிறு இலங்கை தீவுக்கு ஏன் இத்தனை பெரிய இராணுவம்? இதுநாள் வரை இலங்கை யாருக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிறது? முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக சொந்த மக்களுக்கு எதிராகப் போர் நடத்தி லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தார்கள். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான இந்த 13 ஆண்டு களில் தமிழர் தாயகப் பகுதியில் ஒரு குண்டுச் சத்தங்கூட கேட்காதபோது ஆறு தமிழர்களுக்கு ஒரு சிங்களப் படை கால்பதித்து இருப்பதேன்? 2009 முள்ளிவாய்கால் இன அழிப்புக்கு முன்பும், பின்பும் பாதுகாப்புச் செலவு என்ற பெயரில் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்தமையும், நவீன ஆயுதங்களுக்குப் பணத்தை அள்ளி இறைத் தது சிங்கள இனவெறி அரசியல். தமிழர்களை இனவழிப்பு செய்வதற்கு ஒவ்வோராண்டும் பல்லா யிரம்கோடி செலவு செய்தார்கள். பின்னர் இனவழிப் புக் குற்றத்தில் இருந்து தப்பிக்கும் பொருட்டு இரத்தக் கறையைப் போக்கி வெள்ளையடித்துக் கொள்வதற்கு செலவு செய்தனர். யுத்தம் முடிந்து இந்த 13 ஆண்டுகளில் தமிழர்கள் மீது சத்தமில்லாத கட்டமைப்பு ரீதியான இனவழிப்பு (Structural Genocide)யுத்தத்திற்கும் செலவு செய்து வருகின்றனர்.
சீனா, அமெரிக்கா என உலக நாடுகளிடம் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் பெற்றுத்தான் இனவழிப்புக்குச் செலவை மேற்கொண்டு வருகின்றனர். கடன், வட்டிக்கு கடன், கடனுக்கு மேல் கடன், வட்டி கட்ட கடன் என நச்சுப் பொறிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டது. தமிழின அழிப்பு அரசியலுக்காக சிங்கள அரசிய லில் சனநாயக மறுப்பும் குடும்ப ஆட்சியும் அளவற்ற ஊழலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இறுதிக்கட்டப் போரில் கஞ்சிக்காக எமது குழந்தைகளும் முதியவர்களும் வரிசையில் நின்றபோது அவர்கள் மீது கொத்துக் குண்டுகளை வீசிக் கொன்றது சிங்களப் படை. இன்று பெட்ரோலுக்காகவும், அரிசிக்காகவும் சிங்கள மக்களும் வரிசையில் நின்று துடிதுடித்து செத்து விழும் அளவிற்கு ராஜபக்சேக்கள் பொருளாதார யுத்தத்தை நடத்திவருகின்றனர்.
தமிழர் தாயகப் பகுதியில் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போல் கொழும்பில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் சிங்கள மக்க ளுக்கு எதிராக சிங்கள இராணுவம் நிறுத்தப்பட் டுள்ளது. இப்படியாக பொருளியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது தமிழின அழிப்பு அரசியல்தான். எனவே நெருக்கடியில் இருந்து மீள்வது என்பது இலங்கைத் தீவில் இன அழிப்பு அரசியலை ஒழித்துக்கட்டுவதில் இருந்தே தொடங்க முடியும்.
உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஐ.நா. மன்றம் ஈழத் தமிழர்களைக் கைவிட்டது ஏன்?
போரினால் சின்னாபின்னமாக்கப்பட்ட மக்கள் கூட்டம் என்ற வகையில் தமிழர்களாகிய நாங்கள் உக்ரைன் மக்களோடு உணர்வுப்பூர்மாக நிற்கிறோம். இந்த முப்பது நாட்களில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் இப்பூமிப்பந்தில் 36 இலட்சம் புதிய ஏதிலிகளை உருவாக்கிவிட்டது. இந்த புலம்பெயர்வும், நொறுங்கிக் கிடக்கும் கட்டிடங்களும், இரத்த வெள்ளத்தில் மிதக்கும் உடல்களும் எங்கள் நினைவுகளை தினமும் முள்ளிவாய்க்காலுக்கு இட்டுச் செல்கிறது.
ஐரோப்பாவில் அமைந்திருக்கும் உக்ரைன் நாட் டுப் பிரச்சனையில் உலகம் இருதுருவமாகப் பிளவு பட்டு நிற்கிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரைன் பக்கம் நிற் கின்றன. அமெரிக்காவுடன் போட்டி போடும் சீன முகாம் ரசியாவின் பக்கம் நிற்கிறது. அரசுகளின் மன்றமான ஐ.நா.வில் உக்ரைன் ஆதரவு அரசுகள் ரசிய ஆக்கிரமிப்புப் போரை நிறுத்தக் கோருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு அவையில் போர் நிறுத்தம் பற்றி பேசப்பட்டது. சர்வதேச நீதிமன்றம் உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்துகிறது. ரசிய ஆதரவு அரசுகள் இவற்றுக்கு எதிராக நிற்கின்றன. ஆனால், ஈழத் தமிழர் விசயத்தில் ஒற்றை மையமாக நின்று உலக நாடுகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசை ஆதரித்து நின்றதேன்?
4 கோடி உக்ரைனியர்களுக்கு என்று ஓர் அரசு இருக்கும்போது உலகெங்கும் பரவி வாழும் 10 கோடி தமிழர்களுக்கு என்று ஓர் அரசு இல்லை. அரசற்ற ஈழத் தமிழினம் என்பது முதலாவது பலவீனம். உக்ரைன், ஐரோப்பாவில் ரசியாவுக்கு அருகில் அமைந் திருக்கிறது. ஈழம், ஆசியாவில் இந்தியாவுக்கு அருகில் அமைந்திருக்கிறது. ரசியா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயலும்போது ரசிய எதிர்ப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக வந்தன. அந்த அரசுகள் ஐ.நா.வில் குரல் எழுப்பின. ஆனால், தமிழர்களுக்கு என்று குரல் கொடுக்க உலகில் எந்த அரசுகளும் முன்வரவில்லை.
புவியமைப்பு, வரலாறு, பண்பாடு, மொழி, வாழ்க்கை முறை என்றெல்லா வகையிலும் தமிழர்களோடு நெருங்கிய உறவுகொண்ட இந்திய அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா.வில் போரை நிறுத்த குரல் எழுப்பி இருக்கவேண்டும். போருக்குப் பின்னான இந்த 13 ஆண்டுகளில் பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானங் களை முன்மொழிந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசு அழிந்துகொண்டிருக் கும் ஈழத் தமிழினத்திற்காக அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி குரல் எழுப்பவில்லை. இந்நிலையில் இந்த உலகில் எங்களுக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?
நாடுகளின் அரசியல், இராஜதந்திர, நலன் களைக் கவனத்தில் கொள்ளாமல் நீதியின் பக்கம் திசை வெளியில் நின்று உலகில் ஒடுக்கப்படும் எந்தவொரு சமூகத்திற்காகவும் குரல் கொடுக்கும் அமைப்பாக இந்த உலக நாடுகள் ஐ.நா. மன்றத்தை கட்டமைத்திருந்தால் நீதிக்காக கதவுகள் எமக்கு எப்போதோ திறந்திருக்கும். உக்ரேனியர்களுக்கு வந்தா ரத்தம், ஈழத்தமிழர்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா என்ற கேள்வி இங்கேதான் எழுகிறது. எனவே, எங்களை ஐ.நா. மன்றம் கைவிட்டது என்பதைவிட வல்லமை கொண்ட உலக அரசுகளின் புவிசார் இராஜதந்திர அரசியலுக்குள் ஈழத் தமிழினமும், எமக்கான நீதியும் பலியிடப்பட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பதாக கோத்தபய இராசபக்சே அறிவித்துள்ளாரே?
இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் கோயில் திருவிழாக் கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களோ அல்லது ஓகி புயலில் காணாமல் போனவர்களோ அல்ல. போர் முடிந்த நிலையில், ’மீளத் திரும்புவர்’ என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சிங்களப் படையிடம் இரத்தமும் சதையுமாக மூக்கும் முழியுமாக கையளிக்கப்பட்டவர்கள். பத்து இருபது பேரோ சில நூறு பேரோ அல்ல... பல்லா யிரக்கணக்கான தமிழர்களை இலங்கையின் முப்படை யினரும் திட்டமிட்டு காணாமல் ஆக்கியுள்ளார்கள்.
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்ற முழக்கத்துடன் ராஜபக்சேக்களின் அடக்குமுறை களுக்கு அடிபணியாமல் 13 ஆண்டுகளாக நீதி கோரி அவர்கள் போராடுகிறார்களே ஒழிய தம் உறவுகளின் மரணச் சான்றிதழ் கேட்டோ இழப்பீடு கேட்டோ அல்ல. ”நாங்கள் பல இலட்சம் தருகிறோம், எம் உறவுகளை உயிரோடு திருப்பிக் கொடுப்பாரோ கோத்தபய?’என காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் மக்கள் கொண்டாடிய "ஜெய்பீம்' திரைப் படம் கூட காணாமலாக்கப்பட்ட ஒரு தமிழனுக்காக அவன் மனைவி நீதி கேட்கும் போராட்டம்தான். நீதிக்கு பதிலாக பணத்தை வாங்கிக்கொண்டு வழக்கை கைவிடுமாறு கேட்கும்போது, "செங்கேணி' என்ற கதாபாத்திரம் ’"நான் தோற்றாலும் பரவாயில்லை, விலை போகமாட்டேன்'’என்று சொல்லிவிடுவார். கோத்தபயவுக்கும் இதைத்தான் பதிலாக ஈழத்தமிழ் மண்ணின் செங்கேணிகள் சொல்லியுள்ளனர்.