கலாஷேத்ரா நிறுவனத்தில் எழுந்த பாலியல் விவகாரத்தில் நிர்வாகத்தைச் சார்ந்த சிலர் இந்த பாலியல் புகாரை திசைதிருப்ப முயற்சி செய்துவருகின்றனர். மாணவிகளுக்கு நீதி கிடைக்கவேண் டும் என்ற நோக்கத்தில் மாணவிகள் பக்கம் இருந்துவந்த சில ஆசிரியர்களை நிர்வாகம் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியது. இதனால் தைரியமாக முன்வந்து புகார்தெரிவித்த சிலர் மௌனம் காக்கத் தொடங்கினர். குறிப்பாக, நந்தினி, நிர்மலா என்ற இரு ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் செயல்படுவதாக மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது.
போராட்டம் நடத்திய மாணவிகளையும் தற்போது நிர்வாகத் தரப்பில் நெருக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், இன் டெர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டியை சேர்ந்த வழக்கறிஞர் அஜிதா, விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என உணர்ந்த தால் அதிலிருந்து விலகிக்கொண்டார். "மாணவிகளின் போராட்டம்தான் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்துள்ளது. அப்படி இருக்கும்போது அந்தப் போராட்டத்திற்கு பின் யாரோ இருக்கிறார்கள், தூண்டிவிடுகிறார்கள் என்பதைப் போல நிர்வாகம் பேசுவது நல்லதல்ல. புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மாணவிகளுக்கு நீதி வழங்கவேண்டும். மேலும், இங்கு பல பாகுபாடுகள் உள்ளதாகவும், சிலருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்பதைப் போல புகார்கள் இருக்கின்றது. 3 ஆண் மாணவர்கள் அங்கு தற் போது பணியாற்றும் ஆசிரியர்கள் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார்கள் மீதும் சரியான நட வடிக்கை எடுக்காத நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், என் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்தக் குழுவிலிருந்து விலகியுள் ளேன்''’என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடிகை அபிராமி வெங்கடாசலம், சென்னை வேப்பேரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து செய்தியாளர்களிடம் “"நான் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. இவ்விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சில கருத்துக்களை பதிவுசெய்தேன். அதற்காக சில மர்ம நபர்கள் என்னை மிரட்டுகிறார்கள். கலாஷேத்ரா மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்காவோ, "நடிகை அபிராமி தன்னிடம் எந்த புகார் மனுவும் கொடுக்கவில்லை, அப்படி ஏதாவது புகாரிருந்தால் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கும்படி கூறினேன்''’என்று கூறுகிறார்.
இதற்கிடையில் மாநில மகளிர் ஆணையத் துக்கு ஒரு புகார் மனு இமெயில் மூலம் சென்றுள் ளது. புகார்கொடுத்த அந்த மாணவி ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர். முன்னாள் கலாஷேத்ரா மாணவி என்பதும் தெரியவந்துள்ளது. அந்த புகாரில் "பரதநாட்டியத்தின் மீது மிகுந்த ஈர்ப்பால் பல சிரமங்களுக்கு பின்பு கலாஷேத்ரா கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரிப் பேராசிரியர்களுக்கு கல்லூரி விடுதி அருகிலேயே வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. நான் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலே பல வகையில் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத் தனர். அப்போது நான் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை. ஒருநாள் எனது பேராசிரியர், விடுதியில் இருக்கும்போது போன் செய்து பேசினார். அப்போது அவர் "அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வில்லை என்றால் தேர்வின்போது ஒப்பனைகள் சரியில்லை என்று முப்பது மதிப்பெண்கள்தான் வழங்குவேன். நீ ரஷ்யாவிலிருந்து இவ்வளவு செலவு செய்து படித்தாலும் பலனில்லை' என்று மிரட்டினார்.
இந்த நிலையில் கல்லூரியில் நடன நிகழ்ச்சி ஒன்று அரங்கேறியது. அதில் கலந்துகொள்ள சிறப்புப் பயிற்சியளிப்பதாகக் கூறி அவர் வீட்டுக்கு அழைத்தார். விடுதியினருகே அந்த பேராசிரியரின் வீடு இருப்பதால் இரவு 8 மணிக்கு அவரது வீட்டுக்கு நான் சென்றேன். இதைப் பயன் படுத்திக்கொண்டு உடலின் பல பாகங்களில் தவறாகத் தீண்டியதுடன், என் விருப்பத்திற்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதை நான் வெளியே சொன்னால் கல்லூரி நிர்வாகத் திடம் "நீ ஒழுக்கமில்லாமல் வகுப்பில் நடந்து கொள்வதாக கூறி கல்லூரியிலிருந்து வெளியே அனுப்பிவிடுவேன்' என்று அச்சுறுத்தினார். அந்த சமயத்தில் என்னை பலமுறை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தார். பிறகு எனக்கு 65 முதல் 75 மதிப்பெண் அளித்தார். நான் வகுப்பில் ஐந்தாவது இடத்தில் இருந்தேன். நான் வெளிநாட்டு மாணவி என்பதால் என் படிப்பை மனதில் வைத்துக் கொண்டு இந்த விஷயத்தை நான் வெளியே சொல்லவில்லை. இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக ஹரிபத்மன் கைதுசெய்யப்பட்ட தகவல் எனக்குக் கிடைத்தது .
ஹரிபத்மன் போலவே மதிப்பெண்ணை ஆயுதமாகக்கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த பேராசிரியர் இன்னும் கலாஷேத்ராவின் மூத்த பேராசிரியராக சுதந்திரமாகப் பணியாற்றிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான ஆதாரங்களையும் விசாரணையின்போது நான் ஒப்படைப்பேன்''’என்று அதில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள், கலாஷேத்ரா நிர்வாகம் என அனைத்தும் போராட்டம் செய்யும் மாணவிகளை தவறாக விமர்சித்தும், போராட்டத்தை பின்னடையச் செய்தும் வந்தாலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்ந்து புகாரளித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உண்மை வெல்லும்… என்பதே நமது நம்பிக்கை.
-அரவிந்த்