நாடே பதறிப்போன ஜெயராஜ், பென்னிக்ஸ் கஸ்டடி படுகொலை சம்பவத்திற்குப் பிறகு, சாத்தான்குளம் காவல்நிலையத்தின் போலீசார் கூண்டோடு மாற்றப் பட்டனர். இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், எஸ்.ஐ. ராஜா உள்ளிட்ட போலீசார் அங்கு மாறுதலாகி வந்ததில் இருந்து அடக்கியே வாசித்தனர். ஆனால், வெறும் இரண்டே மாதத்தில், "பயமும் பீதியும் பத்தே நாள்தான். அதன்பின், பழைய புத்தி தன்னாலே வந்துவிடும்'’என்கிற கிராமத்து சொலவடை யின் முழு உருவமாய் சாத்தான்குளம் காவல்நிலையம் மாறியிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

police

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விவசாய வேலை பார்த்துக்கொண்டு, ஸ்டான்டிங் டிரைவராகவும் பகுதிநேர வேலை பார்ப்பவர் மார்ட்டின். ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் வேகமெடுத்த போது, அதை உடனடியாக வெளிக் கொண்டு வந்ததுடன், நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் என்கிற அமைப்பின் வழியாக சமூக வலைத்தளங்களில் பெருமளவில் ஷேர் செய்யப்பட காரணமாக இருந்தவர் மார்ட்டின்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையின் போதே, இந்தக் கொலை சம்பவத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நக்கீரனில் உறுதிப்படுத்தி இருந்தோம். அந்த சமயத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் இறந்ததில் தன்னார்வலர்கள் தாக்கியதன் பங்கும் இருக்கிறது என மார்ட்டின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், பெஞ்சமின் என்பவரது வீட்டைத் தாக்கியுள்ள னர். இந்தப் பிரச்சனையில் மார்ட்டின் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது தற்போ தைய சாத்தான்குளம் காவல்நிலையம். மார்ட்டி னுக்கு பக்கத்து வீட்டுக்காரரான, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவரின் புகார் மனுவை வாங்கியே இந்த வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

Advertisment

pp

இந்நிலையில், அந்த புகாரின் க்ரைம் நம்பர் 341/20-ன்படி ஆகஸ்ட் 23ந்தேதி, இரவு 8.45 மணிக்கு மார்ட்டின் வீட்டிற்கு சென்ற சாத் தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், எஸ்.ஐ. ராஜா தலைமையிலான போலீசார், மார்ட்டினை விசாரணைக்காக இழுத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரைக் காவல்நிலையம் கொண்டு செல்லாமல், போலீஸ் குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் வைத்து இரவு முழுவதும் தாக்கியதாக சொல்லப்படு கிறது. இதில் மார்ட்டினுக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது. மறுநாள் அவர் ரிமாண்ட் செய்யப்படாமல் போனதால், அவரது சகோதரர் பொன்பாண்டி நடந்தவைகளை சாத்தான்குளம் நடுவர் நீதிமன்றத்தில் முறையிட, அதன்பிறகே மார்ட்டின் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

24ம் தேதியன்று கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டாலும், மார்ட்டினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டத்திற்குப் புறம்பான வகையில் 28ந்தேதி வரை இல்லீகல் கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள் இன்ஸ்பெக்டர் சேவியரும், எஸ்.ஐ. ராஜாவும். இந்த இடைப் பட்ட நாட்களில் காயமடைந்த மார்ட்டினை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றிருக் கிறார்கள்.

Advertisment

pp

மார்ட்டினைப் பரிசோதித்த மருத்துவர் சிவகாமி, தாக்கப்பட்டதில் உள்காயமிருக்கிறது. மூச்சுத்திணறலும் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக மார்ட்டினை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி போலீசா ரும் மார்ட்டினை தூத்துக்குடி ஜி.ஹெச்.சில் அட்மிட் செய்திருக் கிறார்கள். இதனையறிந்த மார்ட்டினின் மனைவி சரோஜா, தனது கணவரை நேரில்சென்று சந்திருக்கிறார்.

அப்போது, ""போலீசார் தாக்கியதால் தன்னால் மலம், சிறுநீர் கழிக்க முடியவில்லை. உள்காயமிருக்கிறது. கால் முட்டி யையும் அடித்துக் காயப்படுத்தி விட்டார்கள்'' என்று மார்ட்டின் கண்ணீர் விட்டிருக்கிறார். ஜெயராஜ்- பென்னிக்ஸ் சம்பவம்போல சீரியஸாக எதுவும் நடந்து விடுமோ என்று பதறிப்போன சரோஜா, 23ந் தேதியே இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், எஸ்.ஐ. ராஜா, காவலர்கள் பாண்டியராஜா, சின்னத்துரை ஆகியோர், வீட்டிலிருந்து கணவர் மார்ட்டினை இழுத்துச் சென்று, ஆகஸ்ட் 28ந்தேதி வரை கோர்ட்டில் ஆஜர் படுத்தாததையும், இதற்குக் காரணம் அவர் கடுமையாக தாக்கப்பட்டதுதான் என்றும் கூறி, தனது கணவரை உயிருடன் மீட்டுத் தரக்கோரி சாத்தன்குளம் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் கொடுத் திருக்கிறார்.

இந்தப் புகாரை உடனடி யாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ் வரனுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் சாத்தான்குளம் நீதிபதி. இதையறிந்து பரபரப்பான இன்ஸ்பெக்டர் சேவியர், மார்ட்டினை சாத்தான்குளம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல், ஆகஸ்ட் 28ந்தேதி ஸ்ரீவைகுண்டம் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, ரிமாண்ட் செய் வதற்காக எஸ்.ஐ. ராஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்து அனுப்பியிருக்கிறார். ஆனால் அதற்குள்ளாக துரிதமாக செயல் பட்ட மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன், ஸ்ரீ வைகுண்டம் நீதிபதி தமிழரச னிடம் விஷயத்தைத் தெரியப் படுத்தியதால், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இதுபற்றி விசாரிக்குமாறு பரிந்துரைத் திருக்கிறார். நீதிபதி தமிழரசன் அங்கே சென்றபோது, அவருக்காக காத்திருந்த எஸ்.ஐ. டீம், அவர் வந்ததும் நீதிபதியிடம் மார்ட்டினை ஆஜர்படுத்தி யிருக்கிறார்கள்.

இதற்குள்ளாகவே, புகார் கொடுத்த மார்ட்டினின் மனைவி சரோஜாவை ஸ்ரீ வைகுண்டம் கோர்ட்டுக்கு விசாரணைக்காக அழைத் திருந்தார் நீதிபதி தமிழரசன். அங்கு இரவு தொடங் கிய விசாரணையில் கலந்து கொள்ள, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வர னால் அனுப்பி வைக்கப்பட்ட கோர்ட் பிரதிநிதி வந்தததுடன், இரவு தாண்டியும் நீடித்த விசா ரணையைக் கண்காணித்தபடியே இரு ந்திருக்கிறார்.

அனைவரிடமும் விசாரணையை நடத்திய ஸ்ரீவைகுண்டம் நீதிபதி தமிழரசன், கைது செய்யப் பட்டும் ஆஜர்படுத்தாமல், மார்ட்டினை இல்லீகல் கஸ்டடியில் வைத்திருந்த எஸ்.ஐ. ராஜாவைக் கண்டித்ததோடு, ""இப்போதுதான் ஒரு பிரச்சினை முடிந்திருக்கிறது. தெரிந்தும், இப்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் ஏதாவது நடந்தால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும்'' என்று எஸ்.ஐ. ராஜா தலைமையிலான போலீசாரை வறுத்தெடுத்திருக்கிறார்.

police

பின்னிரவு இரண்டு மணி வரை நீடித்த விசாரணை ஒரு வழியாக முடிவுக்கு வர, ஓய்வில்லாமல் கண்காணித்தபடி இருந்த தூத்துக்குடி நீதிமன்ற பிரதிநிதி, மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதன்பிறகு, நீதிபதியின் தலையீட்டால் அப்போதே மார்ட்டினுக்கு ஜாமீன் வழங்கப் பட்டு, அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மார்ட்டினை தொடர்புகொண்டு பேசியபோது, ""போலீசார் தாக் கியதால் உள்காயம் ஏற்பட்டிருக்கிறது. இயற்கை உபாதைகளைக் கழிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. மேல் சிகிச்சை எடுக்க வேண்டும். பிறகு பேசுகிறேன்'' என்று படபடப் பாக போனைக் கட் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியரின் கருத்தறிய, அவரது எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டும், அழைப்பை ஏற்கவில்லை.

மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் பேசியபோது, ""அவருக்கு உடல்நிலை சரியில்லாமலிருந்தது. ஓடியதில் விழுந்து முட்டியில் காயமிருக்கும் போல. சிகிச்சைக்காக அவரை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற திலும், ஸ்கேன் எடுப்பதிலும் தான் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இல்லீகல் கஸ்டடி என்று சொல்லிவிட முடியாது. நீதிமன்ற விசாரணைக்குப் பின்பு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டி ருக்கிறார்'' என்றார் விளக்கமாக.

இந்த சம்பவம் சாத்தான் குளத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பி இருக்கும் நிலையில், கந்துவட்டிக்கு பணம் கொடுப்பதோடு, சாத்தான்குளத்தில் ரவுடியிசம் செய்து கொண்டிருக்கும் மார்ட்டினுக்கு நீதிபதி சொந்த ஜாமீன் கொடுத்ததைக் கண்டித்து சாத்தான்குளம் வியாபாரிகள் சார்பில் சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில் 17ந்தேதி ஒருவரின் காரை அடித்து நொறுக்கிய வழக்கில் மார்ட்டினுக்கு தொடர்பிருப்ப தாகவும், 23ந்தேதி முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரை மிரட்டியதாகவும், அதற்காகவே போலீசார் கைது செய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத் தும் விதமாக, வியாபாரி ஒருவரை மார்ட்டின் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.

மார்ட்டினின் முந்தைய செயல்பாடுகள் குறித்து பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மார்ட்டின் மீதான வியாபாரிகளின் புகாரில் உண்மை யிருந்தாலும், அதில் சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை காவல் துறைக்கு எப்படி வந்தது? ஏற்கனவே ஒருமுறை சாத்தான்குளம் காவல்நிலையமே ஆடிப்போனது போதாதா? என்று வேதனை வெளிப்படுத்துகிறார்கள் சாத்தான்குளம் பகுதிவாசிகள்.

-பரமசிவன்

படங்கள் : ப.ராம்குமார்