பட்டாசுத் தொழில் மோசடி மற்றும் பட்டாசுத் தொழிலாளர்களின் பரிதவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சி...
முன்பு டி.ஆர்.ஓ.வாக இருந்த மலர்விழி வெளிப் படையாக பட்டாசு உற்பத்தியாளர்களிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘பட்டாசு ஆலைகளில் கடைப்பிடிக்கவே முடியாத சட்டத்தைப் போட்டு நெருக்கடி தருவதாகச் சொல்கின்றீர்கள். சட்டம் இப்படி இருந்தால்தானே அதிகாரிகள் தங்களின் பிடிக்குள் உங்களை வைத்துக் கொள்ள முடியும்.’ என்றார். அவர் சொன்னமாதிரியே அதிகாரிகள் பிடிக்குள்தான் பட்டாசுத் தொழில் சிக்கியிருக்கிறது. மணிமருந்து போன்ற கலவையைக் கையாள்வதில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் விபத்துகள் ஏற்படும். ஆனாலும், விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்வதற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறார்கள்.
பட்டாசுக்கு தடைகோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் பல கட்டுப்பாடுகளை விதித்து பட்டாசுத் தொழிலுக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது. குறைந்த மாசுள்ள மற்றும் பசுமை பட்டாசுகள் தயாரிப்பு, விற்பனை தவிர மற்ற அனைத்துக்கும் தடை விதித்துள்ளது. பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் முழுதும் தடை செய்யப்பட்டுள்ளன. சட்ட ரீதியான பிரச்சனைகள் தொடர்ந்தாலும் பட்டாசு உற் பத்தியானது லாபம் கொழிக்கும் தொழிலாகவே இருக்கிறது. ஏனென்றால், பட்டாசுக்கு அதிக விலைவைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். எப்படி தெரியுமா?
பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் மனக்குமுறலுடன் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேசினார். அவர் நம்மிடம் பகிர்ந்ததை வெகுவாக சுருக்கித் தந்திருக்கிறோம்.
"எந்த ஒரு வியாபாரத்திலும் உயிராக மதிக்கப்பட வேண்டியவர்கள் வாடிக்கையாளர் கள். பட்டாசு வியாபாரமோ, மனசாட்சியை தூக்கியெறிந்துவிட்டு, வாடிக்கையாளர்களை அநியாயத்துக்கு ஏமாற்றுகிறது. இதன் பின்னணி கொடுமையானது. 20 வருடங்களுக்கு முன், பட்டாசுத் தொழிலில் தலைக்கு மேல் கத்தியாக சென்ட்ரல் எக்சைஸ் கொண்டுவரப்பட்டது. அப்போதெல்லாம் அனைத்து பட்டாசு ஆலைகளின் விலைப்பட்டியலையும் கலால்துறையில் சமர்ப்பிக்கவேண்டும். அத்துறை ஒப்புதல் அளித்தபிறகே, விலைப்பட்டியலை வெளி யிடமுடியும். அதனால், விலைப்பட்டியலில் பெரிய அளவு தில்லுமுல்லு பண்ணமுடியாது. நிறைய ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும். அதனால், பட்டாசு உற்பத்தியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். சங்க உறுப்பினர்களிடம் வசூலித்து அப்போது மத்தியில் இருந்த மந்திரிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்து, கலால் பிரிவின் கட்டுப்பாட்டிலிருந்து பட்டாசுத் தொழிலை விடுவித்தார்கள். தமிழ்நாட் டில் மட்டுமல்ல.. டெல்லிவரை லஞ்சத்தைக் கொட்டிக் கொடுப்பதில் பட்டாசு உற்பத்தியாளர்கள் கில்லாடிகள். அதனால்தான், பில்லைக் குறைத்துப் போடுவதும், வரி ஏய்ப்பும் தாராளமாக நடக்கிறது.
ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் வருவாய் என்பதெல்லாம் வெறும் புள்ளிவிபர கணக்குதான். உண்மையிலேயே பட்டாசு உற்பத்தியும் வியாபார மும் எந்த அளவுக்கு நடக்கிறது என்பதை எந்தத் துறையும் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. ஒரு நாளில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து எவ்வளவு பட்டாசுக்கான மூலப்பொருட்கள் சிவகாசிக்கு வருகிறது? கூலி எவ்வளவு கொடுக்கப்படுகிறது? இதைக் கணக்கிட்டாலே கோடானு கோடிகளில் நடக்கும் வரி ஏய்ப்பு குட்டு வெளிப்பட்டுவிடும். கோடிகளில் வரி ஏய்ப்பு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களும் உண்டு.
பட்டாசுப் பெட்டிகளில் எம்.ஆர்.பி. அதிகம் போடுவது பெரும் குற்றமாகவும் உறுத்தலாகவும் இருக்கிறதென்று 2000-ல் நேர்மையான பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கேள்வி எழுப்பினார் கள். 1 + 1.5 எம்.ஆர்.பி. போடவேண்டுமென்று அப் போது ஒரு முடிவெடுத்தார்கள். அதன்படி, 100 ரூபாய் பெறுமான பட்டாசுக்கு எம்.ஆர்.பி. ரூ.250 போட்டுக்கொள்ளலாம். அப்போது பெரிய பட் டாசு நிறுவனமான ஸ்டான்டர்ட் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தார், "பட்டாசு பெட்டிகளில் விலைக் கான ஸ்டிக்கர் ஒட்டாமல், அச்சிடுவதுதான் எங்களது வழக்கம். அடுத்த ஒரு வருடத்துக்கான பெட்டிகளில் எம்.ஆர்.பி. அச்சிட்டுவிட்டோம். அதனால், புதிய முறையைக் கடைப்பிடிப்பதற்கு ஒருவருட கால அவகாசம் வேண்டுமென்றார்கள். அதற்கு சங்கமும் சம்மதித்தது.
அடுத்த வருட தீபாவளி முடிந்ததும், "ஓசூர் மார்க்கெட்டுக்காக 10 மடங்கு அதிக விலை வைத்தே எம்.ஆர்.பி. போடவேண்டும். அங்கே 90 சதவீத தள்ளுபடி யில் விற்றுக்கொள்வார்கள். நாங்கள் தயாரிக்கும் பட்டாசு தரமானது. கோல்கேட் பற் பசைக்கும் கோபால் பல் பொடிக்கும் வித்தியாசம் இல்லையா? சந்தையில் எங்களுக்கு உள்ள மதிப்பை இழக்கமுடியாது. நாங்கள் வேண்டுமானால் சங்கத் திலிருந்து வெளியேறிக்கொள்கிறோம்'’என்றார்கள். அதனால், நியாயமான எம்.ஆர்.பி. குறித்த பேச்சு நின்றுபோனது. அன்று இருந்தது ஒரே சங்கம். இன்றோ சங்கங்கள் அதிகமாகிவிட்டன. கடிவாளம் இல்லாத குதிரைகளாக, பட்டாசு நிறுவனங்கள் அதனதன் இஷ்டத்துக்கு எம்.ஆர்.பி. போடுகின்றன. அதிக விலைக்கு விற்பதும் தொடர்ந்து நடக்கிறது.
சிவகாசியில் பிரபலமானது பக்கோடா. தரமாக பக்கோடா தயாரிப்பவர்கள் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பார்கள். ஏதோ ஒரு எண்ணெய்யில் தயாரிப்பவர்கள் 10 ரூபாய் குறைத்து விற்பார்கள். ஆக, எந்த ஒரு பொருளுக்கும் விலை கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும். மிகக் கூடுதலாக விலைவைத்து விற்கமுடியாது. பட்டாசு அப்படி கிடையாது. ஏனென்றால், அது மக்களின் அத்தியாவசிய தேவையில் வராது. வருடத்துக்கு ஒருநாள் வரும் தீபாவளி கொண்டாட்டம் என்பதால், விலையைப் பெரிதாக நினைக்கமாட் டார்கள். மக்களின் இந்த மனநிலையைச் சாதக மாக்கி, ஒவ்வொரு வருடமும் இந்த வருஷம் பட்டாசு விலை கூடிருச்சு.. ரொம்ப கிராக்கி ஆயிருச்சு..’ என்று போகிறபோக்கில் விளம்பரத் தைக் கசியவிட்டு, தீபாவளிக்கு நெருக்கமான நாட்களில், மிக அதிக மான விலைக்கு பட் டாசு விற்று, மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இங்கு ஒரு பெரிய பட்டாசு ஆலை முதலாளி இருக் கிறார். பெரிய பெரிய அதிகாரிகளை முடிந்தமட்டிலும் கவனித்து, தன்னுடைய அடிமைகளாக வைத்திருக்கிறார். இவர் போன்றவர்களால், மற்ற பட்டாசு ஆலை முதலாளிகளும் போட்டிபோட்டு லஞ்சம் கொடுக்கிறார்கள். இவர்களிடம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தேசநலனுக்கு கேடான விஷயம் என்று யார் சொல்வது? வெறும் கூலிக்காக உயிரைப் பணயம்வைத்து கடுமையாக உழைக்கிறார்கள் பட்டாசுத் தொழிலாளர்கள். லஞ்சத்தை வாரியிறைப்பதன் மூலம், அவர்களின் உழைப்பின் மேன்மையைக் கெடுத்து, பட்டாசுத் தொழிலுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி, படுகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் ஒரு டீம் அமைத்து வசூல் பண்ணுகிறார்கள். விதிமீறலைக் காரணம் காட்டி போலீஸ் டீம் ரூ.50000 வரை கல்லா கட்டிவிடுகிறது. சிவகாசி லிமிட்டில் உள்ள காவல் ஆய்வாளர் ஒருவர், அளவுக்கதிகமாக லஞ்சம் வாங்கியது புகாரானதால், இடமாற்றம் செய்யப்பட்டார். இந்திரனான சார்பு ஆய்வாளர் ஒருவருக்கு வசூல் சக்கரவர்த்தி என்று பெயர் வைத்திருக் கிறோம்.
சில நாட்களுக்குமுன், இதே விருதுநகர் மாவட்டத்தில் ரூ.3000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. பாலமுரளியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பட்டாசுத் தொழிலிலோ லஞ்சம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை எந்த அதிகாரியாவது சிக்கியிருக்கிறாரா? விபத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத எந்த அதிகாரி மீதாவது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? பட்டாசுத் தொழிலில் என்னென்ன தில்லுமுல்லுகள் தொடர்ந்து நடக்கின்றன என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தினால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவரும்''’என்றார் வேதனையோடு.
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, சிவகாசி பட்டாசுத் தொழிலின் தட்பவெப்பம் அறிந்தவர். அவரிடம், "தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழி லாளர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத்தீர்வு கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் பரவிக் கிடக்கிறதே?''’எனக் கேட்டோம்.
"பட்டாசு விபத்துகள் மற்றும் பின்னணி குறித்து நக்கீரன் இதழில் வெளிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நக்கீரன் காணொலிகளில் சுட்டிக் காட்டியதையும் கண்டேன். பட்டாசு விபத்து உயிரிழப்புகள் ஆழ்ந்த வருத்தத்தை உள்ளூர உருவாக்கிவிடுகின்றன. அவற்றைத் தடுக்கும் நல்வழிகள் எவையானாலும், அதை ஆராய்ந்து செயலாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது''’என்றார் அக்கறையுடன்.
வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிவரும் தமிழ்நாடு அரசு, பட்டாசுத் தொழிலில் நங்கூரமிட்டுள்ள லஞ்ச அரக்கர்களை வேரோடு சாய்த்து, நேர்மையான விலையில் பொதுமக்களுக்கு பட்டாசுகள் கிடைப்பதற்கான நடவடிக்கையை துரிதமாகத் தொடங்கவேண்டும்.