"என்ன இது பகுத்தறிவு பேசும் தி.க. தலைவர் சாரட் வண்டியில் ஊர்வலம் போறாரு' என சமூக வலைத்தளங்களில் காவி டீம் கேலியாகவும், சிவப்பு சிந்தனையாளர்கள் கேள்வியாகவும் பதிவிட்டபோதே திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா மாநாடு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர முடிந்தது.

Advertisment

dk

75 ஆண்டுகளுக்குமுன்பு கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில், பிராமணர்களுக்கு ஒரு குடிநீர் பானையும் மற்ற சமூகத்தினருக்கு தனி தண்ணீர் பானையும் வைக்கப்பட்ட வருணாசிரம பேதத்தை எதிர்த்து உருவாகி வெற்றிபெற்ற திராவிடர் மாணவர் கழகத்தின் பவளவிழா ஜூலை 8-ந்தேதி கும்பகோணத்தில் நடந்தது.

Advertisment

பகல் நேர அரங்க நிகழ்ச்சி நடந்த இடம், காஞ்சி சங்கர மகால். அதற்கு, நீட் தேர்வால் உயிர்ப்பலியான அனிதா அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாலை ஐந்துமணிக்கு மண்டபத்தில் இருந்து திராவிடர் கழக மாணவ, மாணவிகளின் கருஞ்சட்டைப் பேரணி 6 வரிசைகளில் ஒரு கி.மீ. நீளத்தில் புறப்பட்டு, கடைவீதி நான்குரோடு வழியாக மகாமக குளக்கரைப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றது.

"கும்பகோணம் இதுவரை இப்படியொரு கட்டுக்கோப்பான பேரணியை கண்டதில்லை, யாரும் மது அருந்தி வரவில்லை. ராணுவத்தினரின் அணிவகுப்பை போலவே கட்டுப்பாடாக இருந்தது'’ என்கிறார் வர்த்தகர் ரமேஷ்.

Advertisment

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என முழங்கப்பட்ட பேரணியின் இடையில் கோலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன. திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி சாரட்வண்டியில் வந்தபோது, ""30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியரை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று மரியாதை செய்துள்ளோம். பல்லக்குத் தூக்க மட்டுமே லாயக்கு என ஒதுக்கப்பட்ட திராவிட இனத்தவரை பல்லக்கில் ஏற்றி வைத்த இயக்கம் இது. பெரியார், அண்ணா, கலைஞர் எனப் பலரும் இப்படி சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர்'' என்றார் தி.க. இளைஞர் அணி அமைப்பாளர் சிவக்குமார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய கி.வீரமணியோ,‘""காவிகளோ, ஆவிகளோ திராவிடர்கழகத்தை அசைக்கமுடியாது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள தற்போதைய நிலையில் மாணவர்களை நெறிப்படுத்தி, பக்குவப்படுத்த பெற்றோர்கள் முன்வரவேண்டும். கும்பகோணம் அரசு கல்லூரியில் திராவிடர் மாணவர் கழகம் தோன்றிய வரலாற்றை இளையதலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்'' என்றார்.

இளைஞர்களையும் சிறுவர்களையும் ஷாகா பயிற்சி மூலம் ஈர்க்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சவாலாக தமிழகத்தில் பெரியார் பிஞ்சுகளை தயார்படுத்தி பேரணி நடத்திக் காட்டியிருக்கிறது திராவிடர் கழகம்.

veramani

-க.செல்வகுமார்