சங்ககிரி ராஜ்குமார் "வெங்காயம்', "பயாஸ்கோப்' பட இயக்குநர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன், சீமான் இருப்பதாகக் காட்டப்படும் படத்தை வெட்டி, ஒட்டி "போட்டோஷாப்' மென்பொருள் இல்லாத காலத்திலேயே அதற்கிணையான வேலைகளைச் செய்தது தான்தான் என அம்பலப்படுத்தியவர். தடம்புரண்டு செல்லும் சீமானின் பயணத்தைக் குறித்து விமர்சிக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்...
சாதியச் சகடையில் இருந்து என்னை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி இந்த சமூகத்தில் மனிதனாக நட்டவர் தந்தை பெரியார். இந்த முழக்கங்கள் எல்லாம் சீமான் அவர்கள் பெரியாரிய மேடைகளில் பேசத் தொடங்கு வதற்கு முன்பாக உரக்க கூறிய வார்த்தைகள். மனித சமூகத்தில் வேர்பிடித்து மாபெரும் மரமாக வளர வேண்டியவர்... கருகி, சருகாகி மீண்டும் சாதியச் சகடையிலே விழுந்திருக்கிறார்.
பெரியார் இங்கே பல்வேறு நிலைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். சிலருக்கு கருத்திய லாக அரசியலாக இருக்கலாம், சிலருக்கு வெறும் எமோஷனலாகக் கூட இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தங்கள் சொந்த வாழ்க்கையில், அவரால் ஏற்பட்ட முன்னேற்றங்களை எண்ணி தனது நன்றிக்குரியவராக வைத்திருக்கிறார் கள். அவர்களுக்கு பெரியாரின் பிறந்தநாளோ, நினைவுநாளோ, அவரது போராட்டங்கள் குறித்த தரவுகளோ அவரது பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கவோ கூட தெரியாது. ஆனால் தனது தந்தை, தாத்தாக்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையைவிட, தனது நிலை பலமடங்கு முன்னேறியிருப்பதை உணர்கிறார்கள். அதற்குக் காரணம் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளிலும் தனது வீரிய கருத்தால் பெரியார் ஏற்படுத்திய மாற்றம்தான் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
பட்டியல் சமூகத்திற்கேனும் அம்பேத்கர் என்ற மாபெரும் அரண் இருந்தது. பட்டியல் சமூகத்தினரைப் போலவே எந்தவிதத்திலும் கல்வியில், வேலை வாய்ப்பில், அரசியலில் முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்ட மக்களை பெரியார்தான் அரணாக நின்று காத்தார்.
என் அப்பாவுடன் பிறந்த அண்ணன் தங்கைகள் 5 பேர். கடைசி குழந்தைக்குப் பிறகு நான்கு குழந்தைகள் பிறந்து, கொன்றிருக்கிறார்கள். அவர்கள் ஐந்து குழந்தையை வைத்துக்கொண்டது, அதன் பிறகு நான்கு குழந்தைகளை கொன்றது எல்லாம் அந்நாட்களில் எந்தவிதமான கருத்தடை சாதனங்களோ, விழிப்புணர்வோ இல்லாத காரணம் தான். எங்கள் பாட்டி சொன்ன ஒரு செய்தி இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்கும். அந்நாட்களில் பெண்கள் வேண்டாத கர்ப்பம் தரித்துவிட்டால், கருக்கலைப்பு செய்ய அப்போது இருந்த முறையைப் பற்றிச் சொன்னார். நாட்டு வைத்தியரிடம் சென்றால், மரத்தால் ஆன கரண்டி யின் மூலம் அந்தக் கருவை வழித்தெடுப்பார்களாம். அந்நாட்களில் என்று நான் குறிப்பிடுவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. என் பாட்டி இன்னும் உயிருடன் இருக்கிறார். நான் சொல்வது சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்புதான்.
விளையாடிக்கொண்டிருந்த பெண்களை பூப்பெய்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு திருமணம் முடித்து வைத்து, அல்லது குழந்தைப் பருவத்திலே திரு மணம் செய்துவைத்து, பூப்பெய்திய பிறகு தன் உடல் பற்றிய எந்த புரிதலும் இல்லாத வயதிலே குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திர மாக 10 குழந்தைகள், 12 குழந்தைகளைப் பிரசவிப்பது, தவிர்க்கவே முடியாத சூழ லில் கரண்டியால் கருக்கலைப்பு செய்வது போன்ற கொடுமைகளை இந்தச் சமூகம் பெண்களின் மீது நிகழ்த்திக்கொண்டிருந் தது. ஒரு பெண் பிறந்து திருமணம் செய்துகொண்டு 10, 12 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, அதற்கு தன் ஆயுட்காலங் களை செலவழித்துவிட்டு இறந்துவிட வேண்டிய நிலையில்தான்... இந்த சமூகம் வைத்திருந்தது. 80, 90களில்தான் தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்கக் கூடிய வழிகளைத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார் கள். அதற்கு முன் பெண்கள் சந்தித்த அவலங்களை யும், துயரங்களையும் இன்று செவிவழிச் செய்தி யாகக் கேட்டாலே நமக்கு உடல் நடுங்கும். அதே காலகட்டத்தில் பெண்களுக்கும் சமஉரிமை வேண்டும் என்று போராடிய பெரியாரின் பார்வை யில் இந்த செய்திகள் எப்படி பார்க்கப்பட்டிருக்கும், அவர் எவ்வளவு கோபப்பட்டிருப்பார், எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். அதன் வெளிப்பாடாகத் தான் "பெண்கள் ஒன்றும் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் இல்லை அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுக்க வேண்டும். அதற்கு இந்த கர்ப்பப்பைதான் தடையாக இருக்குமானால், அதை அறுத்தெறிந்தாலாவது அவர்கள் விடுதலை பெறுவார்களா?' என்று வேதனையாக பதிவு செய்திருக்கிறார்.
"பெரியார் எந்தச் சூழலில் சொன்னார்?, எந்த தேவைக்காகச் சொன்னார்?, எதைப் பெறுவதற் காகச் சொன்னார்?' என்பதையெல்லாம், அவரைப் பற்றி தெரியாதவர்கள் இன்று இட்டுக் கட்டி பேசி னால், அவர்களுக்கு பதில் சொல்லலாம். ஆனால் சீமான், பெரியாரின் பேச்சுக்களை நன்றாக உணர்ந்து எந்த ஒரு வரியை மட்டும் பிரித்துப் பேசினால், அது பொதுமக்களிடம் அருவருப்பாக பார்க்கப்படும் என்பதை நன்றாக உணர்ந்து... "பெரியார் கர்ப்பப்பையை அறுத்தெறிய சொன் னார், தமிழ் சமூகத்தை மலட்டுச் சமூகமாக ஆக்கப் பார்த்தார்' என்றெல்லாம் பேசுவது காலத்தால் புறந் தள்ளக் கூடியது. மேலும் பெரியாரின் கருத்திற்கு தர்க்கரீதியாக பதில்சொல்ல முடியாதவர்கள் உட னடியாக கையில் எடுக்கும் ஆயுதம்... "அவர் கன்னடர், தெலுங்கர்' என்று அடையாளப் படுத்துகிறார்கள்.
"ஒரு மனிதனும் ஒரு கழுதையும் தேர்தலில் போட்டியிட்டால் நாம் யாருக்கு வாக்களிப்போம்?' -இப்படி ஒரு கேள்வி கேட்டால் நிச்சயம் நகைப்புக்குரியதாகத் தான் இருக்கும். அந்த மனிதன் சொல் கிறான். இங்கே மனிதனின் பிறப்பு நான்கு வர்ணங்களைக் கொண்டது. ஒருவன் உயர்ந்தவன் என்றும், இன்னொருவன் தாழ்ந்தவன் என்றும், ஒருவன் தொட்டால் தீட்டு என்றும் இன்னொருவனை பார்த்தாலே தீட்டு என்கிற கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறேன்' என்று அந்தக் கழுதை சொல்கிறது. "பிறப்பின் அடிப் படையில் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது... மனிதர்கள் அனைவரும் சமமானவர் களே' என்று. இப்போது யோசித்தால் புரியும் நாம் நிச்சயம் அந்த கழுதையைத்தான் ஆதரிப்போம் என்று.
இதைத்தான் பெரியாரும் அழுத்தமாக குறிப்பிடுகிறார். ஒருவன் யார்?, அவனுடைய பிறப்பின் அடிப்படையில் அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன், என்ன மொழி பேசுகிறவன் என்பதல்ல நம் பிரச்சினை. அவன் சொல்ல வருகிற கொள்கை என்ன?, அவனால் இந்த பொதுமக்களுக்கு ஏற்படப்போகும் நன்மை என்ன?, அவனால் இந்த சமூகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன என்பதைத்தானே நாம் கவனிக்கவேண்டும். அதைவிடுத்து அவன் சொல்ல வரும் கருத்திற்கு பதில் இல்லாத நிலையில், அவன் எந்த மொழி பேசுகிறவன், எந்த ஜாதியில் பிறந்தான் என்பதை ஆய்வு செய்து முற்றிலுமாக புறக்கணிக்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்.
இன்று சீமான் பெரியாரை தாக்குவதற்கு எடுத்திருக்கும் ஆயுதம், அவருக்கு ஒன்றும் புதிதானதல்ல. அதே ஆயுதத்தால் அவரும் தாக்குதலுக்கு உள்ளானவர்தான். இன்று அவர் களின் தீம் பாட்னராக இணைத்து கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள்தான் அதுவரை சீமானாக அறியப்பட்டிருந்த அவரை, "சைமன் செபாஸ்டியன்' என்று பொதுவெளியில் சொன்னவர்கள். அவர்கள்தான் அதுவரை வெறும் விஜய்யாக இருந்தவரை, "ஜோசப் விஜய்'யாக பொதுவெளியில் சொன்னவர்கள். சீமான் சுயநினைவோடு சுயமரியாதையோடு இருக்கும் பொழுது பேசிய பேச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல்தான், பிற்போக்குவாதிகள் அவரை மதச்சாயம் பூசி ஓரம்கட்டப் பார்த்தார்கள். எப்படிப் பார்த்தாலும் சீமான், பெரியாருக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கும் அனைத்து தலைவர்களுமே பெரியாரைப் பின்பற்றியவர்கள்தான். அவருடைய கருத்துக்களை உள்வாங்கி, அவரவர் வழியில் மக்களுக்கு கொண்டுசென்றவர்கள்தான்.
பெரியார் தன் வாழ்க்கையில் இதைப்போல எத்தனையோ வகையான எதிர்ப்பாளர்களை சந்தித்து தன் கருத்துக்களை உறுதியாக மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவர் இறந்தபின்னும், அவர் கருத்துகளே அவருக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் நின்று களமாடிக்கொண்டிருக்கிறது என்பதுதான். காரணம் பெரியார் தன் சுயலாபத் திற்காகவோ, தன் புகழைக் கூட்டிக்கொள் வதற்காகவோ அல்லது பணத்திற்காகவோ, பதவிக்காகவோ பேசியவர் அல்ல. சமூகநீதி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாளின் இறுதிவரை போராடியவர். அந்த அறமும் நேர்மையும்தான் இன்று வரை அவருக்கு அரணாக நிற்கிறது.
இந்த உலகம் எத்தனையோ புரட்சி யாளர்களை, தலைவர்களைப் பதிவு செய்திருக்கிறது. அப்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள் பெரும்பாலும், தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் கீழ் நிலையை மேம்படுத்த, தன் சமூகத்திற்கான உரிமையை நிலைநாட்ட... அந்தந்த சமூகத்தில் இருந்து புறப்பட்டு வந்தவர்களாகவே இருக் கிறார்கள்.
பெரியாரைப் பொறுத்தவரை ஆணாகப் பிறந்து, பெண்களுக்காக குரல் கொடுத்தவர். பெரும் செல்வந்தராகப் பிறந்து, ஏழை மக்களுக்காக குரல் கொடுத்தவர். ஒரு முன்னேறிய சமூகத்தில் பிறந்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். இப்படி எல்லா தளங்களிலும் எதிர்நிலையில் இருந்த ஒருவர், தங்களுக்காக குரல் கொடுத்தார். குரல் கொடுத்ததோடு மட்டுமல்லா மல்... களத்தில் இறங்கி கல்லடியும், சொல்லடியும் வாங்கி தன் இறுதி மூச்சுவரை தன் கொள்கையில் சிறிதும் பின்வாங்காமல் கள மாடினார் என்பதற்காகவே இந்த தமிழ்ச் சமூகம் அவரை "தந்தை' என்று அழைத்துக் கொண்டாடுகிறது.
சீமானைப் போல இன்னும் எத்தனை பேர் வந்து அவதூறு சேற்றை அள்ளி வீசினா லும், அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் பிரகாசத்தை எள்ளளவும் குறைத்துவிட முடியாது என்பதுதான் உண்மை!